WhatsApp  சர்வதேச மோசடி அழைப்பு விவகாரம். மத்திய அரசு அதிரடி உத்தரவு.

WhatsApp சர்வதேச மோசடி அழைப்பு விவகாரம். மத்திய அரசு அதிரடி உத்தரவு.

Published on

மோசடி அழைப்பு விடுக்கும் கணக்குகளை உடனடியாக தடை செய்யக்கோரி வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

சமீப காலமாகவே இந்திய மக்களுக்கு வெளிநாட்டு எண்களில் இருந்து வரும் வாட்ஸ் அப் அழைப்புகள் அதிகரித்து வருகிறது. அதாவது, சர்வதேச எண்களைப் பயன்படுத்தி வாட்ஸ் அப் அழைப்பு வாயிலாக, பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதுபோல் முன்பின் தெரியாத நபர்களிடமிருந்தோ அல்லது புது வகையான எண்களிலிருந்தோ வரும் அழைப்புகளை யாரும் எடுக்க வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

இதுபோன்ற அழைப்புகள் மூலமாக பயனர்களின் தனி விவரங்களைக் கேட்டறிந்து, அவர்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகவே பணத்தை திருடுவதற்காக முயற்சி செய்து வருகிறது ஒரு கும்பல். இதை எதிர்த்து நடவடிக்கை எடுக்கும் விதமாக, மத்திய அரசானது தவறான செயல்களில் ஈடுபடும் கணக்குகளை தடை செய்யுமாறு வாட்ஸ் அப் நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளது.  

குறிப்பாக கென்யா, வியட்நாம், இந்தோனேஷியா, எத்தியோப்பியா மற்றும் பிற சர்வதேச நாடுகளின் எண்களிலிருந்து அழைப்புகள் வருவதாக அதிகபடியான புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சஞ்சார் சாதி இணையதளத்தை அறிமுகப்படுத்திய போது பேசியதாவது, "இதுவரை இந்தியாவில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 36 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு whatsapp நிறுவனமும் ஒத்துழைப்பைத் தருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாட்டு அழைப்புகள் மூலமாக மோசடி செயல்களில் ஈடுபடும் கணக்குகளை பாரபட்சம் இன்றி உடனடியாக தடை செய்யவும் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக" அவர் கூறியுள்ளார்.

உங்களுடைய வாட்ஸ் அப் எண்ணுக்கு சர்வதேச எண்களிலிருந்து அழைப்பு வந்தால், அந்த அழைப்பானது உண்மையிலேயே வெளிநாட்டில் இருந்து தான் வருகிறது என நம்ப வேண்டாம். உள்ளூரில் இருந்து கொண்டே, சர்வதேச எண்களைப் பயன்படுத்தி வாட்ஸ் அப் வழியாக அழைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எனவே மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com