உலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து. சர்வதேச மகிழ்ச்சி தினத்தையொட்டி வெளியிடப்பட்ட வருடாந்திர அறிக்கை இந்த தகவலைக் கூறியுள்ளது. இதில் மேலும் மகிழ்ச்சியான செய்தி என்ன தெரியுமா? தொடர்ந்து 6-வது ஆண்டாக இந்த பெருமையை பின்லாந்து தக்கவைத்துக் கொண்டுள்ளதுதான்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.), தனிநபர் வருமானம், சமூக ஆதரவு, ஆரோக்கியமான வாழ்க்கை, சுதந்திரம், தாராளத்தன்மை மற்றும் குறைவான ஊழல் ஆகியவற்றின் அடிப்படையில் இதற்கான கணக்கெடுப்பு நடக்கிறது. இதில்தான் பின்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது.
மார்ச் 20 ஆம் தேதி சர்வதேச மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுவதையொட்டி இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகில் உள்ள 150-க்கும் மேலான நாடுகளில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆய்வு நடத்தி ஐ.நா.வின் நிலையான வளர்ச்சிக்கான தீர்வு என்ற அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் டென்மார்க் இரண்டாவது இடத்தையும், ஐஸ்லாந்து மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு 125 இடம் கிடைத்துள்ளது.
கோவிட் காலத்தில் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்பு மூன்றில் ஒரு பங்காக இருந்த போதிலும் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் நோர்டிக் நாடுகளில் (நார்வே, ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து) உயிரிழப்பு குறைவாகவே இருந்தது. மேற்கு ஐரோப்பாவில் ஒரு லட்சத்துக்கு 80 என்ற கணக்கில் உயிரிழப்பு இருந்த நிலையில் நோர்டிக் நாடுகளில் இறப்பு விகிதம் 27 என்ற அளவிலேயே இருந்த்து. இதற்கு காரணம் அங்குள்ள மக்களுக்கு பிறகுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்ததுதான் என்கிறார் இந்த அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான ஜான் ஹெல்லிவெல். இந்த கடுமையான காலகட்டத்தில்கூட எதிர்மறையான எண்ணங்களைவிட நேர்மறையான எண்ணங்களே மக்களிடம் அதிகம் இருந்தது என்கிறார் அவர்.
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று கூறப்பட்டாலும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 125 வது இடமே கிடைத்துள்ளது. அதாவது நேபாளம், சீனா, வங்கதேசம், இலங்கை நாடுகளுக்கு கீழேதான் இந்தியா உள்ளது.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் ரஷியா-உக்ரைன் இடையே போர் நடந்து வருவதால் அந்த இரு நாடுகளும் பட்டியலில்
பின்தங்கியுள்ளது. ரஷியா 72-வது இடத்தையும், உக்ரைன் 92-வது இடத்தையும் பெற்றுள்ளது.