இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு பிரிஜ் பூஷன் ஆதரவாளர் சஞ்சய் சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமது கேல்ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை திருப்பித் தருவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு மல்யுத்த வீராங்கனை வினீஷ் போகத் கடிதம் எழுதியுள்ளார்.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வென்ற வீரேந்திர சிங் யாதவ். இருவரும் சஞ்சய் சிங் மல்யுத்த வீர்ர்கள் கூட்டமைப்புக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்மஸ்ரீ விருதுகளை திருப்பிக் கொடுத்துள்ள நிலையில் வினீஷ் போகத்தும் அவர்களுடன் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா மற்றும் அர்ஜுனா விருதை திருப்பித் தருகிறேன் என்று தமது முடிவை பகிரங்கப்படுத்தினார்.
இந்திய மல்யுத்த வீர்ர்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்களை முன்வைத்தனர். குறிப்பாக போகத், மாலிக் மற்றும் புனியா உள்ளிட்டோர் பிரிஜ் பூஷனுக்கு எதிரான போராட்டத்தில் குதித்தனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கியதற்காக வினீஷ் போகத்துக்கு நாட்டின் 2 வது உயரிய விருதான அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. பின்னர் 2020 இல் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
பிரிஜ் பூஷன் ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர்களை தங்கள் விருதுகளை திருப்பிக் கொடுத்துள்ள போதிலும், சஞ்சய் தேர்வு செல்லாது என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமருக்கு வினீஷ் போகத் எழுதியுள்ள கடிதத்தில், “நான் வினீஷ் போகத். உங்கள் வீட்டு மகள். கடந்த ஒருவருடமாக என்னுடைய நிலையை உங்களுக்கு விவரிக்க விரும்புகிறேன்.
2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் சாக்ஷி மாலிக் பதக்கம் வென்றதை அடுத்து உங்கள் அரசு அவரை “பேட்டி பச்சாவோ பேட்டி பதாவ்” கோஷத்தின் விளம்பர தூதராக அறிவித்தது. இதை அறிவித்தபோது நாட்டில் உள்ள பெண் விளையாட்டு வீர்ர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பிரிஜ்பூஷன் தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியில், “மல்யுத்த வீராங்கனைகளுக்கு என்னால் சில தொல்லைகள் ஏற்பட்டது உண்மைதான்” என்று கூறியதை பிரதமர் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனிடையே தனது ஆதரவாளர் சஞ்சய் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து மல்யுத்தம் பற்றி பேசுவதிலிருந்து விலகி இருப்பதாக பிரிஜ் பூஷன் கூறினார்.
பிரிஜ்பூஷன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் சொல்ல வேண்டியதை நேற்றே கூறிவிட்டேன். மல்யுத்தத்திலிருந்தும் அது தொடர்பான அரசியலிலிருந்தும் நான் விலகி நிற்க விரும்புகிறேன். மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தாலும் மல்யுத்தம் பற்றி அவரிடம் பேசமாட்டேன். நான் எனது வேலையைச் செய்வேன். சஞ்சய் சிங் அவரது பணியைச் செய்வார். மல்யுத்தம் தொடர்பான விவகாரம் இனி அரசுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கும்தான். இதில் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.