திமுகவின் தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் நடைமுறைகள் இன்று குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது .தகுதியான பயனாளிகளின் பட்டியலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடைகள் மூலம் நேரடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிதித்துறை, வருவாய்த்துறை, சமூகநலத்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. தலைமைச்செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நடைமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம், சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியும் மகளிர் என பல்வேறு வகைகளில் தங்களது விலை மதிப்பில்லா உழைப்பை வழங்கி வரும் பெண்கள் 'மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தால் பயன் பெறுவர்" என்று ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறி இருக்கிறார் . இந்த ‘மகளிர் உரிமைத் தொகை’ வழங்கும் திட்டத்திற்காக, இந்த நிதி நிலை அறிக்கையில் ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் குறிப்பிடத் தக்கது