
நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (வயது 87) நேற்று இரவு முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்த நிலையில், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. 30 ஆண்டுகளுககும் மேலாக தமிழ் சினிமாவில் வலம் வரும் வடிவேலு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். சமூக வலைதளங்களில் மீம்ஸ் உருவாக்குவதற்கு பொருத்தமான டெம்ப்ளேட்டாக அவரது புகைப்படங்கள்தான் பெரிதும் கைகொடுத்து வருகின்றன.
இந்நிலையில், மதுரை விரகனூரில் வசித்து வந்த வடிவேலுவின் தாயார் 87 வயதான சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வடிவேலுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி ஐராவதநல்லூரில் உள்ள வடிவேலுவின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வடிவேலுவிற்கு ஆறுதல் கூறினார்.
மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.