கோடை விழாவை முன்னிட்டு புதுப் பொலிவு பெறும் ஏற்காடு.

கோடை விழாவை முன்னிட்டு புதுப் பொலிவு பெறும் ஏற்காடு.

சேலம் மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்று ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடுதான். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா கேரளா கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து இயற்கை அழகை ரசித்துச் செல்வார்கள். அதிலும் கோடைக் காலம் வந்துவிட்டால் இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகளவில் கூடும்.

      இங்குள்ள அழகிய ஏரி, படகு இல்லம், மான் பூங்கா, அண்ணாபூங்கா, லேடீஸ் சீட், பக்கோடா பாய்ன்ட், சேர்வராயன் கோவில், தாவரவியல் பூங்கா ஐந்திணை பூங்கா போன்ற பல இடங்களின் இயற்கை அழகுகளை ரசித்து செல்ல தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாசிகள் இங்கு வருகை தருகின்றனர்.

      அதிலும் தற்போது கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் இங்கு வந்து மகிழ்பவர்களுக்காக சுற்றுலாத்துறையும் பல்வேறு சிறப்புகளையும் வசதிகளையும் செய்துள்ளது .ஏற்காட்டின் சிறப்பை எடுத்துக்காட்டும் விதமாக ஆண்டுதோறும் கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியும் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் .இந்த வருடமும் ஏற்காட்டில் 46 வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது.

      வரும் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு துவங்கும் இந்த விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, வேளாண்மை, உழவர் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர்  கண்காட்சியினை தொடங்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.                    

     கோடை விழாவில் குழந்தைகள் சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், ட்ரேகன் வாரியர், சோட்டா பீம், ஹனி பீம் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் கார்னேஷன் ஜெர்பரா ஆந்துரியம் ஆர்கிட் உள்ளிட்ட ஐந்து லட்சம் அரிய வண்ண மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட உள்ளது. மேலும் பார்வையாளர்களின் கண்களை கவரும் வகையில் டாலியா, மேரி கோல்ட், ஜீனியா, டோரினியம், சால்வியா உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் வண்ண மலர்கள் கொண்ட பத்தாயிரம் மலர் தொட்டிகள் இம்மலர் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இம்மலர் கண்காட்சியில் மலைப்பகுதிகளில் விளையக்கூடிய பல்வேறு பழங்களை கொண்டு பழங்கள் காட்சி மற்றும் காய்கறி கண் காட்சிகளும் அமைக்கப்பட உள்ளது.

இது குறித்து சேலம் கலெக்டர் கார்மேகம் கூறியதாவது, “கோடை விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலையேற்றம், கைப்பந்து போட்டிகள், கயிறு இழுத்தல் போட்டிகள். மரத்தான், சைக்கிளிங், சிலம்பம், படகு போட்டி, கிரிக்கெட் போட்டிகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழுகொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மேலும் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி மற்றும் சுற்றுலாத்துறை கலை பண்பாட்டு துறை ஆகிய துறைகளின் சார்பில் நாள்தோறும் பல்வேறு இன்னிசை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது 21ஆம் தேதி துவங்கி 28 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ள 46வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிக்கு சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் வருகை தந்து சிறப்பிக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்றார் .

    கோடை விழாவை முன்னிட்டு மலைப்பாதைகளை சீரமைத்தும், முக்கிய இடங்களை பராமரித்தும் ஏற்காட்டை மேலும் அழகூட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மலர்களின் ராஜ்யத்தில் புதுப் பொலிவு பெறப்போகும் ஏற்காடு கோடை விழாவினை சென்று ரசிப்போம் வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com