நவம்பர் 8-ம் தேதி முதல் மத்திய அரசு ஊழியகள் அனைவருக்கும் பயோமெட்ரிக் முறையை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது .
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று நாடு முழுவதும் கட்டுக்குள் வந்துள்ளதால் நவம்பர் 8-ம் தேதி முதல் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
அனைத்து ஊழியர்களூம் பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்யுமுன் கையை சானிடைசர் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு உதவியாக பயோமெட்ரிக் கருவிக்கு அருகே சானிடைசர் பாட்டில்கள் இருக்க வேண்டும். வருகை பதிவு செய்யும் ஊழியர்கள் 6 அடி இடைவெளிவிட்டு நிற்க வேண்டும். வருகை பதிவு செய்யும் நேரம் உள்பட, அலுவலக நேரத்தில் ஊழியர்கள் முககவசம் அணிய வேண்டும். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும்
–இவ்வாறு மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.