அமெரிக்காவில் வெப்பத்தால் அதிகரிக்கும் தீக்காயம்!

மாதிரி படம்
மாதிரி படம்

மெரிக்காவில் நீடித்துவரும் அதிக வெப்பம் காரணமாக கணிசமானவர்களுக்கு தீக்காய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் அரிசோனா உட்பட்ட மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் இந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று வாரங்களுக்கும் மேல் இங்கு வெப்பநிலை 110 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேலாகவே இருந்துவருகிறது. மாநிலத்தின் தலைநகரான பீனிக்ஸில் 24ஆவது நாளாக தொடர்ந்து 43 டிகிரி செல்சியஸ் என்கிற அளவைத் தாண்டியே வெப்பத்தின் தாக்கம் நிலவுகிறது

தரை வெப்பநிலை கொதிநிலையை விரைவில் அதிகரிக்ககூடும் என்றும் கடும் வெயிலில் இருந்து காத்துக்கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் வானிலை துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

உலோக கார் சீட் பெல்ட் போன்ற சூடான பொருட்களை சில நொடிகள் தொட்டாலோ சாலையின் மீது வெறும் காலால் நடந்தாலோ போதும், கடுமையான தீக்காயம் ஏற்படுகிறது. கருப்பு நிற அஸ்பால்ட்டால் அமைக்கப்பட்ட சாலையில் இருப்பதைவிட, சிறிது நேரம் ஒரு காருக்குள் இருப்பது அதிக வெப்பத்தில் இருந்து காப்பாற்றும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அரிசோனாவில் கோடையில் இப்படியான சில உடல்நலச் சிக்கல்கள் கோடை காலத்தில் வருவது இயல்புதான். இந்த முறை கொஞ்சம் இல்லை மிக அதிகமாகவே இருக்கிறது என அர்த்தம் பொதிந்தபடி சொல்கிறார்கள், மருத்துவத் தன்னார்வலர்கள். இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அரிசோனா தீக்காய மையத்தின் மருத்துவர் கெவின் ஃபோஸ்டர், அங்குள்ள 45 படுக்கைகளும் நிரம்பிவிட்டன என்றும் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சிகிச்சையில் இருப்பவர்களில் கணிசமானவர்கள் முதியவர்கள்; வெயிலில் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாமல் கீழே விழுந்துவிடுகிறார்கள். குழந்தைகளும்கூட விவரம்புரியாமல் தரையில் விழுந்து அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

இவர்கள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், போதைப் பொருள் பயன்படுத்துவோர்தான் பெரும் பிரச்னையாக இருப்பதாகக் கூறுகிறார்கள், மருத்துவர்கள். இவர்கள்தான் நீரிழப்பால் அடிக்கடி ஆங்காங்கே சாலையோர விழுந்து விடுகிறார்கள்.  இவர்களைச் சமாளிப்பது பெரும் சவாலாகத்தான் இருக்கிறது.
இப்போதைக்கு இந்த மையத்தில் 150 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வெப்ப அலை நிவாரண முகாம் எனும் பெயரில், தன்னார்வலர்கள் அரிசோனாவின் பல பகுதிகளிலும் உதவி மையங்களை அமைத்துள்ளனர். இந்தக் கூட்டமைப்பினர் சார்பில் 235 இடங்களில் குளுமை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெப்ப அலையால் பாதிக்கப்படாமல் இருக்க, இந்த மையங்களில் சில மணி நேரத்துக்கு இளைப்பாறலாம்.

நீரிழப்பு ஏற்படாமல் காக்க இந்த மையங்களில் தண்ணீருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நூற்றுக்கணக்கான வீடில்லாத மக்கள் இந்த மையங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.இந்த ஆண்டில் 18 இடங்களில் படுத்து ஓய்வெடுத்துக் கொள்ளவும் தன்னார்வலர்கள் வசதிசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com