
இனி வரும் நாளில் சவுதியில் வேலை கிடைக்குமா?.... சந்தேகந்தான்! என வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் கலக்கமடைந்துள்ளனர்
சவுதி அரேபியா கன்சல்டன்ஸி என்ற துறை சார் ஆலோசகர்கள் பணிகளில் 40% உள்ளுர் மக்களையே பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக சவுதி அரசு தெரிவித்திருந்தது. இந்த விகிதத்தினை 2023 ஏப்ரல் 6ம் தேதிக்குள் 35% ஆகவும், 2024, மார்ச் 25க்குள் 40% ஆகவும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியது.
இதனால் சவுதி அரேபியாவில் அண்டை நாட்டினருக்கான வேலை வாய்ப்புகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சவுதி அரசின் இந்த முடிவானது உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் என சவுதி அரசு நினைக்கிறது.
சவுதியின் இந்த முடிவால் நிதித்துறை நிபுணர்கள், நிதி ஆலோசகர், வணிக ஆலோசனை தரும் நிபுணர்கள், சைபர் பாதுகாப்பு ஆலோசகர்கள், திட்ட மேலாண்மை பொறியாளர், திட்ட மேலாண்மை மேலாளர், திட்ட மேலாண்மை நிபுணர் என பல துறையிலும் வெளி நாட்டினருக்கு வாய்ப்புகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகெங்கும் கொரோனாவுக்கு பிறகு வேலைவாய்ப்பு சந்தையில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் பல நாடுகளும் தனது உள்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளன. இந்தவகையில் சவூதி அரசும் இந்த முடிவினை எடுத்துள்ளதாக கொள்ளலாம்.