முடிவுக்கு வருகிறதா தாய்லாந்தில் மன்னராட்சி?

முடிவுக்கு வருகிறதா தாய்லாந்தில் மன்னராட்சி?

தாய்லாந்து நாட்டில் பல ஆண்டுகளாக மன்னர் ஆட்சி முறை வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்நாட்டின் தற்போதைய மன்னராக வஜ்ரலாங்கோர்ன் உள்ளார். தாய்லாந்து மன்னராக இருந்த பூமிபோல் அதுல்யதேஜ் கடந்த 2016ம் ஆண்டு உயிரிழந்ததை அடுத்து, அவரது மகன் வஜ்ரலாங்கோர்ன் மன்னராவதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், அவர் தாய்லாந்தின் மன்னர் ஆனார். இந்த நிலையில் 2019ல் வஜ்ரலாங்கோர்ன் தனது காதலிகளுடன் வலம் வரும் புகைப்படங்கள் வெளியாகி தாய்லாந்து மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், நான்காவது மனைவியாக தனது பாதுகாவலரையே வஜ்ரலாங்கோர்ன் மணந்து கொண்டது மேலும் விமர்சனத்துக்கு உள்ளானது. பதவி மற்றும் செல்வத்தை மட்டுமே வஜ்ரலாங்கோர்ன் விரும்புகிறார். மக்களின் நலனில் அவருக்கு அக்கறை இல்லை எனவும் விமர்சிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்நாட்டு மாணவ அமைப்பினர் 2020ல் மன்னர் ஆட்சிக்கு எதிராகவும், ராணுவத்துக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர் சோந்திச்சா ஜாங்க்ரூ. மன்னருக்கு எதிராகப் போராடியதற்காக அவருக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. தற்போது தாய்லாந்தின் முன்னேற்றக் கட்சி சார்பாக மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சோந்திச்சா போட்டியிட இருக்கிறார். இவருடன் மன்னர் ஆட்சிக்கு எதிராகப் போராடிய இன்னும் சிலரும் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளனர்.

இந்தத் தேர்தலுக்காக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் சோந்திச்சா. மன்னராட்சிக்கு எதிராகப் போராடி, தற்போது தேர்தலை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு, மக்களிடம் அதிகரித்து இருப்பதாக ஊடகங்கள் கணிப்பு செய்தி வெளியிட்டுள்ளன. தாய்லாந்தின் மன்னர் மற்றும் ராணுவ ஆட்சி வரலாற்றில் இந்த மாணவ இயக்கங்கள் புதிய நம்பிக்கை விதையை மக்கள் மனதில் விதைத்து வருகின்றனர். எனினும், இந்த மாணவ செயற்பாட்டாளர்களின் பயணம் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்தான் முடிவு செய்யும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com