இப்போதாவது தூக்கத்தில் இருந்து எழுவாரா முதல்வர்? நாங்குநேரி கொடூரத்திற்கு எதிராக விஜய் சரமாரி அட்டாக்..!
திருநெல்வேலி நாங்குநேரி மாவட்டத்தில் உள்ள பெரும்பத்து கிராமத்தில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த ஒன்பது பேர் கொண்ட கும்பல் டீக்கடையில் நின்றவர்கள் மற்றும் சாலையில் சென்றவர்களை சரமாரியாக வெட்டி தாக்கியது தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. நெல்லை நாங்குநேரி அருகே நேற்று பைக்குகளில் வந்த கும்பல் தாக்கியதால் இரண்டு பேர் உயிரிழப்பு என்று வரும் தகவல்கள் வேதனை தருகிறது.
பெரும்பத்து கிராமத்திற்கு பைக்குகளில் வந்த கும்பல் கண்ணில் தென்பட்டவர்கள் எல்லாம் வெட்டிய கொடூர தாக்குதலால் வட மாநில தொழிலாளி மற்றும் பெரும்பத்து கிராமத்தைச் சேர்ந்த ஜான் என்பவர் தற்போது உயிரிழந்தனர். குறிப்பாக டீக்கடை அருகே நின்றவர்களை குறி வைத்து கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு அந்த கும்பல் தப்பியுள்ளது. தாக்குதலில் அலறி ஓடிய நாங்குநேரி மக்கள் கும்பலைப் பிடிக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு பேரைப் பிடித்து நாங்குநேரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் குறித்து பல்வேறு கட்சியினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
நாங்குநேரி துவங்கி தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது திமுக அரசு ? தொடர்ந்து தென் மாவட்டங்களை பதட்ட நிலையிலே வைத்திருக்க வேண்டும் என்பதுதான் திமுக அரசின் எண்ணமா - அதிமுக
இதே போல் தவெக கட்சித் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் நாங்குநேரி சம்பவத்துக்கு தனது கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இது தற்போது அனைவரிடமும் வைரலாகி வருகிறது.
விஜய் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவு..
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர
வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான
செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன்.
உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?
இந்தியாவின் டாப் மாநிலத்தில்
காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே?
நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா?
போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா?
பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?
மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி என பதிவிட்டுள்ளார்.

