பொங்கல் பரிசுத் தொகை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின், இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்க தொகை வழங்கப்படும் . அதனை வழங்குவது குறித்து இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ஆண்டுதோறும் வேட்டி, சேலை, பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். அதனுடன் பொங்கல் வைக்க தேவைப்படும் தேவையான அரிசி, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்களுடன் கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கியது.
இந்நிலையில், 2023 பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். போன வருடம் வழங்கிய பொங்கல் தொகுப்பு பொருட்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் சமூக வலைத்தளங்களில் வந்ததை தொடர்ந்து பிரச்சனைகளை சரி செய்யவே இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில். பொங்கல் பரிசுத் தொகையாக குடும்ப அட்டைதாரருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆலோசனை கூட்டத்திற்கு பின் பொங்கல் தொகுப்பு மற்றும் பரிசுத் தொகை குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.