கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை ஆய்வு செய்ய ரஷ்யா தனது முதல் லூனா 25 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
கடந்த நூற்றாண்டுமுதலே நிலவு குறித்த ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. அப்போதிருந்தே அமெரிக்காவும் ரஷ்யாவும் மாறி மாறி விண்ணுக்கு ராக்கெட்டை அனுப்பி வந்தன. அந்த சமயத்தில்தான் முதன்முதலாக மனிதன் நிலவில் கால் வைக்கும் நிகழ்வெல்லாம் நடந்தது. அதன்பிறகு நீண்ட காலமாக நிலவு குறித்த ஆய்வுகள் நடக்காமலேயே இருந்து வந்த நிலையில், சமீப காலமாக நிலவு குறித்த ஆய்வுகளை அனைத்து நாடுகளுமே அதிகரித்துள்ளது. அதாவது உலக நாடுகளின் கவனம் மீண்டும் நிலவின் பக்கம் திரும்பியுள்ளது எனலாம்.
நிலவு குறித்து பல நாடுகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருவதால், வரிசையாக பல விண்கலங்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே ரஷ்யா 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவு குறித்து ஆய்வு செய்ய லூனா 25 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. உக்ரைன் மீதான போருக்குப் பிறகு உலக நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்தியதால், பெரும் சிக்கலை அந்நாடு சந்தித்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு லூனா 25 சாட்டிலைட் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக ரஷ்யா சோவியத் ஒன்றியமாக இருந்தபோது நிலவு குறித்து பல ஆய்வுகளை செய்திருந்தனர். இப்போது 50 ஆண்டுகளுக்குப் பிறகு அதையே ரஷ்யா கையில் எடுத்துள்ளது. அதாவது 1976க்கு பிறகு ரஷ்யா நிலவுக்கு அனுப்பும் முதல் ராக்கெட் இதுவாகும். ஆகஸ்ட் 11 அதிகாலை 2:10 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த லூனா 25, தற்போது வரை திட்டமிட்ட படியே பயணித்துக் கொண்டிருக்கிறது. இது இன்னும் 5 நாட்களில் சந்திரனின் சுற்றுப்பாதையை அடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்ததும் நிலவில் எங்கு தரையிறங்கலாம் என்பது பின்னர் தீர்மானிக்கப்பட்டு, 3 முதல் 7 நாட்கள் வரை இந்த விண்கலம் ஆய்வு செய்யும். அதன் பின்னரே நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கும். இதுவரை நிலவில் தரையிறங்கிய விண்கலங்கள் அனைத்துமே அதன் நடுப்பகுதியில்தான் தரையிறங்கியுள்ளது. ஆனால் ரஷ்யாவின் இந்த விண்கலம் முதல்முறையாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது.
இந்த விண்கலத்திற்கு முன்னதாக இந்தியா அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் இப்போது நிலவைச் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த மாத இறுதியில் அதுவும் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. நம்முடைய சந்திரயான் 3 தான் நிலவின் தென் துருவத்தில் முதன்முறை இறங்கி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், ரஷ்யாவின் லூனா 25 அதை ஓவர்டேக் செய்துவிடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.