அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் சிக்கிய ரகசிய ஆவணங்கள்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் (புலனாய்வுத்துறை அதிகாரிகள்) 12 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இதில் 6 ரகசிய அரசு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்றார். ஒபாமா அதிபராக இருந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டுவரை ஜோ பைடன் துணை அதிபராக இருந்துள்ளார். அவர், அந்த பதவியில் இருந்தபோது சில முக்கிய ஆவணங்களைத் திருடி வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமெரிக்க அரசின் புலனாய்வுத்துறை அதிகாரிகள், ஜோ பைடனின் டெலாவர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி ரகசிய ஆவணங்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். எனினும் அந்த ஆவணங்களில் என்ன இருந்தது என்பது தெரிவிக்கப்படவில்லை.
இது தொடர்பாக விசாரிக்க ராபர்ட் ஹர் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து அமெரிக்க அட்டார்னி ஜெனரல் மெரிக் கார்லாண்ட் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் வீட்டில் நடந்த அதிரடி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு ஜோ பைடன் தயாராகி வரும் நிலையில் இந்த சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பைடனுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாம் தவறு ஏதும் செய்யவில்லை என்றும் தவறுதலாக இந்த ஆவணங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்றும் பைடன் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு வாஷிங்டனில் அவரது அலுவலகத்திலிருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இப்போது அவரது டெலாவர் வீட்டில் ஆவணங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனையின்போது ரகசிய ஆவணங்களுடன் பைடன் எழுதிய சில குறிப்புகள் அடங்கிய காகிதங்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். நீதித்துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த சோதனை நடைபெற்றது.