ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்திலுள்ள மதனப்பள்ளி அருகேவுள்ள ஊரான வலசப்பள்ளியில் பொங்கல் கொண்டாட்டத்தின் நிறைவுப் பகுதியாக கால்நடைகளை பலி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. அங்கு ஊருக்கு எல்லையிலுள்ள எல்லம்மா கோயிலில்
ஆடுகளை பலிகொடுக்க கிராம மக்கள் கொண்டு வந்திருந்தனர். கோயிலுக்கு வருவோரின் ஆடுகளை வெட்டி பலி கொடுக்கும் நிகழ்வில் சலபதி என்பவர் ஈடுபட்டு இருந்தார். தலைக்கேறிய மதுபோதையில் அவர் ஆடுகளை வெட்டிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது நள்ளிரவு 12 மணியளவில் சுரேஷ் என்பவர் (வயது 35) தன்னுடைய ஆட்டை கயிற்றில் கட்டி கொண்டு பலி மேடைக்கு வந்தார். அப்போது ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக் கொண்டிருந்த சுரேஷ் தலையை சலபதி ஓங்கி வெட்டி விட்டார். இதனால் படுகாயமடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து துடிதுடித்தார். உடனடியாக அருலிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சுரேஷ் உயிரிழந்தார். இறந்து போன சுரேஷுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை சலபதியை கைது செய்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.