

தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொறுப்பேற்ற போதே, அவருடன் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். சமீபத்தில் விஜய் உட்பட 9 அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று 23 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இன்று பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களில் 3 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் தவெக அரசு அமைச்சரவையில் தற்போது 4 பெண்கள் அமைச்சராக பதவி ஏற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் தற்போது 19 மாவட்டங்களைச் சேர்ந்த எந்த எம்எல்ஏ-வுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
தமிழக அமைச்சரவையில் மொத்த 35 அமைச்சர்கள் இடம் பெற வேண்டும். தமிழக முதல்வர் உட்பட தற்போது 33 அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்ட நிலையில், மீதம் 2 அமைச்சர்கள் மட்டுமே பதவி ஏற்க வேண்டிய சூழல் உள்ளது.
இந்நிலையில் கூட்டணி கட்சிகளான விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவியை வழங்க தவெக முன்வந்துள்ளது. இருப்பினும் இந்த இரு கட்சிகளும் ஆலோசனைக்குப் பிறகு தங்கள் முடிவை அறிவிப்போம் என தெரிவித்துள்ளன. இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாது என்றே தெரிகிறது.
தற்போதைய அமைச்சரவையில் சென்னையில் மட்டும் அதிகபட்சம்க 7 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர். அடுத்தபடியாக நாமக்கல் மாவட்டத்தில் 3 அமைச்சர்களும், காஞ்சிபுரம், ஈரோடு, கோவை, தூத்துக்குடி, மதுரை மற்றும் விருதுநகர் விழுப்புரம் மாவட்டங்களில் தலா 2 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். திருச்சி, கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா 1 அமைச்சரும் பதவியேற்று உள்ளனர்.
தற்போது அமைச்சராக பதவி ஏற்றுள்ள தவெக எம்எல்ஏக்களில் கிட்டத்தட்ட 16 பேர் (அதாவது 50%) விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி, கரூர், பெரம்பலூர், நாகை, தேனி, நெல்லை, திருவண்ணாமலை, தென்காசி, திருவாரூர், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர் மற்றும் தர்மபுரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் ஒரு எம்எல்ஏ-வுக்கு கூட அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட 50% மாவட்டங்களில் ஒரு அமைச்சர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.