"இனி எண்ட ஸ்டேட் கேரளம்.." பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

Pinarayi vijayan
Kerala chief minister
Published on

கேரளாவின் பெயரை கேரளம் என மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கேரளா மாநிலத்தின் பெயரை மலையாள மொழியின் அடிப்படையில் கேரளம் என மாற்ற அம்மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு, கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.

தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், ‘‘இந்த மாநிலம் மலையாளத்தில் கேரளம் என்றே அழைக்கப்படுகிறது. மலையாளம் பேசும் மக்களுக்காக ஒன்றுபட்ட கேரளத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே வலுவாக எழுந்துள்ளது. ஆனால், அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் மாநிலத்தின் பெயர் கேரளா என்றே எழுதப்பட்டது.

எனவே, அரசியலமைப்பின் 3வது பிரிவின் கீழ் கேரளம் என்று திருத்தம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் கேரளா என்று உள்ளதை கேரளம் என மாற்றவும் மத்திய அரசை இந்த சட்டமன்றம் கேட்டுக்கொள்கிறது’’ என வலியுறுத்தினார்.

இந்தத் தீர்மானம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த தீர்மானத்தின் மீது மத்திய அமைச்சரவை ஆலோசனை மேற்கொண்டது. சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய பிரதமர் அலுவலக கட்டிடமான சேவா தீர்த்தத்தில் முதல் முறையாக மத்திய அமைச்சரவைக் கூடி இது குறித்து ஆலோசித்தது. முடிவில், மாநிலத்தின் பெயரை கேரளா என்பதில் இருந்து கேரளம் என மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை அடுத்து, கேரளா (பெயர் மாற்றம்) மசோதா 2026-ஐ, குடியரசு தலைவர், கேரள சட்டப்பேரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பார். கேரள மாநில சட்டப்பேரவையின் ஒப்புதலை அடுத்து, பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து பெயர் மாற்றம் நடைமுறைக்கு வரும்.

கேரளாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில பெயர் மாற்றம் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2023, ஆகஸ்ட்டில் இதேபோன்ற ஒரு தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை ஆராய்ந்த மத்திய உள்துறை அமைச்சகம் அதில் சில தொழில்நுட்ப மாற்றங்களை பரிந்துரைத்தது. அதன் காரணமாக, 2024-ல் கேரள சட்டப்பேரவையில் புதிதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com