நான் என்றும் ‘பொன்னியின் செல்வன்’ வாசகன்!

நான் என்றும் ‘பொன்னியின் செல்வன்’ வாசகன்!

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

– காந்தி கண்ணதாசன்

'பொன்னியின் செல்வன்' – எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பெயர். ஒரு சரித்திரக் கதை மூன்று தலைமுறைகளையும் கடந்து பயணிக்கிறது… அதுமட்டுமின்றி, இந்த சரித்திரக் கதை, வாசகர்களை மற்ற சரித்திரக் கதைகளையும் தேட வைக்கிறது! இது, ஒரு தமிழ் நூல் வெளியீட்டாளராக வாசகர்களைச் சந்திக்கும் எனது அனுபவம்.

1960களில், நான் பத்தாம் வகுப்பு படிக்கும் சமயம், கோடை விடுமுறையின்போது எனது தந்தை கவியரசு கண்ணதாசன் அவர்களிடம், 'வாசிக்க ஒரு சரித்திர நாவல் எனக்குத் தேவை' என்றேன்.

அன்று மாலையே எனது தந்தை, 'கலைமகள் பிரசுரம்' வெளியிட்ட, 'பொன்னியின் செல்வன்' நாவலின் ஐந்து பாகங்களையும் வாங்கித் தந்தார். அதை பகலும் இரவும் கண்ணுறங்காது படித்தேன். இதைக் கண்டு எனது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஆச்சர்யம்.

த்தனை ஆண்டுகள் கழித்தும் வந்தியத்தேவன், குந்தவை, பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் என அந்த நாவலில் இடம் பெற்ற அத்தனை கதாபாத்திரங்களையும் வாசகர்களால் மறக்க முடியாமல் போனது எப்படி?
அமரர் கல்கி செய்த மாயம்தான் என்ன? சரித்திரத்தையும் கற்பனையையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்ததன் விளைவா?!

எதுவாக இருந்தாலும் இன்று அனைத்து டிஜிட்டல் தளங்களிலும், சரித்திரத்தில் பேரார்வம் கொண்ட அனைவரின் மனங்களிலும், 'பொன்னியின் செல்வன்' யானை மீதமர்ந்து பயணிக்கிறான். அதை வாசிக்க வாசிக்க ஒவ்வொரு வாசகனும் அந்தக்கால அருமையான தமிழ்நாட்டின் யாத்திரிகனாகவே மாறிவிடுகிறான். இந்தப் பணியினை அமரர் கல்கியின் பெயரிலேயே உள்ள மின் பத்திரிக்கை
மிகச் சிறப்பாகச் செய்கிறது. வாழ்க அவர்தம் பணி…! தொண்டு…!

இன்றைய புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களையும் சரித்திர நாவலை வாசிக்க வைத்த அமரர் கல்கி அவர்கள் தமிழ் உள்ளவரையும் வாழ்வார்.

logo
Kalki Online
kalkionline.com