

திமுக கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறி விட்டதாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் தொடர முடியாத நிலை உள்ளது என்று கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான தவெகவுடன் கூட்டணி அமைத்ததையடுத்து, திமுக 'இந்தியா' கூட்டணியில் இருந்தும் விலகியது. இதைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடிக்கப் போவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் செயலாளர் வீரபாண்டியன் அவர்கள் அறிவித்துள்ளார்.
தவெக அரசுக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வரும் நிலையில் திமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலகியது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு கூடும். அதில் எந்த ஜனநாயக அணியுடன் சேர வேண்டும், யாருக்கு ஆதரவு என்பது குறித்து அப்போதைய சூழலைப் பொறுத்து முடிவெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சி தவெகவுடன் நெருக்கம் காட்டியது திமுகவிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் தேசிய அளவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திலும் திமுக பங்கேற்கவில்லை. தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட தேர்தல் பின்னடைவுக்குப் பிறகு, எதிர்க்கட்சி கூட்டணியில் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகள் மற்றும் புதிய கூட்டணிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவுக்கு வித்திட்டுள்ளன.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் மட்டும் விலகியது. மற்ற கட்சிகளான விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணியிலேயே தொடர்வதாகவும் தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு என்றும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற இயலாது என்று மாநில செயலாளர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் என ஒவ்வொரு கட்சியாக திமுக கூட்டணியில் இருந்து விலகி வருவது தமிழக அரசியலில் பெரும் பேசும் பொருளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.