‘யாரை சேர்த்தாலும் சேர்ப்போம்; இவர்களை மட்டும் சேர்க்க மாட்டோம்’ ஜெயக்குமார் காட்டம்!

‘யாரை சேர்த்தாலும் சேர்ப்போம்; இவர்களை மட்டும் சேர்க்க மாட்டோம்’ ஜெயக்குமார் காட்டம்!

னைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் தங்கள் தவறை உணர்ந்து கட்சி தலைமையிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து மீண்டும் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம்’ என அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், “அதிமுகவில் ஒருவரை இணைப்பது குறித்து பொதுச்செயலாளர்தான் முடிவெடுப்பார் என்பது அதிமுகவில் முன்பிருந்தே இருக்கிறது. அதன் அடிப்படையில்தான், மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்துவிட்டு அதிமுகவில் இணைந்து கொள்ளலாம் என அதிமுக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த மன்னிப்புக் கடிதம் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோருக்குப் பொருந்தாது. மற்றவர்கள் யார் வந்தாலும் நாங்கள் கட்சியில் இணைத்துக்கொள்வோம்” எனக் கூறி இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து பேசிய அவர், “அமைதியை ஏற்படுத்தித் தருவது ஒரு அரசாங்கத்தின் கடமை. ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் அதிலிருந்து பின்வாங்கிவிட்டார். ஒரு பொம்மை முதலமைச்சரை தமிழ்நாடு பெற்றிருப்பதால், சர்வசாதாரணமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து, அத்துமீறல், அநியாயம் போன்றவை தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சியில் மக்களின் பாதுகாப்பு, நிம்மதி போய்விட்டது. மக்களின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை.

இராயபுரம் பகுதியில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அப்பகுதி மக்களுக்கான குடியிருப்பில் வேறு பகுதி மக்களை குடியமர்த்துவதுவது முறையான செயல் அல்ல. இதற்காக ஏழை மக்களிடம் ஐந்து லட்ச ரூபாய் கேட்பதும் சரியல்ல. ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் மாத வாடகை வசூலிக்கப்பட்டதைப் போலவே வசூலிக்கலாம். அதிமுகவில் இருந்து திமுகவுக்குச் சென்று தற்போது அமைச்சராக இருக்கும் முத்துசாமி மிகவும் சீனியர். அவரை மதுபானம் விற்கவைத்திருக்கிறார்கள். இதைப் பார்ப்பதற்கே வருத்தமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்றைக்கும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாகப் பெறப்படுகிறது.

சமீபத்தில் மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி துறை சார்ந்த ஆலோசனையை நடத்தி இருக்கிறார். அதில், காலையில் டாஸ்மாக் கடையை திறப்பது குறித்து ஆலோசித்திருப்பதாகக் கூறுகிறார். காலையில் டாஸ்மாக் கடையைத் திறந்தால் கட்டட வேலைக்குச் செல்பவர்கள் முதற்கொண்டு பலரும் மது அருந்திவிட்டு வேலைக்குச் சென்றால் அவர்களது குடும்பம் விளங்குமா? இதுதவிர, பாக்கெட்டுகளில் மது விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் கூறுகிறார் அமைச்சர். பாக்கெட்டுகளில் மதுவை ஒருவர் வாங்கிச் சென்றால் அதை அதிகப்படியாக அருந்த வாய்ப்புகள் உள்ளது” எனக் கூறி இருக்கிறார்.

மேலும் பேசிய அவர், “பாஜக கூட்டியிருக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்வார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணிக் கட்சிகள் எங்களுடன் இணைந்துவிடுவார்கள்” எனவும் கூறி உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com