உக்ரைன் ராணுவ தளபதி பதவி பறிப்பு: அதிரடியில் அதிபர் ஜெலன்ஸ்கி!

உக்ரைன் ராணுவ தளபதி பதவி பறிப்பு: அதிரடியில் அதிபர் ஜெலன்ஸ்கி!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது நடத்தி வரும் போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதியுடன் ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. ஆனாலும், இந்தப் போர் முடிவுக்கான எந்த சமரசப் பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை என்பதால் தொடர்ந்து இரு நாடுகளிடையே போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகள் சிலவும் நிதியுதவி மற்றும் ஆயுதங்கள் அளித்து வருகின்றன. அதேநேரத்தில், இந்தப் போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. இச்சூழலில், `உக்ரைனில் இருந்து ரஷ்ய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும்' என சமீபத்தில் ஐ.நா. பொது சபையில் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 141 நாடுகள் ஆதரவாகவும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா உள்பட 32 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.

இது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் உக்ரைன் அரசு இந்தப் போரை நினைவுகூரும் வகையில், புதிய தபால் தலை ஒன்றை வெளியிட்டு ரஷ்யாவை கேலி செய்துள்ளது. அதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஜூடோ போட்டியில் ஒரு சிறுவனிடம் தோற்பதாக, அதாவது அவரை அடித்து கீழே சாய்ப்பதாக, தபால் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது, உக்ரைன் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் நாட்டு ராணுவ தளபதியான எட்வர்ட் மிகளோவிச் மோஸ்க்ளோவை, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி எவ்வித முன்னறிவிப்பவும் இன்றி இன்று காலை பதவியில் இருந்து நீக்கியுள்ளார். இந்தப் பதவி பறிப்புக்கான எந்த காரணமும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் உக்ரைன் அரசு நிர்வாகம், ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பாக பல அரசு அதிகாரிகளை கடந்த சில மாதங்களாகவே கையும் களவுமாக பிடித்து பதவி நீக்கம் செய்து வருகிறது. அந்த வரிசையில்தான் இவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. ஆனாலும், ராணுவத் தளபதி, மோஸ்க்ளோவ் எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை என அந்நாட்டுத் தகவல்கள் கூறுகின்றன. இவர், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். ராணுவ தளபதி மீது அதிபரின் இந்த அதிரடி நடவடிக்கை அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com