ஜன்னல் ஓர சீட்தான் வேண்டும் - அடிதடி, ரகளை... பஸ்ல இல்லீங்க...விமானத்தில்...!

ஜன்னல் ஓர சீட்தான் வேண்டும் -   அடிதடி, ரகளை... பஸ்ல இல்லீங்க...விமானத்தில்...!

பிரேசிலில் ஜன்னல் ஓர இருக்கைக்காக பெண் பயணிகள் இடையே ஏற்பட்ட சண்டையால் விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

பயணத்தின் போது பேருந்திலும், ரயிலிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இடம் ஜன்னல் ஓர இருக்கைத்தான். அதற்கு நிறையக் காரணங்கள் உண்டு.

 பஸ்சில் சீட் பிடிப்பதற்கும், துண்டு போட்டு சீட் பிடித்த இடத்தில் வேறு பயணி அமர்ந்து விட்டதாகவும் அடிக்கடி பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுவதை பார்த்திருப்போம்.

அந்த மாதிரி ஒரு நிகழ்வு விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கைக்காக நடைபெற்றது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விமானத்தின் ஜன்னல் ஒர இருக்கையில் அமர்ந்தபடி பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து நிலத்தையும், கடலையும் பார்க்க யாருக்கு தான் ஆசை இருக்காது.

பிரேசிலின் சல்வேடார் நகரில் இருந்து சா பவுலோ நகரத்திற்கு கோல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. இந்த விமானம் டேக் ஆப் ஆவதற்கு சில நிமிடங்களே இருந்தது. அப்போது விமானத்தில் சில பெண் பயணிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது. 15 பெண் பயணிகளும் தங்களுக்குள் கடுமையாக மோதிக்கொண்டனர். முடியைப் பிடித்து இழுத்தும், ஆடைகளை பிடித்து இழுத்தும் சண்டையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை விலக்கி விடுவதற்கு விமான பணிப்பெண்களும் படாத பாடு பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சண்டை ஏன் நடந்தது என்பது குறித்து விமான பணிப்பெண் ஒருவர் கூறியதாவது:-

விமானத்தின் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து இருந்த ஒரு பெண் பயணியிடம் சக பெண் பயணி ஒருவர் தனது மாற்றுத்திறனாளி மகளுக்காக ஜன்னல் ஓர இருக்கையை விட்டு தருமாறு கேட்டு உள்ளார். ஆனால், அந்த பெண் இருக்கையை தர முடியாது என்று சொல்லிவிட்டர். இதனால், இருவருக்கும் இடையே முதலில் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இரு பெண்களின் குடும்பத்தை சேர்ந்த 15க்கும் மேற்பட்டவர்கள் சண்டையிட தொடங்கினர். இதனால், நாங்கள் தலையிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது" என்றார்.

இந்த சம்பவத்தால் பிற பயணிகளும் கடும் அச்சத்திற்கும், அவதிக்கும் உள்ளாகினர். இந்த சண்டையால் விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் கூறுகையில்,

சண்டையிட்ட அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. விமானத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். பயணிகளின் பாதுகாப்பு கருதியே நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com