”இம்ரான்கான் கொல்லப்படுவார்” - பாகிஸ்தான் அமைச்சர் பேச்சால் சர்ச்சை!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கொல்லப்படுவார் அல்லது நாங்கள் கொல்லப்படுவோம் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷெரீப்) கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ராணா சனாவுல்லா. மறைந்த முன்னாள் பிரதமர் நவா, ஷெரீப்புக்கு மிக நெருக்கமானவர். அவர் இப்போது ஷாபாஸ் தலைமையிலா அரசில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சராக இருக்கிறார்.
பாகிஸ்தான் அமைச்சர் ராணா சனாவுல்லா பேசுகையில், “ பாகிஸ்தானில் ஆளுங்கட்சிக்கு எதிரியாக இம்ரான் கான் செயல்பட்டு வருகிறார். அவர் செல்லும் பாதையால் ஒன்று அவர் கொல்லப்படுவார் அல்லது நாங்கள் கொல்லப்படுவோம். இம்ரான்கான் அரசியலில் பகையை ஏற்படுத்தி வருகிறார். அவர் எங்களை எதிரியாக பார்க்கும்போது நாங்களும் அவரை எதிரியாகவே பார்ப்போம்” என்று பேசியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் கடந்த ஆண்டு ஏப்ரலில் பதவி விலகினார். அவரது தலைமையிலான கூட்டணியிலிருந்து முக்கிய கட்சிகள் பிரிந்து எதிர்க்கட்சியுடன் இணைந்ததால் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இது தொடர்பான வாக்கெடுப்பை சந்திக்கும் முன்னரே அவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்.
இதையடுத்து ஷாபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. இந்த நிலையில் ஆளுங்கட்சிக்கு எதிராக இம்ரான்கான் தொடர்ந்து பேரணி, போராட்டங்களை நடத்தி வந்தார். கடந்த நவம்பர் மாதம் இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நீதித்துறை மற்றும் போலீஸாருக்கு மிரட்டல் விடுத்தது, பிரதமராக இருந்தபோது கிடைத்த பரிசுப் பொருள்களை அரசு கரூவூலத்தில் சேர்க்காமல் தனக்கு சொந்தமாக்கிக் கொண்டது என இம்ரான்கான் மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. எனினும் தெஹ்ரீக் ஏ இன்ஸாப் கட்சி ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தால் நீதிமன்றம் அவரை கைது செய்ய இடைக்காலத் தடைவிதித்தது. இந்த நிலையில் அவர் மீதான வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.