

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திமுக கூட்டணி , அதிமுக கூட்டணி பெரிய மலைகளுடன் மோதி தன்னுடைய பலத்தை நிரூபிக்க இருக்கிறது நடிகர் விஜய் தலைமையிலான தவெக . கடந்த தேர்தலில் இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் .
தமிழ்நாடு முழுவதும் தனித்துப் போட்டியிடும் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாகவே தனது கட்சியின் வேட்பாளர்கள் அனைவரையும் ஆதரித்து தீவிர பரப்புரையிலும் ஈடுபட்டு வருகிறார். மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, காரைக்குடி என பல பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மற்றும் ரோட்ஷோக்களை மேற்கொண்டு வந்தாலும் அவரைக் காண வரும் கட்டுக்கடங்காத ரசிகர்களின் அதீத உற்சாகத்தால் சில இன்னல்களையும் சந்தித்து வருகிறார்கள்.
விரைவில் சென்னை முழுவதும் சுற்றுபயணம் வர இருப்பதாக தகவல்கள் வரும் நிலையில் நேற்று தான் போட்டியிட இருக்கும் பெரம்பூர் தொகுதி பணிமனைக்கு சென்று பார்வையிட்டார்.பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பணிமனை முன், பெண்களுடன் இணைந்து, தன் கட்சியின் 'விசில்' சின்னத்தை விஜய் கோலமாக போட்டார்.கட்சிப் பெண்களுடன் விசில் கோலத்தை வரைந்து வாக்கு சேகரித்தது வைரலாகியுள்ளது.
எனினும் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தும் பிரச்சாரத்தை ரத்து செய்வது தொடர்கிறது. இந்த வரிசையில் விஜய் நாளை கடலூரில் மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் ரத்து என்ற தகவல் வெளியாகியுள்ளது .ரோடு ஷோவிற்கு அனுமதி வழங்கப்படாததால் நாளைய பிரச்சார கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தவெக தரப்பில் காரணம் சொல்லப்படுகிறது.
எனினும் கடந்த 9 மற்றும் 11ஆம் தேதிகளில் பரப்புரை செய்ய காவல்துறை அனுமதி வழங்கியும் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை கடலூரில் விஜய் பிரச்சாரத்திற்கு மூன்று முறை அனுமதி வழங்கப்பட்ட போதிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது கடலூர் ரசிகர்களிடையே விஜயை காண முடியவில்லை மற்றும் அவரது பரப்புரையை கேட்க முடியவில்லை என்ற கவலையை அளித்துள்ளது.
தேர்தல் களத்தில் தாங்கள் வெற்றி அடைவதற்காக தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து இடங்களிலும் பரபரப்பான பரப்புரைகள் சென்று கொண்டிருக்க தவெக கட்சியினர் அவ்வப்போது தங்கள் பிரச்சாரத்தை ரத்து செய்து கொண்டிருப்பது அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சற்று தளர்வைத் தரும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 18) பெரம்பூரில் விஜய் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்து, பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டது என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.