திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் வளையாம் பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணன்(37). இவர் தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வளையாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர் 9-வது வார்டு உறுப்பினர் வேட்பாளராக சீப்பு சின்னத்தில் நின்று வெற்றிபெற்றுள்ளார்.
இத்தேர்தலுக்கு ஒருவாரத்திற்கு முன்பு கிருஷ்ணனை சாராய வியாபாரம் செய்வதாகக்கூறிகாவல் துறையினர் வழக்குப் பதிந்துசிறையில் அடைத்துள்ளனர். கிருஷ்ணன் சிறைக்கு சென்றாலும் அப்பகுதியில் வார்டு உறுப்பினருக்கு மொத்த முள்ள 372 வாக்குகளில் 194 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் வருகிற 20-ம் தேதி பதவி ஏற்க வேண்டும் என்கிற நிலையில் கிருஷ்ணன் தற்போது சிறையில் இருப்பதால, அவரை சிறையிலிருந்து விடுவித்து, வார்டு உறுப்பினர் பதவி ஏற்க அனுமதிக்குமாறு கிருஷ்ணனின் மனைவி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அமர்குஷ்வாஹாவிடம் மனு அளித்திருப்பதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.