

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமான முறையில், உதய்பூரில் உள்ள ITC மெமெண்டோஸ் அரண்மனை விடுதியில் நடைபெற்றது. முன்னதாக இந்த திருமணத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்.
இன்று காலை 10:10 மணிக்கு மணமகனின் தெலுங்கு கலாச்சார முறைப்படி திருமணம் நடைபெற்றது. தெலுங்கு கலாச்சாரத்தை தொடர்ந்து மணப்பெண்ணின் குடும்ப பாரம்பரியத்தையும் விட்டுக் கொடுக்காத வகையில், இன்று மாலை நடைபெறும் சடங்குகள் அனைத்தும் குடகு பகுதியை சேர்ந்த கலாச்சார முறைப்படி திருமண சடங்குகள் நடை பெற உள்ளது.
இந்த திருமணத்தின் போது விஜய் தேவரகொண்டாவின் குடும்ப பாரம்பரிய அடையாளமான , பரம்பரை தங்க வளையல்கள் ராஷ்மிகாவிற்கு பரிசாக வழங்கப்பட்டது. இந்த பரிசினை மணமகனின் தாயார் மாதவி , தன் மருமகளுக்கு அணிவித்து மகிழ்ந்தார். பின்னர் நடைபெற்ற திருமண வைபவத்தில் , விஜய் மாங்கல்யம் அணிவிக்கும் நேரத்தில் இருவரும் ஆனந்த கண்ணீர் வடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமணத்திற்கு வருகை தந்த குடும்பத்தினர், நண்பர்கள் , சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உட்பட பலருக்கும் ஆந்திர மற்றும் கர்நாடகாவின் பாரம்பரியமிக்க உணவு வகைகள் தலைவாழை இலையில் பரிமாறப்பட்டது. குறிப்பாக ஹைதராபாத் பிரியாணி வகைகள் மற்றும் குடகு பகுதியை சேர்ந்த உணவுகள் அதிகம் இடம் பெற்றிருந்தன.
கடந்த பிப்ரவரி 24 முதல் உதய்பூரில் இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கின , இந்த கொண்டாட்டத்தில் இரு குடும்பமும் இணைந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு நடைபெற்ற சங்கீத் விழாவில் விஜய் மற்றும் ராஷ்மிகாவின் நெருங்கிய நண்பர்கள், மற்றும் குடும்பத்தினர் இணைந்து இவர்களின் புகழ்பெற்ற சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். இந்த நடன நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்த பின்னர் , அனைவருக்கும் ஜப்பானிய முறைப்படி இரவு விருந்துகள் பரிமாறப்பட்டது.
இன்று திருமணம் முடிந்தவுடன், ஹோட்டலுக்கு வெளியில் காத்திருந்த ஊடகத்தினர் அனைவருக்கும் சிறப்பு இனிப்பு வகைகள் கொண்ட அன்பளிப்பு பெட்டி வழங்கப்பட்டது. அவர்களுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு பெட்டிகளில் திருமண தம்பதியர் இருவரின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இன்று நடந்த திருமணத்தில் குடும்பத்தினர் , மிகவும் முக்கியமான நண்பர்கள் மற்றும் நெருங்கிய திரையுலகினருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
வருகிற மார்ச் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் இவர்களின் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஆந்திராவை சேர்ந்த திரையுலக சூப்பர் ஸ்டார்கள் , கோலிவுட் , பாலிவுட் , சாண்டல்வுட்டை சேர்ந்த திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.