அம்மாவும் நானும்; பிரதமர் மோடி!

அம்மாவும் நானும்; பிரதமர் மோடி!

-வீர ராகவன்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபாய் பென் கடந்த சனிக்கிழமையன்று (ஜூன் 18) தனது 100-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி பிரதமர் மோடி குஜராத், காந்திநகரில் வசிக்கும் தன் தாயின் வீட்டிற்கு சென்று அவரை வணங்கி, பாத பூஜை செய்து ஆசி பெற்றார். மேலும் தன் தாய் குறித்த மலரும் நினைவுகளை பிரதமர் நரேந்திர மோடி தான் எழுதிய கடிதத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்த மடலில் உள்ள சில சுவாரஸ்யமான சம்பவங்கள்..

னது தாயார் ஹீராபாய் தனது நூறாவது வயதில் அடியெடுத்து வைப்பதும் எனது தந்தையின் நூறாண்டு நிறைவடைவதும் இந்த 2022-ல் என்பதால் இது ஒரு சிறப்பான ஆண்டாகும்.

எனது தாயார் குஜராத்தில் உள்ள மெஹ்சானாவின் விஸ்நகரில் பிறந்தார். அது எனது சொந்த ஊரான வத் நகருக்கு மிக அருகில் உள்ளது. அவர் சிறுவயதிலேயே தன் தாயை ஸ்பானிஷ் ப்ளூ தொற்றுநோய் காரணமாக இழந்தார். அதனால் தாய்ப் பாசம் என்பதே என் அன்னைக்கு கிடைத்ததில்லை. மேலும் சிறு வயதிலேயே அவருக்கு திருமணமானது..

குஜராத்தில் வத் நகரில் எங்கள் குடும்பம் ஒரு ஜன்னல் கூட இல்லாத சிறிய வீட்டில் வசித்தது. கழிவறை அல்லது குளியல் அறை என்பது எங்களுக்கு ஆடம்பரமான ஒன்றாகும். மண்சுவரும், ஓட்டுக் கூரையும் கொண்ட இந்த ஒரு அறை குடியிருப்பில்தான் நாங்கள் உடன்பிறந்தவர்கள் பெற்றோருடன் வசித்து வந்தோம்.  

அம்மாவுக்கு உணவு சமைப்பதற்கு வசதியாக மூங்கில் குச்சிகள் மற்றும் மரப்பலகைகளால் ஆன ஒரு மேடையை என் தந்தை அமைத்து தந்திருந்தார். அதுதான் எங்கள் டைனிங் டேபுளும்கூட! வீட்டில் வறுமை இருந்தாலும் அது எங்களை பாதிக்க விட்டதில்லை. அப்பா அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து தனது சிறிய தேநீர் கடையைத் திறக்கச் செல்வார். அதற்குமுன் உள்ளூர் கோவிலில் பிரார்த்தனை செய்வதும் அவருடைய தினசரி சடங்காகும்.

அம்மாவும் வேலைக்கு சளைத்தவரல்ல.. அவரும் என் தந்தையுடன் எழுந்து, காலை வேலைகளை முடிப்பார். தானியங்களை அரைப்பது, புடைப்பது என்று செய்வார். அப்போது அவருக்குப் பிடித்தமான பஜனை பாடல்களை முணுமுணுப்பார். 'ஜல்கமல் சாடி ஜானே பாலா, ஸ்வாமி அமரோ ஜக்ஸே' என்னும் நர்சி மேத்தாவின் பிரபலமான பஜனை பாடலை அவர் விரும்பினார். 'சிவாஜி நு ஹாலர்டு' என்ற தாலாட்டும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

குழந்தைகளாகிய நாங்கள் நன்கு படிக்க வேண்டும் என்று அம்மா விரும்பியதால், எங்களை வீட்டு வேலைகள் செய்ய விட்டதில்லை. ஆனால் உள்ளூர் குளத்தில் நீந்துவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், வீட்டில் இருக்கும் அழுக்குத் துணி மூட்டையை கொண்டு சென்று குளத்தில் துவைத்து விட்டு ஜாலியாக நீச்சலடிப்பேன்

அம்மா வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க ஒரு சில வீடுகளில் பாத்திரங்களைக் கழுவுவது வழக்கம். மேலும் ராட்டை சுற்றி நூல் நூற்பார். அதற்காக பருத்தி உரிப்பது முதல் நூல் நூற்பது வரை அனைத்தையும் தானே செய்வார். இந்த வேலையில் அவருக்கு முதுகு பயங்கரமாக வலிக்கும் என்றாலும் எங்களை அந்த வேலை செய்ய விடமாட்டார். மாறாக, பருத்தி முட்கள் எங்களைக் குத்திவிடக் கூடாதே என்று கவலைப்படுவார். 

மழைக்காலங்களில், எங்கள் மண் வீட்டின் கூரை ஒழுகி, வீடு வெள்ளக்காடாகிவிடும். வீட்டினுள் மழை ஒழுகும் இடங்களின்கீழ், வாளிகளையும், பாத்திரங்களையும் அம்மா வைப்பார். அந்தத் தண்ணீரையும் வீணாக்காமல் பாத்திரம் கழுவ பயன்படுத்திக் கொள்வார். வீட்டை சுத்தமாக வைத்திருக்க வலியுறுத்துவார். 

மாட்டுச்சாணம் கொண்டு தரையை அவர் மொழுகுவார். மேலும் வரட்டியை எரித்து சமைக்கும்போது ஏராளமான புகை வரும். ஆனாலும், அதை வைத்துதான் ஜன்னல் இல்லாத எங்களது வீட்டில் அம்மா சமையல் செய்வார்! அப்படி சமைப்பதால் அடுப்படி சுவர்கள் கரும்புகை படிந்து கான்ப்படும். அதையும் அம்மாவே சில மாதங்களுக்கு ஒருமுறை வெள்ளையடித்து சரிசெய்வார்

அதுமட்டுமல்ல.. எங்கள் சிறிய வீட்டின் சுவர்களில் காகிதக் கூழ் பூசி, கண்ணாடி துண்டுகளை ஒட்டி அழகிய ஓவியங்களை உருவாக்குவார். கதவில் தொங்கவிடுவதற்காக சிறிய அலங்கார மணிகளைச் செய்வார். படுக்கை விரிப்பில் லேசான சுருக்கம் இருந்தால்கூட அம்மாவுக்குப் பிடிக்காது.  இந்தப் பழக்கத்தை நாங்கள் சகோதரர்கள் அனைவரும் இன்றளவும் பின்பற்றுகிறோம்.

எனது தந்தையின் நெருங்கிய நண்பர் ஒருவர் எதிர்பாராவிதமாக காலமானதும் அவரது மகன் அப்பாஸை என் தந்தை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். அப்பாஸும் எங்கல் வீட்டில் ஒரு உறுப்பினராகி, எங்களுடன் தங்கி அவரது படிப்பை முடித்தார். ஒவ்வொரு ரமலான் பண்டிகையின் போது, அப்பாஸிற்கு பிடித்த திண்பண்டங்களை அம்மா செய்து கொடுப்பார்.

தற்போது ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. இப்போதும் யாரவது என் அன்னையிடம் '' உங்களது மகன் நாட்டின் பிரதமரானதை நினைத்து நீங்கள் பெருமிதம் அடைகிறீர்களா?"'  என்று கேட்டால், அதற்கு அவர்  "உங்களைப் போன்றே நானும் பெருமிதம் அடைகிறேன். எதுவும் என்னால் ஆனதல்ல. ஆண்டவனின் திட்டத்தில் நான் ஒரு சிறு துரும்புதான்" என்றே பதில் கூறுவார்.

என் அன்னை இதுவரை இரண்டே இரண்டு முறை மட்டும் நான் பங்கேற்ற பொதுநிகழ்ச்சிகளுக்கு வந்துள்ளார். நான் குஜராத் முதல்வராக பதவியேற்றபோது, எனது ஆசிரியர்கள் அனைவரையும் பொதுமேடையில் கவுரவப்படுத்த நினைத்தேன். என் தாயாரை தான் என் வாழ்க்கையில் பெரிய ஆசிரியையாக நினைத்திருந்தேன். நமது வேதங்கள் கூட, அம்மாவை தவிர வேறுயாரும் பெரிய குரு இல்லை என்று தெரிவிக்கின்றன. அதனால் என் அம்மாவை விழாவில் கலந்து கொள்ளும்படி அழைத்தேன். ஆனால் என் அன்னை மறுத்து விட்டார். ''நான் ஒரு சாதாரண பிரஜை. நான் உன்னை பெற்றெடுத்திருந்தாலும், கடவுளின் அருளும், மக்களின் ஆசியும் உன்னை நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளன. அதனால் எனக்கு கவுரவம் வேண்டாம்'' என்று தெரிவித்து விட்டார். விழாவில் மற்ற ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

முன்பெல்லாம், சதுர்மாஸ்ய சடங்குகளை என் அம்மா மிக கடுமையாக பின்பற்றுவார். நவராத்திரி தினத்தின்போது நான் விரதமிருப்பது அவரிடமிருந்து வந்த பழக்கம்தான். ஆனால் நான் இந்த கடுமையான நடைமுறைகளை எளிமையாக்கி கொள்ள வேண்டும் என்று இப்போது சொல்ல தொடங்கியுள்ளார். என் அம்மாவுக்கு எந்த சொத்துகளும் இல்லை. என் அம்மா ஒரு குந்துமணி அளவு தங்கம்கூட அணிந்து நான் பார்த்ததில்லை. 

என் குழந்தை பருவத்திலிருந்தே எனது தாயார் பிறரது தேர்வுகளுக்கு மரியாதை அளிப்பதை பார்த்திருக்கிறேன். உணவு விஷயத்தில் நான் பல பரிசோதனைகள் மேற்கொள்வேன்.. அதாவது உதாரணத்திற்கு சில மாதங்களில் உணவில் உப்பு சேர்த்துக் கொள்ள மாட்டேன்.. சில வாரங்கள் பால் மட்டுமே அருந்துவேன். சில சமயங்களில் 6 மாதம் இனிப்பைத் தவிர்ப்பேன். குளிர்காலத்தில் வெட்டவெளியில் உறங்குவதோடு குளிர்ந்த மண் பானை தண்ணீரில் குளிக்கும் பழக்கமும் இருந்தது. இப்படி என்னை நானே பரிசோதனைகளுக்கு உட்படுத்திக் கொள்ளும்போது, ''பரவாயில்லை உனக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதைச் செய்" என்று கூறிவிடுவார்கள்.

தனது சித்தியின் திருமணத்துக்குக்கூட செல்ல இயலாமல், நான் ஒரு மகானுக்கு அச்சமயம் சேவை செய்து வந்தேன்.  என் தாயாரின் சகோதரியின் திருமணத்திற்கு நான் செல்லவில்லை என்பதில் அவர்களுக்கு வருத்தம் இருந்தது இயல்புதான். ஆனால் நான் பசியில் வாடிவிடக்கூடாது என்பதற்காக சில நாட்களுக்கான உணவையும் சிறு தீனியையும்  எனக்காக சமைத்து வைத்துவிட்டு சென்றார்கள்.

நான் வீட்டை விட்டுச் செல்வது என்று முடிவெடுத்தபோது அதை என் பெற்றோரிடம் சொல்வதற்கு முன்னதாகவே அவர்களுக்கு  தெரிந்திருந்தது. நான் ராமகிருஷ்ணா மிஷன் மடத்தில் சேர வேண்டுமென்ற என் விருப்பத்தை சொன்னேன். இதுதொடர்பாக என் பெற்றோருக்கும் எனக்கும் பல நாட்கள் பேச்சுவார்த்தை நீடித்தது.

இறுதியாக எனது தந்தை எனது முடிவை ஏற்றுக் கொண்டு எனக்கு ஆசிர்வாதங்களை வழங்கினார். மிகச் சிறப்பான ஒரு தொடக்கம் அமைய வேண்டும் என்று வாழ்த்தி எனது தாயார் எனக்கு தயிரும் வெல்லமும் கலந்து வழங்கினார்கள். எனது வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிடும் என்று எனது தாயார் அறிந்திருந்தார்.கண்களில் நீர் தளும்ப எனது எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு மனம் நிறைந்த ஆசிகளை வழங்கி அவர் அனுப்பி வைத்தார்.

வீட்டை விட்டு வெளியேறிய பிறகு நான் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் என்னுடைய அன்னையின் ஆசி எப்போதும் என்னை பின்தொடர்ந்தது. உறுதியான முடிவுகளை எடுப்பதற்கு எனது தாயார் என்னை எப்போதும் ஊக்குவித்து வந்தார்கள். நான் குஜராத் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டபோது, அவர் சொன்னது ஒரே வார்த்தைதான்.. ''அரசில் உனது பணி குறித்து எனக்கு தெரியாது. ஆனாலும் எந்த காரணத்தை கொண்டும் லஞ்சம் மட்டும் வாங்காதே''  என்று மட்டும் கூறினார்.

டெல்லிக்கு புலம்பெயர்ந்த பிறகு என் அன்னையுடனான சந்திப்பு முன்பிருந்ததை விட மிகவும் குறைந்ததுஆனால் தனிமையை நான் உணர்வதில்லை. அவரது அன்பும், பாசமும் மாறாமல் நிலைத்திருக்கின்றன..அவரது ஆசிர்வாதங்களைப் போல! 

ஒவ்வொரு வறுமைக்கதைக்கு பின்னாலும், ஒரு அன்னையின் அற்புதம் நிறைந்த தியாகம் ஒளிந்திருக்கிறது.ஒவ்வொரு சவாலுக்கும் பின்னே ஒரு அன்னையின் உறுதியான முடிவு ஒளிந்திருக்கிறது.

அம்மா.. நூறாவது பிறந்தநாளை கொண்டாடும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் காலடியில் தலைவணங்குகிறேன்.

-இவ்வாறு தன் அன்னைக்கு எழுதிய அந்த மடலில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com