மார்ச் 15 - உலக நுகர்வோர் உரிமை தினம்!
குளிர்பானத்தில் குப்பை இருந்ததாக சமீபத்தில் செய்தித் தாள்களில் படித்திருப்பீர்கள்தானே? அவ்வளவு ஏன்? உங்களுக்கேகூட இது மாதிரியான அனுபவங்கள் ஏற்பட்டு இருக்கலாம். திரையரங்குகளில் ஏஸி கட்டணம் வசூலித்துவிட்டு அந்த வசதியைப் போதுமான அளவு செய்யாமல் இருப்பது, கடைகளில் தரமற்ற அளவு மற்றும் குறைந்த அளவில் பொருட்களை விற்பது, வாங்கிய பொருட்களில் சேதம் இருப்பது, வங்கி போன்ற பொது நிறுவனங்கள் சேவை அளிப்பதில் மெத்தனம் காட்டுவது, நீங்கள் அளிக்கும் புகார்கள் அலட்சியப்படுத்தப்படுவது போன்றவற்றை அன்றாடம் எதிர்கொண்டிருப்பீர்கள். இதற்கெல்லாம் சரியான முறிவு மருந்துதான் ‘நுகர்வோர் உரிமையும் பாதுகாப்பும்’. அதன் சிறப்புகளைப் போற்றுவதற்காகவே உருவானதுதான் இந்தத் தினம்.
1962ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி அமெரிக்க அதிபரான ஜான் எஃப் கென்னடி, நுகர்வோர் பாதுகாப்புப் பற்றி ஓர் உரை ஆற்றினார். உலக அளவில் நுகர்வோர் குறித்த விழிப்புணர்வு ஊட்டும் உரையாக அது இருந்தது. அதை நினைவுகூரும் வண்ணம் ஒவ்வோர் ஆண்டும் உலக நுகர்வோர் தினம் மார்ச் 15ல் அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்புக்கென 1986ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. கன்ஸ்யூமர் இன்டர்னேஷனல் என்ற அமைப்பு இதை வழிநடத்துகிறது. தற்போது 115 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன.
கருத்தரங்கங்கள், சிறப்புச் சொற்பொழிவுகள், கண்காட்சிகள், தெருமுனைப் பிரச்சாரங்கள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் போன்றவை மூலமாக நுகர்வோருக்கு விழிப்புணர்ச்சியை இந்த நாளில் ஏற்படுத்துகிறார்கள்.
இந்தியாவில் நுகர்வோர் உரிமைகளுக்கான முழக்கம் (Slogan): Your products, your rights. Know your right to consume.