வருமான வரி செலுத்த கடைசி நாள் நீட்டிக்கப்படுமா? அரசு முக்கிய அறிவிப்பு!

வருமான வரி செலுத்த கடைசி நாள் நீட்டிக்கப்படுமா? அரசு முக்கிய அறிவிப்பு!

டப்பு நிதியாண்டான 2022 – 23ம் ஆண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி இம்மாதம் (ஜூலை) 31ம் தேதி ஆகும். இதற்கு இன்னும் சுமார் 15 நாட்களே இருக்கும் நிலையில், பல லட்சம் பேர் இன்னும் தங்களது வருமான வரியை தாக்கலை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பலரும், ‘இன்னும் இரண்டு வாரம் இருப்பதால் பொறுமையாகத் தாக்கல் செய்துக்கொள்ளலாம்’ என்றும், இன்னும் சிலர், ‘வழக்கம்போல் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் கடைசி நாளை அரசு நீட்டிக்கும்’ என்று எதிர்பார்த்தும் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், வருமான வரித் தாக்கலை செய்யும் கடைசி தேதியை நீட்டிக்கும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை என்று வருவாய்துறை செயலர் சஞ்சீவ் மல்ஹோத்ரா தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், "வருமான வரித் தாக்கலை செய்யும் கடைசி தேதியை நீட்டிப்பதற்கு பரிசீலனை எதுவும் இல்லை. வருமான வரி செலுத்துவோர் அனைவரும் உடனே வருமான வரித் தாக்கல் செய்துவிட வேண்டும் என்பதுதான் எனது அறிவுரை. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் வருமான வரித் தாக்கலை செய்யும் கடைசி தேதி நீட்டிக்கப்பட மாட்டாது. ஆகவே, வருமான வரித்தாக்கல் செய்யும் அனைவரும் விரைவாக அதைச் செய்துவிடுவது நல்லது" என்று தெரிவித்து இருக்கிறார்.

வருமான வரித் துறை வெளியிட்டிருக்கும் தகவலின்படி, கடைசி தேதிக்குப் பிறகு வருமான வரியைத் தாக்கல் செய்தால் அதற்காக அபராதமாக 5000 ரூபாய் செலுத்த நேரிடும். பொதுவாகவே, பெரும்பாலானோர் கடைசி நேரத்தில்தான் தங்களது வருமான வரித் தாக்கலைச் செய்வார்கள். இதனால் வருமான வரி இணையதளத்தின் செயல் வேகம் குறைந்திருக்கும். சில சமயங்களில் தொழில்நுட்ப கோளாறுகளும் ஏற்பட்டு வருமான வரியை தாக்கலை செய்ய முடியாமல்கூட போகலாம். இதனால், நீங்கள் கடைசி தேதிக்குள் வருமான வரித் தாக்கலை செய்யாமல் போவதற்கான வாய்ப்பு நிறைய உண்டு. ஆகவே, எதையும் எதிர்பார்த்துக் காத்திருக்காமல், உடனே வருமான வரித் தாக்கல் செய்து, தேவையில்லாத அபராதத்தைத் தவிர்ப்பதோடு, வீணான பதற்றத்தையும் தவிர்ப்பது நல்லதுதானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com