ஆறு மாதங்களில் 5406 ஆன்லைன் மோசடி வழக்குகளா?

ஆறு மாதங்களில் 5406 ஆன்லைன் மோசடி வழக்குகளா?

ங்கி மோசடி, பண மோசடி, நிதி நிறுவன மோசடி என தினம்தோறும் ஏகப்பட்ட மோசடிகள் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த 'லோக்கல் சர்க்கிள்' என்னும் ஆய்வு நிறுவனம், இந்தியாவில் நடந்துவரும் ஆன்லைன் மோசடிகள் குறித்த சர்வே ஒன்றை நடத்தியுள்ளது. 

இந்த ஆய்வில் மொத்தம் இந்தியாவிலுள்ள 331 மாவட்டங்களைச் சேர்ந்த 32,000 குடும்பத்தினர் பங்கு பெற்றனர். பங்கு பெற்றவர்களில் 66 சதவீதம் ஆண்கள், 34 சதவீதம் பெண்களாவர். ஆய்வறிக்கையின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் ஆய்வில் பங்கேற்றவர்களில் 39 சதவீதத்தைச் சேர்ந்த குடும்பத்திலுள்ள ஏதோ ஒரு நபர், ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளன. மேலும் இந்த ஆய்வில் 23 சதவீதம் பேர் டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் மோசடியில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏடிஎம் மோசடியில் 10% பேரும், வங்கிக் கணக்கு மோசடியில் 10% பேரும் சிக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

13% இணையத்தில் ஏதாவது வாங்கும் போதோ விற்கும் போதோ மோசடி வலையில் சிக்கி இருக்கிறார்கள். மேலும், 24 சதவீதம் பேர் இணையத்தில் தாங்கள் இழந்த பணத்தை மீண்டும் பெற்றுள்ளனர். இதுவரை 70% பேருக்கும் மேல் மோசடி நடந்ததற்காக எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. பணத்தைத் திரும்ப பெற்றவர்களில் 18 சதவீதம் பேர் மோசடி குடித்து அந்த நிறுவனத்திடமே புகார் செய்து இழந்த பணத்தைப் பெற்றுள்ளனர். 6 சதவீத நபர்கள் நேரடியாகவே சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்து தங்கள் பணத்தை மீட்டுள்ளனர். 

இதுவரை நடந்த 41% ஆன்லைன் மோசடி புகார்களுக்கு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. 17 சதவீத நபருக்கு எப்படி புகார் செய்ய வேண்டும் என்பதே தெரியவில்லை. மேலும் 12 சதவீத நபர்கள் தான் மோசடி செய்யப்பட்டது குறித்து புகார் செய்யக்கூட விரும்பவில்லை. தற்போது நடக்கும் மோசடிகள் கார்டு மூலமாகவும், இணையதளம் வழியாகவும் தான் அதிகம் நடக்கிறது என்கிறார்கள். 

2022-2023 நிதியாண்டின் முதல் பாதியில் மொத்தம் 19,485 கோடி மதிப்புள்ள 5,406 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளது. இதுவே 2021-2022 நிதியாண்டில், 4069 மோசடி வழக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, வங்கி மோசடியின் அளவு குறைந்திருந்தாலும் மற்ற வழிகளான இணையதள மோசடிகளின் அளவு அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளனர். 

எனவே இணைய பயன்பாட்டாளர்கள் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எந்த காரணத்திற்காகவும் உங்களுடைய தனி நபர் விவரங்களை யாருக்கும் பகிர வேண்டாம். குறிப்பாக ஓடிபி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட் விவரங்களை தெரியாத நபருக்கு சொல்ல வேண்டாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com