
நந்தினி – என் உள்ளம் கவர்ந்த கதாபாத்திரம். பழுவூர் இளவரசியான நந்தினி கொலை செய்ய சதி திட்டம் தீட்டினாலும் மிகத் திறமையாக செயல்பட்ட பேரரசி என்பதாலும், பார்த்தவுடன் எல்லோரையும் ஈர்க்கும் அவளுடைய பேரழகை வர்ணிக்கும் இடங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதாலும், வில்லியாக தோன்றினாலும் சொல்ல முடியாத இடத்தை அவள் என் மனதில் பிடித்தவள் என்பதாலும், 'நான் எழுதும் கதை, கட்டுரைகளுக்கு, ஏன், எந்த ஒரு எழுத்துக்களுக்கும் நந்தினி என்ற பெயரைதான் கதாநாயகியாக வைத்து எழுதுவேன். அந்த அளவுக்கு நந்தினி என் மனதை ஆட்கொண்டு விட்டாள்!
– பிரகதா நவநீதன், மதுரை
————————————–
பள்ளியில் படிக்கும் காலத்திலேயே பொன்னியின் செல்வனை நான் மிகவும் ரசித்துப் படித்து இருக்கிறேன். வரலாற்று கதை என்பதால் மிகவும் ஆர்வத்துடன் படிப்பேன். அதுபோன்ற ஒரு புதினம் இனி வருமா என்று ஏங்க வைக்கும் அளவிற்கு அருமையான கதாபாத்திரங்கள் கொண்டது. பொன்னியின் செல்வன் கதையில் வரும் சுந்தர சோழரின் முதல்-மந்திரி 'அநிருத்த பிரம்மராயர்' கதாபாத்திரம்தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.மதிநுட்பம் நிறைந்த முதன் மந்திரியால்தான் அரசாங்கத்தை நன்கு நடத்த முடியும் என்று உணர வைத்த பக்குவப்பட்ட ஓர் அருமையான கதாபாத்திரம். இதுபோன்ற ஒரு முதன்மந்திரி இருந்து விட்டால் எல்லா அரசியல் கட்சிகளும் மிகவும் அருமையாக அமையும். என் உள்ளத்தை மிகவும் கொள்ளை கொண்ட அந்த கதாபாத்திரத்தை நான் என்றும் ரசித்து படிப்பேன்.
– உஷா முத்துராமன், திருநகர்
————————————–
பொன்னியின் செல்வன் கதையைப் படித்தப் பிறகு, கும்பகோணம் சென்றிருந்தோம். அப்போது சோழப்பேரரசர் ராஜராஜ சோழனின் பள்ளிப்படை சமாதி பம்பப்படையூர் இடத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதை நேரில் சென்று பார்த்த போது, இப்படி சரியாக பராமரிக்கப்படாமல் இருப்பதை கண்ணுற்றவுடன், மனதில் இனம் புரியாத ஒரு சோகமும் வலியும் சூழ்ந்தது. (புகைப்படத்தில் இருப்பவர் தான் அதை பராமரித்து வருபவர்). இது போன்ற சரித்திரத்துவம் வாய்ந்த இடங்களையும் சாம்ராஜ்ய சின்னங்களையும் பராமரித்து பாதுகாக்க நம் தமிழக அரசு முயற்சிகள் எடுக்க வேண்டாமா? ஆதங்கத்துடன்…
– வி.ஜி. ஜெயஸ்ரீ, சென்னை
————————————–
அம்மாவை உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும், அது உறவு மட்டுமல்ல, உயிரென்று! குடும்பத்தோடு நல்ல எழுத்துக்களை வாசித்தவர்களுக்கே புரியும் அது கதை மட்டுமல்ல, வாழ்வின் பூந்தோட்டமென்று…
அந்த வகையில் கல்கியின் `பொன்னியின் செல்வனை ` எங்களுக்கு அறிமுகப்படுத்திய என் தந்தை , ஒரு புதையலை அளித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். எத்தனை முறை படித்தாலும் கதையா , கற்பனையா, நிஜமா என ஒன்றிப் போய் விடுவேன். கரும்பு தின்னக் கூலியாக, கல்கி குழுமம் நடத்திய `பொன்னியின் செல்வன் மெகா போட்டியில் `தேர்வு செய்யப்பட்டு , கதையின் காலங்களுக்கு செல்லும் ஒர் இனிய பரிசு கிடைத்தது.
கடல் எனப் பரந்து கிடக்கும் வீராணம் ஏரிக் கரையில் நின்றபோது , வந்தியத் தேவன் குதிரை குளம்பொலி கேட்டது. கோடியக்கரை கடலில் பூங்குழலி `அலைகடல் ஓய்ந்திருக்க` எனப் பாடுவது கேட்டது. சிதிலமடைந்த கலங்கரை விளக்கம் , பழுவேட்டரையர் கட்டிய கோயில், செம்பியன்மாதேவி சிற்பங்கள் என வரலாறு சான்றுகள் நிஜம் தான் என்று மலைப்பை ஏற்படுத்தியது. தன் தேடலை காவியமாக வடித்துள்ள கல்கியின் எழுத்துக்கள், தலைமுறை தாண்டியும் விரும்பப்படுவதை எண்ணி வியந்து கொண்டே இருக்கிறேன்.
-என் .சாந்தினி, மதுரை