பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 16

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 16

ஒரு அரிசோனன்

இளஞ்சேரன் மாளிகை, உதகை

பிரமாதீச, புரட்டாசி 5 – செப்டெம்பர் 20, 1013

த்தமாகச் சிவந்திருந்த வானத்தில் மலைகளுக்கு இடையில் மறைய ஆரம்பிக்கிறான் குங்குமப் பிழம்பாய் ஒளிரும் கதிரவன். குதிரையை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கிய இராஜராஜ நரேந்திரன், வந்த வழியைத் திரும்பிப் பார்க்கிறான். இளஞ்சேரன் பாஸ்கர ரவிவர்மனின் மாளிகை மலையுச்சியில் புள்ளியாகத் தெரிகிறது. ஊதல் காற்று சுழற்றி அடிக்கிறது.  மழை மேகங்கள் தூரத்தில் தெரிகின்றன. எப்படியும் இரவில் மழைபெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று அவனது மனம் சொல்கிறது. நீலமலையின் குளிர் அவனுக்குத் தாங்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.  இந்நிலையில் மழை வேறு பெய்தால் குளிரை எப்படித் தாங்குவது என்று மனது அடித்துக்கொள்கிறது. மேலும், மலையிறங்கித் தஞ்சைக்குத் தனியாகச் செல்லவேண்டும் என்பதை நினைத்தாலே அவனுக்கு மலைப்பாக இருக்கிறது. இந்த மலைப்பாதையில் வழி எப்படித் தெரியும்? சமவெளியில் எந்த ஊருக்காவது சென்றால்தானே இலச்சினை மோதிரத்தைக் காட்டி உதவி பெற இயலும்!

ஒரு மரத்தடியில் அமர்கிறான். குதிரை சற்று தூரத்தில் புல் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்கள் பார்த்தாலும், அவன் மனம் அன்று பிற்பகலில் நடந்த நிகழ்ச்சியை அசைபோட்டுப் பார்க்கிறது…

… இளஞ்சேரன் பாஸ்கர ரவிவர்மனின் மாளிகையில் சிவாச்சாரியனுடன் நுழைந்த இராஜராஜ நரேந்திரன், சேரநாட்டுப் பெண்களின் அழகையும், அவர்களது இனக்கவர்ச்சியையும், கொஞ்சம் தடித்த கொவ்வைப் பழமான உதடுகளைத் திறந்து உதிர்த்த மயக்கும் புன்னகையையும், அதனால் தெரிந்த வெள்ளைவெளேரென்ற பற்களையும் எண்ணிப் பார்த்துக் கொண்டே நுழைந்தான்.

அப்பெண்கள் அடர்த்தியாகக் கருங்கூந்தலை ஒன்றாகச் சேர்த்து தலைக்குமேல் கொண்டையாக அள்ளிமுடிந்திருந்த பாங்கும், அதில் சுற்றியிருந்த மலர்ச்சரங்களும், வட்டமான முகமும், பெரிய கருவிழிகளும், வெண்ணிற ஆடையும், பளபளக்கும் கன்னங்களும், எண்ணைப் பசையில் ஒளிர்ந்த உடலும் அவனைக் கிறங்கவைத்திருந்தன. அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நிலவுமொழியின் அமைதியான அழகு அவனுக்குச் சாதாரணமாகவே தெரிந்தது. அவளுக்காகப் பித்தாக அலைந்தோமே என்று தனக்குள்ளேயே வெட்கினான். ஆனால், அவர்களைக் கண்டு சிவாச்சாரியனின் முகத்தில் எந்தவிதமான மாற்றமும் தெரியாததைக் கண்டு, 'இவன் மனிதன்தானா, இல்லை கல்லா' என்றும் நினைத்துப் பார்த்தான்.

"சோழ தேசத்து ஸ்ரீமந்த்ர பத்ரப்ரதானிக்கு (திருமந்திர ஓலைநாயகருக்கு) எங்கள் ஸுஸ்வாகதங்கள் (வரவேற்புகள்!)" என்று வடமொழி கலந்த கொடுந்தமிழில் வரவேற்றார் இளஞ்சேரனின் அமைச்சரான நம்பூதிரி அந்தணர். அவரையும், இளஞ்சேரனையும் வணங்கிவிட்டு அவர்கள் காட்டிய இருக்கையில் சிவாச்சாரி அமர்ந்துகொண்டான்.

தன்னை வரவேற்கவில்லையே என்ற கோபத்துடன் விறைப்பாக அவனருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான் நரேந்திரன்.

ஓலைநாயகமே வணக்கம் தெரிவிக்கும் பொழுதுகூட வந்திருப்பவன் விறைப்பாக இருக்கிறானே என்று மனதிற்குள் சினந்த இளஞ்சேரன், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், நரேந்திரனையே உற்று நோக்கினான். பதிலுக்கு அவனை கண்ணிமைக்காமல் நோக்கினான் நரேந்திரன்.

"சேரமானுக்கு திரிபுவனச் சக்கரவர்த்திகள் இராஜராஜரிடமிருந்தும், கோப்பரகேசரியார் இராஜேந்திரரிடமிருந்தும் பரிசுப்பொருள்கள் கொணர்ந்துள்ளேன். சேரமான் கருணைகூர்ந்து அவற்றைப் பெற்றுக்கொண்டு, எங்களைப் பெருமைப்படுத்த வேண்டுமாறு கோருகிறேன்" என்று பணிவாகச் சேரனின் கவனத்தைத் திசை திருப்பினான் சிவாச்சாரி.

இளஞ்சேரனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. தனது பெரிய மீசையை ஒருமுறை நீவிவிட்டவாறே, "பரிசுப் பொருள்களுக்கு சக்கரவர்த்திகளுக்கும், அவரது மைந்தருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிப்பீராக!  ஓலைநாயகத்திற்கு எங்கள் விடுதியில் வசதிகள் நன்றாக இருந்ததா? உதகையின் குளிர் நடுக்கி எடுக்கவில்லையே!" என்று இராஜேந்திரனை அவரது மைந்தர் என்று மரியாதைக் குறைவாகவும், குளிர் நடுக்கி எடுக்கவில்லையே என்று உட்பொருள் நிறைந்த சொற்களையும் வீசிய சேரன், "உடன் வந்திருக்கும் இளைஞன் யாரோ?" என்று நரேந்திரனைப் பார்த்துத் தன் பெரிய விழிகளை உருட்டி விழித்தவாறு கேட்டான்.

அவனுக்குப் பதில் சொல்ல வாயெடுத்த நரேந்திரனைத் தன் பார்வையால் அடக்கிய சிவாச்சாரி இளஞ்சேரனிடம், "உடன் வந்திருப்பது இளைஞராக இருந்தாலும், வேங்கை நாட்டின் இளவரசர்; திரிபுவனச் சக்கரவர்த்தி அவர்களின் பேரர், கோப்பரகேசரியாரின் மருகர்; எனக்குத் துணையாக வந்திருக்கிறார். அவரைத் தங்கள் அமைச்சர் முதலில் வரவேற்காது என்னை மட்டும் வரவேற்றதுதான் ஒரு குறை. மற்றபடி சேரமானின் விருந்தோம்பலில் குறைகாண நாங்கள் என்ன பித்தர்களா? கண்களுக்கும், வயிற்றுக்கும் கிடைத்த நல்ல விருந்துக்கு நன்றி!

"சோழப் பேரரசின் மாமன்னரான கோப்பரகேசரியார் இராஜேந்திரரை அவரது பட்டத்தைச் சொல்லிக் குறிப்பிடாது, திருபுவனச் சக்ரவர்த்தி அவர்களின் மைந்தர் என்று தாங்கள் குறிப்பிட்டதால் என் உடலில் ஏறிய சூட்டின் வெப்பத்தை விடவா, உதகையின் குளிர் நடுக்கும்தன்மை வாய்ந்தது?" என்று இளஞ்சேரனின் இரட்டைப் பொருள்கொண்ட பேச்சு தனக்கும் புரிந்தது என்று காட்டிக்கொண்டு பதிலிருத்தான்.

ஒருகணம் அவனது அறிவுத் திறமை நரேந்திரனை வியக்கவைத்தது. இளைஞன் என்று தன்னைச் சொன்னதற்கு மட்டுமே கோபம் கொண்டோமே, இளஞ்சேரன் தன்னை மட்டுமன்றி, தன் மாமனையும் சாடியிருக்கிறான் என்று அறிந்துகொள்ளாமல் போனோமே என்று சிந்தித்துப் பார்த்தான்.

சிவாச்சாரியனின் பேச்சு அம்புபோல இளஞ்சேரனைத் தைக்கவே, சிலிர்த்து எழுந்தான்.

"ஓலைநாயகரே!  கோப்பரகேசரியார், திரிபுவனச்சக்கரவர்த்தியாரின் மைந்தர்தானே? பின் ஏன் நீர் அதைப்பற்றி விமர்சிக்கிறீர்? மேலும், வேங்கைநாட்டு இளவரசர் இளைஞர்தானே? எதற்கெடுத்தாலும் உடம்பில் சூடேறும் நீர் எமது சேரநாட்டு மருத்துவர்களிடம் உமது உடலைக் காட்டிச் சோதனை செய்துகொள்ளுவதே சாலச்சிறந்தது!  வந்த வேலையை விட்டு, உமது நிலையறியாது பேசாமலிருப்பதே நல்லதாகும்" அவனது வார்த்தைகளில் குத்தல் இருந்தது.

சிவாச்சாரியனின் உதடுகள் துடிக்கின்றன. தற்போழுது தூதுவனாக வந்திருப்பதால் துடித்து எழுவதில் பயனில்லை என்று உணர்ந்து, தன் மனத்தில் எழும் சினத்தை அடக்கிக்கொண்டு, "சேரமான் அவர்களே!  இன்று உமது நாள் நல்ல நாள்!  ஆகவே, நான் தூதுவனாக வந்தது உமக்கு சாதகமாகப் போய்விட்டது! கோப்பரகேசரி திரிபுவனச் சக்கரவர்த்தி அவர்களின் மைந்தர்தானே என்று கேட்ட உம்…" சில விநாடிகள் வாளாவிருந்துவிட்டு, "இந்த ஆண்டுத் திறையை நீர் ஏன் ஆறுதிங்களாக அனுப்பவில்லை என்று விளக்கம் கேட்டு அறிய கோப்பரகேசரியார் என்னை அனுப்பியிருக்கிறார். அதை உடனே எங்களுடன் அனுப்பிவைக்கச் சொல்லி அவர் உத்தரவிட்டிருக்கிறார். இனி சேர நாட்டுப் பட்டயங்களில் வடமொழியான சம்ஸ்கிருதத்தை விடுத்துத் தமிழை எழுதவும் ஆணை பிறப்பித்திருக்கிறார். சேரநாட்டில் ஆட்சிமொழியாகத் தமிழே கையாளப்படவேண்டும் என்பதும் அவரது கட்டளையாகும்…"

சேரனின் அமைச்சர் அவனை இடைமறித்து, "நிறுத்தும், பத்ரப்பிரதானீ!  சேரமானின் திவசங்களைக் கணிக்க ஜோதிஷ வ்யாக்ரர்களான (புலிகளான) நாங்கள் இருக்கின்றோம்.
நீர் என்ன பெரிய சிம்ஹமா, உம்மைப் பார்த்து எங்கள் ராஜா பயப்பட? அவர் பெரிதாக விடும் ஸ்வாஸம் பரிணமித்தாலே நீர் நிர்மூலமாகிவிடுவீர். நீர் சிவக்ஷேத்திரத்தில் பூஜை புனஸ்காரமும், ஹோமமும் செய்வதை விடுத்து, ராஜாங்க விஷயங்களில் ஏன் பிரவேசிக்கிறீர்? உம்முடைய துர்வசனத்திற்கு உம்மை ஹஸ்தினியின் (பெண் யானை) காலால் இடறச் செய்திருப்பார் எங்கள் ராஜா.  தூதனாக இருப்பதால் உம்முடைய ஜீவன் இன்று க்ஷேமமாய் இருக்கிறது!" என்று பாதி வடமொழியும், பாதி தமிழுமாக அவனைப் பார்த்துச் சீறினார்.

"ஆமாத்யரே, நான் உம்மிடம் பேசவில்லை.  சேரமானிடம் பேசுகிறேன். நீர் குறுக்கிடாமல் இருப்பதுதான் உமக்கு அழகு.  அரசர் கேட்கும்போது ஆலோசனை சொல்பவர்தான் அமைச்சர். தவிரவும், அரசரின் உரையாடலில் குறுக்கிட்டுப் பேசுவதும் உமக்கு அழகல்ல.  நான் என்ன பதவியில் இருக்கவேண்டும் என்பதை திரிபுவனச் சக்கரவர்த்தி அவர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். அவர்களைவிட உமக்கு அறிவுகூர்மை இருப்பதாக நான் நினைக்கவில்லை" என்று அவரை அடக்கினான்.

அவனது துணிச்சலைப் பார்த்து நரேந்திரன் வியந்தான்.  தனது பாட்டனாருக்காகவும், மாமனுக்காகவும், சேரனையும், அவனது அமைச்சனையும் அவர்கள் அரசவையிலேயே எதிர்த்து உரையாடும் துணிச்சலைப் பார்த்து அதிர்ந்தேபோனான். அவனது வீரம் நரேந்திரனுக்கு அவன்பால் மரியாதையை விளைவித்தது.

அதேசமயம், சிவாச்சாரியிடம் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது.

கடகடவென்று கிட்டத்தட்ட ஒரு நிமிடம் சிரித்தான் இளஞ்சேரன். அவன் சிரிப்பை நிறுத்தியதும் அவையே அமைதியாகியது.

"ஓலைநாயகமே! எனக்காக சம்பாஷிக்க நான் எனது மந்த்ரியை நியமிக்கிறேன். உம்முடன் வந்திருக்கும் வேங்கைநாட்டு இளவரசனை அவருடன் பேசச்சொல்லும்!"

ஏதோ நகைச்சுவையாகச் சொல்லிவிட்டதைப்போலப் பெரிதாக நகைத்தான்.

நரேந்திரனுக்கு உடனே கோபம் பீரிட்டு வந்தது.  தன்னை அவமதிப்பதுபோல நடந்துகொள்ளும் சேரமானை சரிக்குச் சரி அவமதிக்க வேண்டும் என்று மனம் கொதித்தது.  ஆனால், சேரமானின் மாளிகைக்குள் நுழைவதற்குமுன் சிவாச்சாரி "இளவரசே, சேரமான் மிகவும் எகத்தாளமாகப் பேசுவதில் வல்லவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். தங்களை வம்புக்கு இழுக்க முயலுவார். எது நடந்தாலும் தாங்கள் சாட்சியாக மட்டுமே இருங்கள். வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம்" என்று கூறிய அறிவுரை நினைவுக்கு வரவே தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான்.

தன் மனத்தில் எழும் உணர்ச்சிகளை வெளியில் காட்டாமல் அமைதியான முகத்துடன், "சேரமான் அவர்களே!  கோப்பரகேசரியாரின் ஆணைகளை எடுத்துத் தங்களுக்கு உரைக்க வேண்டியதும், அதற்கு நீங்கள் சொல்லும் பதிலை – அது எப்படி இருந்தாலும், அதைக் காதில் வாங்கிக்கொண்டு, கோப்பரகேசரியாருக்குக் கொண்டுசேர்ப்பதும் ஓலைநாயகமாக வந்திருக்கும் எனது கடமை. அவரது ஆணைக்குத் தலைசாய்த்தால், தாங்கள் தரும் திறைப் பொருள்களுடன் மகிழ்வுடன் திரும்பிச்செல்வேன். மாறாக இருந்தால் முடிந்தவரை தங்கள் கருத்தை மாற்ற முயற்சி செய்வேன். அதன் பிறகும் தங்கள் விருப்பம் வேறாக இருந்தால் அதை கோப்பரகேசரியாருக்குத் தெரிவிக்க எடுத்துச்செல்வேன். என் கடமை அவ்வளவே சேரமானின் பிரதிநிதியாக அவருடைய அமைச்சர் சொல்லும் பதிலை ஏற்றுக்கொண்டு திரும்பிச்செல்வது எனது கடமையல்ல.  அதற்காக கோப்பரகேசரியார் என்னை அனுப்பவுமில்லை!" என்று சொன்னவன், மேலும் தொடர்ந்தான்.

"வேங்கைநாட்டு இளவரசர் எனக்குத் துணையாகவும், நீலமலை நாட்டின் இயற்கை அழகை ரசிக்கவுமே என்னுடன் வந்திருக்கிறார். சோழநாட்டு அரசுவிவகாரங்களில் சேரநாட்டு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் வரவில்லை. ஆகவே, தங்களுடைய பதிலைத் தாங்கள் எடுத்து உரைக்கும்படி கோருகிறேன். அருள்கூர்ந்து, இதை நகைக்கும் விஷயமாகத் தாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம்! அதன் விளைவுகளை நினைத்துப் பார்க்கும்படியும் தங்களைக் கோருகிறேன்!' என்று பணிவான குரலில் தெரிவித்தான்.

அமைச்சரின் முகமும், சேரமானின் முகமும் ஒருசேரச் சிவந்துபோயின.

"தூர்த்த (கொடியவனான) பத்ரப்பரதானீ! சேரமானை அவரது ஸபாவில் தூஷணை செய்த ஸ்வானமே (நாயே)! உன்னை சிரச்சேதம் செய்யும் உத்தரவை சேரமான் சாஸனம் செய்யும்படி பாஷிக்கிறேன்!" என்று அமைச்சர் இறைந்து கத்தினார்.

அதற்குச் சற்றும் கலங்காமல், "ஓய், ஆமாத்யரே! ஒன்று தமிழில் பேசும். இல்லாவிட்டால் வடமொழியான சம்ஸ்கிருதத்தில் பேசும். நீர் பேசுவதைப் பார்த்தால் எந்த மொழியும் தெரியாத அரைகுறை மாதிரி இருக்கிறது" என்று தமிழில் சொன்ன சிவாச்சாரி, "என்னை நாய் என்று சொன்ன உமது நாவைத் துண்டாடியிருப்பேன்! ஆனால், அது தூதுவனுக்கு அழகல்ல என்பதாலும், சேரமானுக்காவும் உம்மைச் சும்மாவிடுகிறேன். சேரமானின் நிழலில் மறைந்துகொண்டு ஊளையிடும் கழுதைப்புலியே!  உம்முடைய குடலைக் கிழித்து மாலையாகப் போட்டுக் கொள்ளும் நரசிம்மரின் வலிமை எனக்கு இருக்கிறது! வாயை மூடும்!" என்று அவரிடம் சம்ஸ்கிருதத்தில் மிகவும் பரிவாகச் சொன்னான்.

அவனது தெளிவான சம்ஸ்கிருத உச்சரிப்பையும், அவந்து வடமொழி அறிவையும் உணர்ந்து அயர்ந்துபோன அமைச்சர் வாயை மூடிக் கொண்டார்.

திடுமென்று அவன் சம்ஸ்கிருதத்தில் பேசவே திகைத்துப்போன மற்றவர்கள், சேரமான் உட்பட, அவன் என்ன சொன்னான் என்று தெரியாமல் விழித்தார்கள்.

சேரமானிடம், "சேரமான் அவர்களே! தங்கள் அவையில் தங்கள் அமைச்சரிடம் இப்படி அனைவருக்கும் புரியாத வடமொழியில் பேசியதற்கு என்னை மன்னியுங்கள். எனக்கு வேறுவழி தெரியவில்லை!" என்று பணிவாகச் சொன்னான்.

மெதுவான குரலில் இளஞ்சேரன் தனது அமைச்சரிடம் சிவாச்சாரி என்ன சொன்னான் என்று வினவினான்.

அமைச்சர் சிவாச்சாரி சொன்னதை சேரமானின் காதில் தெரிவித்தார்.

அதைக் கேட்ட இளஞ்சேரன் தனது அரியணையிலிருந்து விருட்டென்று எழுந்திருந்தான். அவன் எழுந்ததைக் கண்ட அனைவரும் எழுந்தார்கள்.

வேகமாக நடந்து வந்து சிவாச்சாரியனின் கன்னத்தில் பளீரென்று அறைந்தான் இளஞ்சேரன்.

அந்த அறையின் ஒலி அரசவை முழுவதும் எதிரொலித்து அவையையே திகைக்க வைத்துவிட்டது. தூதுவனை மரியாதைக் குறைவாக நடத்தியது மட்டுமின்றி, அவனது கன்னத்திலும் அறைவது இதுவரை யாரும் கண்டிராத காட்சியாக இருந்தது.

ஆடாமல் அசையாமல், இளஞ்சேரனையே கண்வாங்காமல் பார்த்தபடி நின்றான் சிவாச்சாரி.

நரேந்திரன் கை உடைவாளை நோக்கிச் சென்றது. சட்டென்று அவன் கையைத் தனது இடது கையால் உடும்புப்பிடியாகப் பிடித்தான் சிவாச்சாரி.

"சோழ நாயே! எனது அமைச்சரைக் கழுதைப்புலி என்று தரக்குறைவாகப் பேசுவாயா இனிமேல்?" என்று இளஞ்சேரன் அரசவையே அதிரும்படி மறுமுறை அறைந்தான்.

"நன்றாய்த் தெரிந்துகொள்! நான் உன் மன்னனுக்குத் திறைசெலுத்த மாட்டேன்! மனித பாஷையான உனது பாஷையைப் பட்டயங்களில் எழுதமாட்டேன். நீ செய்த குற்றத்திற்காக உன்னைக் கொல்ல வேண்டும். தூதனாக வந்ததால் உன்னை வாழ்நாள் முழுவதும் காராக்கிரகத்தில் கழிக்கும் தண்டனையை வழங்குகிறேன். யாரங்கே! இருவரையும் விலங்குமாட்டிச் சிறையில் தள்ளுங்கள்!" என்று கர்ஜித்தான். சபையே அதிர்ந்து போயிற்று.  

அனைவரும் சோழப் பேரரசின் வலிமையை நன்கு அறிவார்கள். ஏதாவது சாக்குச் சொல்லி, பாதிப் பொருள்களையாவது திறையாகக் கொடுத்தனுப்புவதை விட்டுவிட்டு, ஒரு தூதுவனை, அதுவும் சோழப்பேரரசின் உயர் அதிகாரியை, அனைவருக்கும் முன்னே கன்னத்தில் அறைவது என்ன விளைவை ஏற்படுத்தும் என்னும் அச்சம், அவையோர் அனைவரையும் சூழ்ந்து கொண்டது.

சிறிதும் கலங்காமல் தலைகுனியாமல் சேரனை விழித்துப் பார்த்தபடி பதிலளித்தான் சிவாச்சாரி:

 "சேரமான் அவர்களே! மூவேந்தர் பரம்பரையில் வந்த தாங்கள் சேரர் குலத்திற்கே அழியாப் பழியைத் தேடிக் கொடுத்துவிட்டீர்கள்!  ஒரு தூதுவனை இப்படியா நடத்துவது? தங்கள் அமைச்சர் என்னை நாயே என்று அழைத்ததைத் தடுத்து நிறுத்தாமல், தாங்களும் என்னை நாயே என்று விளித்தீர்கள் – அதுவும் என் பிறந்த பொன்னாட்டைக் கேவலப்படுத்தும் வகையில்!  தங்கள் அமைச்சரைக் கழுதைப்புலி என்று அழைத்ததற்காக என்னைத் தாங்கள் சிறைப்படுத்தலாம். ஆனால், வேங்கைநாட்டு இளவரசர் அரசவையில் ஒரு சொல்கூட பேசவில்லை. அவரைத் திரும்பச் செல்லவிடுங்கள்! சிறந்த சேரர் குலத்திற்கு அவமானம் தேடிக்கொள்ளாதீர்கள்!" அத்துடன் இறுகப் பிடித்திருந்த நரேந்திரனின் கையையும் மெல்லத் தளர்த்தினான்.

"உங்களை விடாவிட்டால்?" உஷ்ணமான கேள்வி பிறந்தது சேரனிடமிருந்து.

"இளவரசர் சிறை செல்ல நான் அனுமதிக்க மாட்டேன்! அவரும் சிறைப்படமாட்டார்! எங்கள் இருவரின் உயிர் பிரிந்தால்தான் அது நடக்கும். அது நடப்பதற்குமுன் இங்கு பலர் உயிரிழக்க நேரிடும். அது நடக்க வேண்டுமா? அவரைச் செல்ல விடுங்கள்! நான் உங்களுக்குப் பிணைக்கைதியாக – எந்தவிதமான தொல்லையும் கொடுக்காமல் கைதியாகச் சம்மதிக்கிறேன். இளவரசர் தங்கள் பதிலை கோப்பரகேசரியாருக்கு எடுத்துச்செல்வார்!" என்று பதில் சொன்ன சிவாச்சாரியின் குரலில் சிறிதும் நடுக்கமோ, அச்சமோ இல்லை; அமைதியான எச்சரிக்கைதான் இருந்தது.

"வேங்கை நாட்டுடன் எனக்குப் பகை இல்லை என்பதால் இளவரசரை மட்டும் நான் திரும்பிச்செல்ல அனுமதிக்கிறேன். அதற்குப் பதிலாக உன்னுடன் வந்த சோழ வீரர்கள் அனைவரையும் உன்னுடன் சிறையில் அடைக்கச் சம்மதிக்கிறாயா?" சேரனின் குரலில் எகத்தாளம் இருந்தது.

"சம்மதிக்கிறேன். இளவரசர் எனது சம்மதத்தை விடுதியில் இருக்கும் சோழ வீரர்களுக்குத் தெரிவிப்பார். அவர்கள் அதற்குக் கட்டுப்படுவார்கள்!" அமைதியாகத் தன் இலச்சினை மோதிரத்தை நரேந்திரனின் கையில் கழட்டிக்கொடுத்த சிவாச்சாரியின் குரலில் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லை. அவன் முகத்தில் தன் நிலைமை என்ன ஆகுமோ என்ற அச்சமும் இல்லை.57

… குதிரையின் குளம்பொலி கேட்டு நினைவுக்கு வருகிறான், நரேந்திரன். அவனது குதிரையின் கடிவாளத்தைக் ஒருகையில் பிடித்தவாறு வேறொரு குதிரையில் வந்த வீரன் ஒருவன், அவனருகில் குதிரையை நிறுத்திக் கீழிறங்குகிறான்.

"வேங்கை நாட்டு இளவரசே! நான் சோழவீரன்தான். தாங்களும் சிவாச்சாரியாரும் இளஞ்சேரன் மாளிகைக்குச் செல்லும் முன்னர் ஓலைநாயகர் என்னைத் தனியாக ஒளிந்துகொள்ளுமாறும், தாங்கள் மட்டும் வெளியே வந்தால், மற்றவர்கள் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்திருந்து, தங்களைத் தொடர்ந்துவந்து, தாங்கள் உதகை எல்லையைத் தாண்டியதும், தங்களைச் சந்தித்து தஞ்சைக்கு அழைத்துச் செல்லுமாறும் பணித்தார்" என்று அருகில் வருகிறான்.

சிவாச்சாரி எதைத்தான் முன்கூட்டியே யோசித்து முடிவெடுக்கவில்லை என்று வியக்கிறான் நரேந்திரன். பித்துப் பிடித்தவனைப்போல அல்லவா நடந்துகொண்டான் இளஞ்சேரன்! சிவாச்சாரி அந்தச் சேரமானுக்குச் சற்றும் பணியவில்லையே! தன்னை விடுவிக்க எவ்வளவு துணிச்சலுடன் நடந்துகொண்டான்! இனி அவன் கதி என்ன ஆகுமோ? ஒருவேளை சேரமான் அவன் சொன்னதற்குச் சம்மதிக்காது போயிருந்தால்…?

———————————–

[57 உதகையில் ஆட்சி செய்துவந்த இளஞ்சேரன் இரண்டாம் பாஸ்கர ரவிவர்மன், கப்பம் கேட்கவந்த இராஜராஜ சோழனின் தூதுவனை அவமதித்துச் சிறையில் அடைத்தான் – "Medieval Chola Empire and its relation with Kerala," Chapter 10]

நினைத்துப் பார்க்கவே அவனுக்குக் கலக்கமாக இருக்கிறது. அவன் இதுவரை போருக்குச் சென்றதே இல்லை. தன்னைவிட வயதில் குறைந்த இராஜாதிராஜன், தென்சேரனை யானைப் போரில் வீழ்த்தினான் என்று கேள்விப்பட்டிருக்கிறான்.

இனி தானும் போருக்குச் செல்ல வேண்டும், ஒவ்வொரு போரிலும் உயிரைப் பணயம் வைக்க வேண்டும் என்று உணர்ந்தும் இருக்கிறான். முதன்முதலாக அப்படி உயிரைப் பணயம் வைக்கும் நிலை போரே இல்லாமல் வந்ததை நினைத்துப் பார்த்தால் அவனுக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது.

சோழ வீரன் அவனது கவனத்தைக் கலைக்கிறான்: "இளவரசே! சேரமானின் அரசவையில் ஏதாவது கைகலப்பு நிகழ்ந்து தங்கள் உயிருக்கு ஆபத்து நேரும்போலிருந்தால் நம்முடன் வந்த நூறு வீரர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்தாவது தங்கள் உயிரை மீட்க வேண்டும் என்றும் சிவாச்சாரி எங்களைப் பணித்திருந்தார். அதுதான், நமது வீரர்கள் விடுதியில் இல்லாமல், தங்கள் வருகைக்காக சேரமானின் மாளிகையின் வாயிலிலேயே காத்திருந்தார்கள்" என்றும் சிவாச்சாரியனின் திட்டத்தைத் தெளிவுபடுத்துகிறான்.

சிவாச்சாரியனுக்கு சேரமான் இவ்வாறு நடந்துகொள்வான் என்று முன்கூட்டியே எப்படி ஊகிக்க முடிந்தது என்று மூளையைக் கசக்கிப் பிழிந்து பார்க்கிறான் நரேந்திரன். அவனுக்கு குழப்பம் மிஞ்சியதே தவிர, விடை ஒன்றும் கிடைக்கவில்லை.

"இளவரசே, தாங்கள் மதியத்திலிருந்து உணவே உண்ணவில்லை. நான் சிறிது உணவு கொண்டு வந்திருக்கிறேன். அதை உண்டுவிட்டு, இரவை அந்தப் பாழடைந்த மண்டபத்தில் கழிப்போம். விடிந்ததும் மலையிலிருந்து இறங்குவோம்" என்று குதிரையின் பக்கவாட்டில் கட்டியிருந்த பையிலிருந்து உணவுப் பொட்டலத்தை எடுத்து அவனிடம் நீட்டுகிறான் சோழ வீரன்.

நீலமலை அடிவாரம்

பிரமாதீச, மார்கழி 22 – ஜனவரி 7, 1014

சோழர் படை நீலமலை அடிவாரத்தில் வெற்றி முகாமிட்டிருக்கிறது. பதினைந்து நாட்களுக்கு முன்னர்தான் இளஞ்சேரனைப் போரில் வென்று, சேரப் படைகளில் பெரும்பாலோரை யமனுலகுக்கு அனுப்பி வெற்றிவாகை சூடி, சிவாச்சாரியையும் சிறைப்பட்ட சோழ வீரர்களையும் விடுவித்திருக்கிறான் இராஜாதிராஜன்.

கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களாகச் சேரனின் சிறையில் நாட்களைக் கழித்த சிவாச்சாரி, மீசை தாடியுடன் தலைமயிரை உச்சியில் சுருட்டி முடிந்திருந்ததால் ஒரு முனிவரைப்போலக் காணப்படுகிறான். தலையில் கையை வைத்துக்கொண்டு குனிந்திருக்கிறான் சிவாச்சாரி. அவன் முன்னர் அமர்ந்திருக்கும் இராஜாதிராஜன், "ஏன் வீணாகக் கவலைப்படுகிறீர்கள் சிவாச்சாரியாரே! போர் என்றால் வீரர்கள் மடிவார்கள், நகரங்கள் அழியும். இது நீங்கள் அறியாததா?

"இந்த மட்டும் உங்களை உயிரோடு சிறைமீட்டது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது தெரியுமா? உங்களுக்கு ஏதாவது ஆகியிருந்தால் நான் அக்காவுக்கு என்ன பதில் கொண்டு செல்ல இயலும்? தூதனாக வந்த உங்களைத் தகாத சொற்களால் அவமதித்து, தந்தையின் பிறப்பைப் பற்றியும் இழிவாகப் பேசிய சேரமானைத்தானே நீங்கள் காலனுக்கு இரையாக்கினீர்கள்! பின் ஏன் இந்த வருத்தம்?" என்று தேற்றுகிறான்.

"இளவரசே, என் ஒருவனுக்காக இத்தனை உயிர்கள் இறக்க வேண்டுமா? அதுமட்டுமல்ல, முதன்முறையாக நான் உயிர்க்கொலை செய்தேனே! அதுவும் ஒரு அரசனை, என்னை அவமானப்படுத்தியதற்காகக் கொன்றேனே!

"சிவ பூசை செய்யும் நான் உயிர்க்கொலை செய்யலாமா? இது தகுமா? என் மனமே என்னைக் கொல்லுகிறது. அதுமட்டுமா? என் பொருட்டு இயற்கை அன்னையின் மடியில் அழகுறத் தவழ்ந்த ஒரு நகரமே தீக்கு இரையாக்கப்பட்டு அழிந்ததே!

"என் நெஞ்சை இந்நிகழ்ச்சிகள் அரித்து எடுக்கின்றன இளவரசே! பாண்டிய மன்னனுடன் நிகழ்ந்த போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் என்னால் அழிந்தன! இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்தால் என் இதயம் வெடித்து இரத்தம் பெருக்கெடுப்பதுபோல இருக்கிறது. இளவரசே! அதுதான் என்னால் தாங்க முடியவில்லை!" முகத்தில் இருந்த கையை எடுக்காமலேயே பதில்கூறுகிறான் சிவாச்சாரி.

இதுவரை அவன் முகத்திலோ, அவன் குரலிலோ எந்த விதமான தடுமாற்றத்தையும் கண்டதில்லை இராஜாதிராஜன். சிவாச்சாரி போர்க்கலையைப் பற்றி அவனுக்கு நிறையப் போதித்திருக்கிறான். இதுவரை அவனிடம் கழிவிரக்கத்தை அவன் கண்டதே இல்லை. ஒரு கர்ம வீரனாகத்தான் நடந்துகொண்டிருக்கிறான். இதுகாறும் அவன் அந்தண குலத்தாரைப் போல குருதியைக் கண்டு மருளவில்லை. அவன் மனத்தில் உள்ளதைத்திறந்து யாரிடமும் சொன்னதில்லை. சிவாச்சாரியனின் உள்ளுருவத்தை, மன ஓட்டத்தை முதன்முதலாகக் காண்கிறான் இராஜாதிராஜன்.

"சிவாச்சாரியாரே!  'உதகையைக் கொளுத்திவிட்டுச் சிவாச்சாரியாரைச் சிறைமீட்டு வா, இல்லையேல் என முன் வராதே' என்று தந்தையார் என்னை ஆணையிட்டு அனுப்பினார். நான் அரச கட்டளையைத்தான் நிறைவேற்றினேன். இளஞ்சேரனையும் சிறைப்பிடித்து வரத்தான் திட்டமிட்டிருந்தேன். ஆயுதம் எதுவும் இல்லாதிருந்த உங்களைக் கொல்ல அவன் சிறைக்கு வந்தபோது, துணிச்சலுடன் தங்களைப் பிணைத்திருந்த சங்கிலிகளையே துணையாகக் கொண்டு அவனது கழுத்தை நெறித்துத் தலையைப் பிளந்து கொன்றீர்கள்.

"தன்னைக் கொல்ல வரும் பசுவையே கொல்லலாம் என்னும் சாத்திரத்தை நீங்கள் அறியாதவரா! தவிர, நீங்கள் சோழப் பேரரசின் திருமந்திர ஓலைநாயகர் ஆவீர்கள். தாங்கள் இப்படிக் கழிவிரக்கப்படுவது தங்கள் பதவிக்கு அழகு சேர்க்குமா? வீரத்துடன் புலியாக உறுமுங்கள். அதுதான் சரியாக இருக்கும்!" என்று சிவாச்சாரியனை உற்சாகப்படுத்துகிறான் இராஜாதிராஜன்.

"என் கழிவிரக்கத்தைத் தேற்றியதற்கு மிக்க நன்றி இளவரசே! இது நம்முடன் இருக்கட்டும். முக்கியமாக கோப்பரகேசரியாருக்கு இது தெரியவேண்டாம்!" என்று தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்துக் கேட்டுக்கொள்கிறான் சிவாச்சாரி. அவன் கண்கள் சிவந்திருக்கின்றன. "இதுதான் நான் கழிவிரக்கப்படும் முதலும் கடைசித் தடவையும். வேங்கைநாட்டு இளவரசர் நலமாகத் தஞ்சை வந்துசேர்ந்தாரா? சக்கரவர்த்தி அவர்களும், நங்கையும் மற்றும் என் வீட்டில் அனைவரும் நலமாக இருக்கிறார்களா?"

"பாட்டனாரைத் தவிர அனைவரும் நலமாகத்தான் இருக்கிறார்கள் சிவாச்சாரியாரே! இரண்டு திங்கள் முன்பு பெருவுடையார் கோவிலுக்குச் சென்ற பாட்டனார், படியிலிருந்து தவறி விழுந்துவிட்டார். அதில் அவரது கால் எலும்பு முறிந்துவிட்டது. நுட மருத்துவர் முறிவைச் சரிசெய்து தைலம் தேய்த்துக் கட்டுப்போட்டு தற்போழுது குணமடைந்திருக்கிறார்.

"அவர் நீங்கள் சிறைப்பட்டதை அறிந்து மிகவும் வருந்தினார். அக்கா வெளிப்படையாக ஏதும் சொல்லாதுபோனாலும் உள்ளூர மிகவும் நொந்துபோயிருக்கிறாள். தங்களைச் சிறைமீட்டதுமே, விரைவாகச் செல்லும் குதிரைவீரர்கள் மூலம் செய்தி அனுப்பியுள்ளேன்.

"நரேந்திரன் போருக்குத் தானும் வருவதாகச் சொன்னான். தந்தையார்தான் கோழியடிக்க இரு குறுந்தடிகள் தேவையில்லை என்று அவனைத் தடுத்து நிறுத்திவிட்டார். குற்ற உணர்ச்சியுடன் இருக்கும் அவன் தற்போழுது போரில் ஈடுபடுவது முறையல்ல என்று என்னிடம் பிற்பாடு சொன்னார். நாமும் கூடிய வரைவில் திரும்பிச்செல்வோம். சிறையில் இருந்ததால் நீங்கள் மிகவும் மெலிந்திருக்கிறீர்கள். ஓய்வெடுங்கள்!" என்று கூடாரத்தை விட்டு வெளியேறுகிறான் இராஜாதிராஜன்.

சிவாச்சாரி வைக்கோல் மெத்தை இடப்பட்ட கயிற்றுக் கட்டிலில் தலை சாய்க்கிறான். அவன் மனம் இராஜராஜ நரேந்திரனைப் பற்றிச் சிந்தனைசெய்கிறது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நரேந்திரன் அவனுடன் இருந்திருக்கிறான் அக்காலம் முழுவதும் தாமரை இலைத் தண்ணீர்போலத்தான் அவர்களுடைய உறவு இருந்துவந்திருக்கிறது. சிவாச்சாரி எவ்வளவுதான் நட்புக்கரம் நீட்டினாலும் நரேந்திரன் ஒதுங்கியே இருந்திருக்கிறான். இராஜேந்திரனுடைய உத்திரவுப்படி தன்னுடன் நேரத்தைக் கழித்து வந்தானே தவிர, தன்னுடன் இருப்பதற்குச் சிறிதளவுகூட விருப்பம் இல்லை என்பதை அவன் வெளிப்படையாகவே காட்டிவந்தது சிவாச்சாரியனுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

தன் மீது எதனால் நரேந்திரனுக்குக் காழ்ப்பு உணர்ச்சி இருக்கக்கூடும் என்று சிவாச்சாரியனுக்குத் தெரியாமல் இல்லை. ஆயினும், நிலவுமொழியின் மீது தோன்றிய பித்து, அது நிறைவேறாமல் போனதனால் ஏற்பட்ட ஏமாற்றம், தாய் குந்தவியின் கோபம், குதிரைக் காப்பாளன் முன்னால் பட்ட அவமானம் இவற்றிற்கு வடிகாலாக, அவனுடைய மொத்தக் காழ்ப்புணர்ச்சியும் தன் மீது பாய்ந்திருக்கிறது என்று உணர்ந்திருக்கிறான்.

ஆயினும், எல்லாவற்றிற்கும் தான்தான் மூலகாரணம் என்று முடிவு எடுப்பது அரசனாகப் போகும் நரேந்திரனுக்கு அழகல்ல என்பதை எப்படி எடுத்துச்சொல்வது? மறைமுகமாக என்ன சொன்னாலும் அதை உணரும் அளவுக்கு அவனது அறிவுத் திறன் விரிவடையாமல் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் சிவாச்சாரியனுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

வயதில் சிறியவனான இராஜாதிராஜனுக்கு இருக்கும் அறிவு முதிர்ச்சி நரேந்திரனுக்கு இல்லாது போனதை இராஜேந்திரன் உணர்ந்து கொண்டதால்தானே, அவனை உதகைப் போருக்கு அனுப்பவில்லை! இதுவரை ஒரு போரையும் சந்திக்காத நரேந்திரன் எப்படி சோழப்பேரரசின் வட எல்லையில் இருக்கும் வேங்கைநாட்டைக் கட்டியாளப் போகிறான்?

இந்நிலையில் அம்மங்கையை மணந்துகொண்டால், சோழவளநாட்டின் மருமகனாகப் போகும் இவனைத் தூக்கிநிறுத்தவே சோழநாட்டின் தளவாடங்களும், போர் முயற்சிகளும் நிறையச் செலவிடப்பட வேண்டியிருக்குமே என்று சிவாச்சாரி அஞ்சுகிறான். அது மட்டுமன்றி, சோழ அரசின் கவனமும் தேவையின்றி வேங்கைநாட்டின் பக்கமே திரும்ப வேண்டியிருக்குமே!

எப்படியிருந்தாலும் இவன் மீது தனிக்கவனம்தான் வைத்திருக்க வேண்டிவரும்; இவனுக்கும், பிற்கால சோழப்பேரரசுக்கும் தலைவலி காத்திருக்கிறது என்று மட்டும் புரிந்துகொள்கிறான் சிவாச்சாரி. அந்தச் சிந்தனையிலேயே உறக்கம் அவனை ஆட்கொள்கிறது.

பழையாறை அரண்மனை

பிரமாதீச – 1014

"அருள்மொழி, எழுந்திரு! எத்தனை நாள்கள் இப்படிப் படுக்கையிலேயே படுத்துக் கிடப்பாய்? அரசகேசரியான நீ இப்படி மனத்தைத் தளரவிடலாமா? சோழப் பேரரசின் மாமன்னனான உனக்கு இது அழகா?"  கணீரென்று ஒலிக்கும், மிகவும் பழக்கப்பட்ட மிகவும் கனிவான அந்தக் குரல் இராஜராஜரின் காதுகளில் தேனாகப் பாய்கிறது.

குருநாதர் கருவூர்த் தேவரின் குரலல்லவா இது!

திருக்கயிலையிலிருந்து எப்பொழுது அவர் திரும்பி வந்தார்? இனி தனது மனக்கவலையெல்லாம் தீர்ந்துபோய்விடும், தமிழ்த்திருப்பணி எதிர்கொள்ளும் எந்தத் தடைகளும் அவரது வருகையால் இனிமேல் கதிரவனைக் கண்ட பனியாக நீங்கிவிடும் என்ற நம்பிக்கை இராஜராஜருக்குப் பிறக்கிறது. அவரிடம் என்னவெல்லாமோ கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், நாக்கு புரள மறுக்கிறது.

"அருள்மொழி, உன்னைத் திருக்கயிலைக்கு அழைத்துச்செல்ல வந்திருக்கிறேன். ஒளிமயமான, பனி சூழ்ந்த, இறையருள் பொங்கும், சச்சிதானந்தப் பேரின்பமான சிவனாரின் இருப்பிடத்திற்கு அழைத்துச்செல்ல வந்திருக்கிறேன். கண்ணைத் திற! எழுந்திரு! நமக்கு அதிக நேரமில்லை!" மீண்டும் கருவூர்த் தேவரின் குரல் காதில் ஒலிக்கிறது.

'தேவரே! தமிழ்த்திருப்பணி என்று முடியும்? அதை நிறைவேற்றாமல் அப்படியே விட்டுவிட்டு வரச்சொல்கிறீர்களே! என் உடல்நிலையில் என்னால் திருக்கயிலை வர இயலுமா?' என்று அவரது மனம் கேட்க நினைக்கிறது.

"அருள்மொழி, அது சிவனாரின் அருளுடன் நடைந்தேறும். எதையும் நினைப்பதும், ஆக்குவதும், காப்பதும், நிலைநிறுத்துவதும், துடைப்பதும், மறைப்பதும், அருளுவதும் அவனின் செயலல்லவா? நான் செய்ய வேண்டுமே, நான் பார்க்கவேண்டுமே என்று நினைக்கும் தருணமா இது? நான் என்ற எண்ணத்தை நீக்கு! அவன் உன்னை அழைத்துவரச் சொல்லித்தான் நான் வந்திருக்கிறேன். எல்லாவற்றையும் அவனிடம் விட்டுவிட்டு அவனுடன் சேர என்னுடன் கிளம்பு. என் பக்கம் திரும்பு, கண்களைத் திற, என் கைகளைப் பற்றிக்கொள்.  திருக்கயிலைக்கு அழைத்துச்செல்கிறேன்!" அவர் குரலில் குழந்தைக்கு தந்தை சொல்லும் ஆறுதலும், அழைப்பும் இருக்கிறது.

'நீங்கள் இருக்கும்பொழுது எனக்கு என்ன அச்சம், தேவரே? உங்கள் கையைப் பற்றிக்கொண்டால் எனக்கு இளமைக்கான மனவலிமை வந்துவிடும். தேவரே! இதோ எழுந்திருக்கிறேன்!' தனது வலிமையை எல்லாவற்றையும் ஒருசேரத் திரட்டி, கருவூர்த்தேவரின் குரல் வரும் திசையை நோக்கித் திரும்ப விழைகிறார் இராஜராஜர்.

அச்சமயம் சிவாச்சாரி பதற்றத்துடனும், அவசரமாகவும் இராஜாதிராஜனுடன் உள்ளே நுழைகிறான். மஞ்சத்தில் இராஜராஜர் படுத்திருக்கிறார்.

அவரைச் சுற்றி அருள்மொழிநங்கை, இராஜேந்திரன், குந்தவைப் பிராட்டியார், குந்தவி, சோழமாதேவி, மற்ற ராணியர், அரச மருத்துவர், அவரது பணியாளர் ஆகியோர் நின்று கொண்டிருக்கிறார்கள்.

சிவாச்சாரியனுக்கு இராஜராஜரின் தலையும் கால்களும் தெரிகிறது. அவன் வரும் அரவம் கேட்டதும் இராஜேந்திரன் அவன் பக்கம் திரும்புகிறான்.

இராஜராஜரின் தலை சிவாச்சாரியின் பக்கம் திரும்புகிறது. விழிகள் பாதி திறக்கின்றன. அவர் முன் தாடியுடனும் மீசையுடனும், தலைக்கு மேலே தூக்கி முடியப்பட்ட கேசமும் கொண்ட முகம் தெரிகிறது. பின்னால் தெரியும் வெளிச்சம் தலையைச் சுற்றி ஜோதியாகப் பளிச்சிடுகிறது. அவர் முகத்தில் இலேசான புன்னகை மலர்கிறது. அருகில் வந்து நிற்கிறான் சிவாச்சாரி.

இராஜராஜரது வலது கை அவனை நோக்கி மெல்ல உயர்கிறது.  தன் கையை மெதுவாக அவரிடம் நீட்டுகிறான் சிவாச்சாரி.

நீட்டிய அவனது கையைத் தன் கையினால் உறுதியாகப் பற்றிக்கொள்கிறார் இராஜராஜர். அனைவரும் பல நாட்களாக சுயநினைவற்றிருந்த இராஜராஜர் கண் விழித்ததையும், சிவாச்சாரியனின் கைகளைப் பற்றிக்கொண்டதையும் வியப்புடன் நோக்குகிறார்கள்.

இராஜராஜரின் உதடுகள் மெல்ல அசைகின்றன. மெல்லிய குரலில் சிவாச்சாரியிடம் கனிவு ததும்பும் குரலில் கூறுகிறார். நாள் கழித்துத் திரும்பிவரும் தந்தையிடம் குழந்தை பேசும் அன்பு அதில் இருக்கிறது.

"வந்துவிட்டீர்களா கருவூர்த்தேவரே? என்னை நீங்கள் மறந்துவிட மாட்டீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். உங்கள் வருகையால் என் மனக்குறை நீங்கிவிட்டது! தேவரே, என்னைத் திருக்கயிலைக்கு அழைத்துச் செல்லத்தானே வந்திருக்கிறீர்கள்! நான் வந்து விடுகிறேன்? இத்தனை நாள் சோழ நாட்டை நான் சுமந்தது போதும். என்னை என் இறைவனிடம் அழைத்துச்செல்லுங்கள்! தென்னாடுடைய சிவனுடைய காலடியில் நான் தங்களுடன் சரணடைந்து விடுகிறேன்!!  ஓம் நமச்சிவாய!!!"

அவரது புன்னகை அப்படியே உறைந்துபோகிறது. விழித்த கண்கள் அப்படியே நிலைகுத்தி நின்று விடுகின்றன.

(இரண்டாம் பாகம் முற்றும்)

பேரரசர் இராஜராஜ சோழர் விண்ணுலகை அடைந்துவிட்டதால்…

*அவரின் கனவு கானல்நீராகவே மறைந்து போகுமா?

*அவர் மகன் இராஜேந்திரன் தமிழ்த் திருப்பணியைத் தொடருவானா? 

*வேங்கைநாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரன் திருப்பணிக்கு எவ்வகையில் முட்டுக்கட்டை போடுவான்? 

*பாண்டியர்கள் தங்களது அவமானத்திற்குப் பழிதீர்த்துக் கொள்வார்களா?

*தமிழர்களின் பெருமையைத் தங்கச்சுருளின் மூலம் அறிந்துகொள்ளும் ஈஸ்வரன், காமாட்சி, அழகேசன், ஏகாம்பரநாதன், நிமிஷா ஆகியோர் என்ன செய்யப்போகிறார்கள்? 

இவற்றிற்கான பதில்களை இனிவரும் பாகங்களில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com