முதுமலையில் புலி தாக்கி பெண் பலி

முதுமலையில் புலி தாக்கி பெண் பலி

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. முகாம் பின்பகுதியில் மாரி(50) என்ற பழங்குடியின பெண் புலி தாக்கி உயிரிழந்துள்ளார். நேற்று மாலை முதல் மாரி காணாமல் போன நிலையில் இன்று வனப்பகுதியில் இறந்த நிலையில் இருந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்றுள்ள வனத்துறையினர் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வனத்துறையினர் புலியின் கால்தடங்களை வைத்து ஆய்வு நடத்தி, வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் வேட்டை தடுப்பு காவலரை புலி தாக்கியது குறிப்பிடத்தக்கது.'

 தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமின் பின்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் வசித்து வருபவர் மாரி. நேற்று வழக்கம் போல விறகு எடுக்க வெளியில் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தினர், வனப்பகுதிகளில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை அடர்ந்த வனத்திற்குள் பெண் ஒருவர் இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அவ்வழியே சென்ற ஒருவர் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியான அவர் உடனடியாக ஊருக்குள் ஓடி வந்து தகவல் தெரிவித்தார். மேலும் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையினரும், பொதுமக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டனர். அப்போது அது மாயமான மாரி என்பது தெரியவந்தது.

அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து அறிய வனத்துறையினர் அவரது உடலை ஆய்வு செய்தனர். அப்போது அவரது உடலில் புலி தாக்கியதற்கான காயங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

வனத்திற்குள் சென்ற மாரியை புதர் மறைவில் மறைந்திருந்த புலி தாக்கி கொன்றுள்ளது. பின்னர் அவரது உடலை அடர்ந்த காட்டுக்குள் இழுத்து சென்று, மாரியின் கால் பாகங்களை மட்டும் தின்று விட்டு உடலை அங்கேயே போட்டு விட்டு சென்றுவிட்டது வனத்துறை விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் புலியின் நடமாட்டம் இருக்கிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர். புலி தாக்கி பெண் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தெப்பக்காடு பகுதியில் வேட்டை தடுப்பு காவலர் மாதன் என்பவரை புலி தாக்கியதில் அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது புலி தாக்கி பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பழங்குடியின கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இரண்டு பேரை தாக்கிய புலியை உடனே கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com