சீனாவில் எழுந்திருக்கும் சிக்கல்

சீனாவில் எழுந்திருக்கும் சிக்கல்

சீனாவில் ஒரே ஆட்சிதான் உண்டு. அங்கு ஆட்சியாளர்கள் மாறலாமே தவிர, அரசின் திட்டம், கொள்கை மாறாது. இதனாலும் பலகோடி மக்கள் ஊழியர்களாய் கிடைப்பார்கள் என்பதாலும் உலக நாடுகளின் விருப்பமான முதலீட்டு நாடு சீனா. 

முதலீட்டுக்கு உத்திரவாதம், அரசின் பாதுகாப்பான பொருளாதார கொள்கைகள், இந்த யூனியன் இம்சைகள், போர்குரல்கள், சமத்துவ சல்லிகள், போனஸ் பிரச்சினை , வேலை நிறுத்தம் என எதுவும் இல்லாததால் லாபம் கொழிப்பதாலும் உற்பத்தி இடைவிடாது நடப்பதாலும் முதலீட்டாளர்களுக்கு சீன தேசம் ஒரு சொர்க்க பூமிதான். சீனாவில் 1990களில் ஏற்பட்ட பொருளாதார மயமாக்கலுக்குப் பிறகு மேலும் வளர்ந்து ஏகப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வலுவா நாடானது சீனா. கோடிக்கணக்கான மக்கள் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றார்கள். 

1975ல் மாவோ செய்த அந்த திருத்தத்தை ஜி ஜின்பிங் அப்படியே இன்னும் தொடர சீன பொருளாதாரம் சீற தொடங்கியது.

உண்மையில் அங்கு கம்யூனிசமும் இல்லை.... தொழிலாளர் நலனுமில்லை, மாறாக நாட்டுக்கு எது நலமோ அதை செய்கின்றார்கள். 

சீனாவில் எப்பொழுதாவது மக்கள் கொந்தளிப்பு வரும், அவை சில நேரம் மிகப்பெரிய மிரட்டலாக உருவெடுக்கும். அப்படி இப்பொழுது பெரிய மக்கள் கிளர்ச்சியில் சிக்கியுள்ளது சீனா. நினைவிருக்கிறதா 1989ல் எழுந்த மாணவர்கள் புரட்சியும் அடக்குமுறையும்? அதே மாதிரியான சிக்கல் இப்போது எழுந்துள்ளது. 

சீனாவுக்கான முதல் சிக்கல் டிரம்ப் காலத்தில் வந்தது, சீனாவின் இந்த பொருளாதார ஆதிக்கம் வருங்காலத்தில் அமெரிக்காவுக்கு சவாலாகும் என கருதிய அமெரிக்க அதிபர் டிரம்ப் மோதலை தொடங்கி வைத்தார், மெல்ல மெல்ல சிக்கலில் வீழ்ந்தது சீனா, அங்கு தொழில்முடக்கம் மெல்ல ஏற்பட்டது, அமெரிக்க சிக்னலில் பல கம்பெனிகள் வேறு நாடுகளுக்கு மாறின, இந்தியா போன்ற நாடுகள் பலவற்றை ஈர்த்தன. 

இந்நிலையில்தான் கோவிட் வந்தது சீனாவுக்கு சிக்கல் அதிகமானது. இன்னும் சிக்கலானது  நோய் எளிதில் கட்டுப்படுத்தப்படவில்லை.

இங்கு சீன அரசு சில கடுமையான காரியங்களை செய்தது.

அவர்களின் "பூஜ்ஜியம் கோவிட்" கொள்கை என்பது கடுமையானது, கொரோனா கால முடிவில் கடந்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கை நடத்தும்பொருட்டும் கொரோனாவினை முழுக்க ஒழிப்போம் என்றும் அறிவித்தார்கள். அதன்படி ஒரு நகரில் ஒருவருக்கு கொரோனா என்றால் ஊரே பூட்டப்படும், சில வாரங்கள் அங்கு ஊரடங்கு இருக்கும்.

இது முதலில் சரியானது, ஆனால் எதற்கெடுத்தாலும் ஒவ்வொரு நகரை பூட்டுவதும் பிறகு வாரக் கணக்கில் அடைப்பதும் சிக்கலானது.

 இப்படி ஊரை பூட்டும் சீன அரசு , கம்பெனிகளை பூட்டாது. ஆனால், கம்பெனியில் இருந்து யாரும் வெளியேற தடை, உள்ளே செல்ல தடை என கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

முன்புபோல் அல்லாமல் சீன பொருளாதாரம் தடுமாற தொடங்கி சில ஆண்டுகள் ஆகின்றன, இந்நிலையில் உற்பத்தி அவசியம் என்பதால் ஒருபக்கம் கோவிட் குழப்பம் என்றாலும் இன்னொரு பக்கம் கடும் கட்டுப்பாட்டில் தொழிற்சாலைகள் இயங்குகின்றன‌. இவையெல்லாம் கம்பெனி அல்ல, மாபெரும் தொழிற்பேட்டை, பல லட்சம் குடியிருப்புக்கள் கொண்ட நகரங்கள், அப்படி உருவாக்கி வைத்திருந்தது சீன அரசு. 

இங்குதான் குழப்பம் ஏற்பட்டு வேலை நிறுத்தம் தொடங்கியது, இங்கு பெரிய அளவில் முதலீடு செய்திருப்பது  போக்ஸான் கம்பெனி. இது  ஐபோன் தயாரிப்புடன் தொடர்புடையது, இதனால் ஐபோன் உற்பத்தி பாதிக்கபட்டது. சிலநாள் போராட்டத்தால் பல்லாயிரம் கோடி பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக ஆப்பிள் நிறுவனம் புலம்ப தொடங்கிற்று

சீன அரசோ தொழிலாளர்களை  கட்டுப்படுத்த கடும் விதிகளை ஏற்படுத்தியது.  இந்த கோவிட் கொள்கை, புதிய பொருளாதார கொள்கை என சீன அரசின் மேல் கடும் ஆத்திரம் கொண்ட மக்கள் பொங்கிவிட்டனர், உண்மையில் எழுந்திருக்கும் போராட்டங்களுக்கு  இந்த கொள்கைகள் காரணம் என வெளியில் சொல்லப்பட்டாலும் ஜி ஜின்பெங் மூன்றாம் முறை பதவிக்கு வந்ததுதான் பெரும்பாலானோருக்குப்  பிடிக்கவில்லை. ஏற்கனவே டிரம்ப் தொடங்கி வைத்த அடியில் சீனா சிக்கியதும், அதை தொடர்ந்து கோவிட்டும் அதை சீனா சமாளிக்க கடும் அடக்குமுறைகளை கையிலெடுத்ததும் இப்போது இடியாப்ப சிக்கலாகிவிட்டது. 

சீனாவில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு முதலீடு செய்த கம்பெனிகள் இப்போது  வேறுநாடுகளை தேர்வு செய்கின்றது. அவற்றின் பார்வையில் இந்தியா தென்படுவது நமக்கு மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம். 

சீன குழப்பம் தொடர்கின்றது. 1989ல் ஜனநாயகம் வேண்டி ஏற்பட்ட போராட்டம். 2010களில் நடந்த ஹாங்காங்க் போராட்டமெல்லாம் வேறுவகை, இந்த கிளர்ச்சி வேறுவகை. அதாவது, மக்கள் ஒரு மாதிரியானவர்கள், ஒரு அரசு தங்களை நன்றாக வாழவைத்து பாதுகாத்தால் மிக மகிழ்ச்சியாக இருப்பார்கள், அரசு வருமான குறைவை செய்தாலும், பொருளாதார பாதிப்பை கொடுத்தாலும் பொறுக்கமாட்டார்கள். இது உலக வரலாறு சொல்லும் உண்மை.

இப்பொழுது எழுந்திருப்பது ஜி ஜின்பிங் மீதான அதிருப்தி. இவரால் தான் இந்த மோசமான நிலை என சீன மக்கள் கருதி அவருக்கு எதிராக பொங்குகின்றார்கள், அதுவும் மூன்றாம் முறை அவர் வந்திருக்கக் கூடாது என போராடுகின்றார்கள்.

பீஜிங் , ஷாங்காய் என முக்கிய நகரமெல்லாம் போர்கோலமாக காட்சியளிக்கின்றது, பல துப்பாக்கி சூடுகளும் நடந்துகொண்டிருக்கிறது. சீனா அரசு  இதை உலகின் கண்ணிலிருந்து மறைப்பதற்கான முயற்சிகள்  அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது. 

ஜி ஜின்பிங் இதை எப்படி சமாளிக்கப்போகிறார்?

இன்னும்   ஒரு  புரட்சி வெடிக்கப்போகிறதா? 

உலகம் கவலையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com