இளைஞர்களே.. அரசியலுக்கு வாருங்கள்; பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை!

மாநில தலைவர் அண்ணாமலை
மாநில தலைவர் அண்ணாமலை
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

நாட்டில் ஆரோக்கியமான அரசியல் நடைபெறுவதற்கு இளைஞர்களின் பங்கு மிக அதிகம். அந்த வகையில் இன்றைய இளைஞர்கள் அதிகளவு அரசியலுக்கு வர வேண்டும் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அண்ணாமலை படித்த நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1997-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுவரை  படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற முறையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப் பட்டது. அதில் கலந்துகொண்ட அண்ணாமலை, 'இன்றைய அரசியலின் நடுநிலைத் தன்மை' என்ற தலைப்பில் பேசினார்.

பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த பிறகு, பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள சக நண்பர்கள், தங்கள் கருத்துக்களை அடிக்கடி பகிர்ந்து கொள்ள வேண்டும். சமுதாயத்தில் உயர்ந்துள்ளவர்கள், அவர்கள் படித்த கல்வி நிலையங்களின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்.

வெளிநாடுகளில், முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு, கல்வியின் வளர்ச்சிக்கு தேவையான ஊக்க நிதிகளை வழங்கி வருகின்றனர். அதேபோல நமது நாட்டிலும் ஊக்க உதவிகளை வழங்க வேண்டும். அப்போதுதான் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சியடையும்.

நமது நாட்டில் நல்ல சமுதாயம் உருவாக நல்ல அரசியல் இருக்க வேண்டும். கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டிலும், 'தி ஹையஸ்ட் சயின்ஸ் ஈஸ் சயின்ஸ் ஆப் பாலிடிக்ஸ்' என்று கூறியுள்ளார். அதுபோல நமது நாட்டிலும் படித்த இளைஞர்கள் அதிகளவில் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலை ஆரோக்கியமாக வைத்திருக்க இளைஞர்களால் மட்டும்தான் முடியும்.

தமிழகத்தில் மொத்த சிஸ்டத்தையும் உடனடியாக சரி செய்ய முடியாது. ஒவ்வொரு பகுதியாக அவரவர் கடமையை உணர்ந்து அவரவருக்கு உரிய சமூகப் பணிகளை ஆற்ற வேண்டும். இப்படி முன்னாள் மாணவர் சந்திப்பு அடிக்கடி நடக்க வேண்டியது ஒரு நல்ல விஷயம்’’

-இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

முன்னதாக, பள்ளி வளாகத்தில் அண்ணாமலை மரக்கன்று நட்டார். மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த இப்பள்ளி முன்னாள் மாணவர் மாணவியர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com