

பிரபல யூடியூபர் மாரிதாஸ் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் தலைமையிலான அரசு மற்றும் அமைச்சர்கள் தொடர்பாக விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார்.மக்கள் மனதில் தகாத எண்ணங்களை உருவாக்கும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.வெ.க.வினர் புகார் செய்தனர்.
தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அரசுக்கு எதிராக அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து முன்வைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தன் மீதான புகார்கள் குறித்த விசாரணைக்காக அவர் மதுரையிலிருந்து தற்போது சென்னைக்கு அழைத்து வருகின்றனர் சைபர் கிரைம் போலீஸ்.
மாரிதாஸ் கைது செய்யப்பத்தையடுத்து,இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்; தவெகவின் “ரீல்ஸ் மாடல்” அரசின் ரியல் முகத்தை மக்களுக்கு விளக்கிக் கூறிய ஒரே காரணத்திற்காக சமூக ஊடகவியலாளர் மாரிதாஸை தடாலடியாக கைது செய்திருக்கும் முதல்வர்ஜோசப் விஜயின் அராஜகம் கடும் கண்டனத்திற்குரியது. தங்கள் நிர்வாகத்தின் மீதான சாதாரண விமர்சனங்களைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது தான் தவெக முன்மொழிந்த மாற்று அரசியலா? ஆட்சி மாறினாலும் அவலங்கள் மாறவில்லை என்பதை போல, திமுகவிற்கு மாற்று சக்தி என்று கூறி மக்கள் மனதைக் கலைத்து ஆட்சிக்கு வந்து விட்டு, பொதுமக்களின் ஜனநாயகக் குரல்வளையை நெறிப்பதில் திமுகவை விட தவெக அசுர வேகத்தில் செயல்படுவது வெட்கக்கேடானது. எனவே, கைது செய்யப்பட்ட திரு. மாரிதாஸ் அவர்களை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! திமுகவைப் போலவே காவல்துறையை தங்கள் கைக்கூலிகளாகப் பயன்படுத்தி, பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை அபகரிக்க தவெக அரசு முயல்வதை தமிழக பாஜ ஒருபோதும் அனுமதிக்காது!, என குறிப்பிட்டுள்ளார்.
யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அரசின் தவறுகளை சுட்டிக்காட்டினால் அதனை ஏற்றுக்கொண்டு சரி செய்ய வேண்டும். பிரச்னைகளை சரிசெய்வதை விட்டு கைது நடவடிக்கையில் ஈடுபடுகிறது தவெக அரசு என பதிவிட்டுள்ளார்.