பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 8

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 8

ஒரு அரிசோனன்

வெள்ளாற்றின்40 தென்கரை, பாண்டிநாடு

பரிதாபி, ஆனி 18 – ஜூலை 3, 1012

ஞாயிறு கீழ்த்திசையிலிருந்து மேலே கிளம்ப ஆரம்பித்தாலும், அதை மேகங்கள் மறைக்கின்றன. சோழநாட்டிற்கும் பாண்டிநாட்டிற்கும் எல்லையான வெள்ளாற்றின் தென்கரையில் பாண்டியப்படை தண்டூன்றியிருக்கிறது. பெரும்பாலும் வரண்டே காணப்படும் வெள்ளாற்றில், நான்கு நாள்களாகப் பெய்த மழையினால் கரை புரண்டு ஓடும் தண்ணீர், வேகமாகத் தஞ்சையை அடைந்துவிட வேண்டும் என்று பொன்னமராவதியிலிருந்து கிளம்பிய பாண்டியப்படையைக் கடந்த இரண்டு நாட்களாக அதன் தென்கரையிலேயே தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறது.

காட்டாறான வெள்ளாற்றில் ஓடும் தண்ணீரின் ஆழம் அதிகம் இல்லாவிட்டாலும், சேறும் சகதியுமாக ஆற்றின் கரைகளும், படுகையும் ஆற்றைக் கடக்கவிடாது தடுக்கின்றன. கால் காதத்திற்கும் மேலாக, அரைக் காதத்திற்கும் குறைவாகவே ஆற்றின் அகலம் இருந்தாலும், கரைபுரண்டோடும் வெள்ளம், களிமண் பகுதியான கரைப்பகுதியில் தண்ணீர் கோர்த்துக்கொண்டு வழுக்கலாகச் செய்துவிட்டிருக்கிறது.

நடந்தால் சகதியில் அரைச்சாண் அளவுக்குக் கால் புதைகிறது. குதிரைகளுக்கும் அதே நிலைதான். இரதங்களைப் பற்றியும், வண்டிகளைப் பற்றியும் கேட்கவே வேண்டாம். எங்கோ காற்றில் ஒடிந்து விழுந்த மரங்களின் கிளைகள் தண்ணீரில் மிதந்து செல்கின்றன.

நசநசவென்று தொடர்ந்து பெய்யும் மழையில் நனைந்ததால் வீரரர்கள் எரிச்சல் மிகுந்து காணப்படுகின்றனர். கரைகளின் இருபுறமும் ஓங்கி வளர்ந்துநின்ற பனைமரங்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் வியப்பைத் தருகிறது. கிட்டத்தட்ட ஐநூறு மரங்களாவது வெட்டப்பட்டிருக்கும். வெட்டப்பட்டு நிற்கும் மரத்தடிகளைப் பார்த்தால் வெட்டி ஒரு வாரம் கூட ஆகியிருக்காது என்று தோன்றுகிறது.

இவ்வளவு மரங்களை யார், ஏன் வெட்டி எடுத்திருப்பர்? புதிதாகக் குடிசைகள் போடவும், வீடுகளுக்கு உத்திரங்கள் போடவும் யாராவது எடுத்திருப்பார்களோ? பதினைந்து நாள்களுக்கு முன்னர்கூட மரங்கள் வெட்டப்படவில்லையே? மரங்கள் இருந்திருந்தால் அவற்றை வெட்டித் தெப்பம்செய்து ஆற்றைக் கடந்திருக்கலாமே என்று படைத்தலைவர்கள் எரிச்சல் படுகிறார்கள்.

தாகத்தைத் தணிக்கப் பனை நுங்குகளாவது உதவியிருக்கும். இடைவிடாத மழையினால் உண்டாகிய சகதியில் மாட்டிக்கொண்டு, உணவு கொண்டுவரும் வண்டிகள் வந்து சேரவில்லை. மேலும் தரையில் தண்ணீர் ஊறி இருப்பதாலும், தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருப்பதாலும் நெருப்பு மூட்டிச் சமைக்கக்கூட இயலாது போனது. ஆகையால் பெரும்பாலோர் இரண்டு நாள்களாகச் சாப்பிடவில்லை.

நடந்துசெல்லும்போது அங்காங்கு வளர்ந்து தண்ணீரில் மறைந்திருக்கும் காரைச்செடிகளின் முட்கள் குத்தி வீரர்களுக்கு எரிச்சலை மூட்டிக்கொண்டிருக்கின்றன. இதுதவிர ஓடும் தண்ணீரில் மிதந்து வரும் பாம்புகள் தங்களைக் கடித்துவிடாமல் இருக்கவேண்டும் என்று வாளால் வெட்ட முயலும்போது சில நழுவிச் செல்வதோடு மட்டுமல்லாமல், சில வீரர்களைக் கடிக்கவும் செய்கின்றன. பாம்புகள் மிகுந்த அப்பகுதியில் கிட்டத்தட்ட இருபது முப்பது பேர் பாம்புக்கடிக்கு இரையாகுகின்றனர்.

————————————————

[40 புதுக்கோட்டைக்குத் தெற்கில் வெள்ளாறு ஓடுகிறது.]

குதிரைகளும் மிரண்டுபோய் குழப்பத்தை உண்டாக்குகின்றன. மழை நின்றபாடில்லை. தனது கூடாரத்திலிருந்து வெளிவருகிறான் அமரபுஜங்கன். கூடாரத்தைச் சுற்றிப் பெய்துகொண்டிருக்கும் மழை உள்ளேயும் தண்ணீரைக் கொணர்ந்திருக்கிறது. பொன்னமராவதியிலிருந்து தஞ்சைக்குக் கிளம்பியபோது அவனது முகத்தில் இருந்த உற்சாகம் இப்போது மறைந்திருக்கிறது. தலையில் விழும் மழைத் தண்ணீர் கண்களில் வழிந்து நிறைந்து காட்சியை மறைக்கிறது.

"ஐம்பது காத தூரத்தில் இருக்கிறது தஞ்சை! மிஞ்சிப் போனால் நமது படைகள் இரண்டு நாட்களில் தஞ்சை எல்லையை அடைந்திருக்கும். ஒருநாள் இடைவிடாத தாக்கலில் தஞ்சைக் கோட்டை நமக்கு விழுந்துவிட்டிருக்கும். அதை இயலாமல் செய்துவிட்டதே, இந்த மழை!" என்று குமுறுகிறான் அமரபுஜங்கன். திடுமென்று அவனது காலைச் சுற்ற ஆரம்பிக்கிறது ஒரு நெளியும் பாம்பு.

அதைக் கண்ட அமரபுஜங்களின் மெய்காப்பாளன் திருமாறன் சடாரென்று அதன் வாலைப்பிடித்துத் தலைக்குமேல் சுழற்றி கூடாரத்தின் வெளிக் கயிற்றின் மேல் பலமாக அடிக்கிறான். நாலைந்து அடிகளில் இரத்தவிளாறாகிச் சாகிறது அப்பாம்பு.

ஒருகணம் அமரபுஜங்கனுக்குப் பேச்சே எழவில்லை. திருமாறன் அவ்வளவு வேகமாகச் செயல்பட்டிராவிட்டால் போரில் விழுப்புண் ஏற்று மரணமடைவதற்குப் பதிலாக பாம்பு கடித்தல்லவா நாம் மரித்திருப்போம்! சூழ்நிலையைக் கவனிக்காமல் சிந்தனையைச் செலுத்துவது எவ்வளவு தவறு!

"நன்றி திருமாறா! மிக்க நன்றி!" என்று தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையைக் கழட்டி திருமாறனின் கழுத்தில் அணிவிக்கிறான் அமரபுஜங்கன். "உனக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்!"

"அரசே! ஆழந்த சிந்தனையில் இருக்கும் தங்கள் காலை ஒரு பாம்பு சுற்றும் அளவுக்குக் கவனமில்லாது நானும் இருந்துவிட்டேனே! என்னை மன்னியுங்கள்! தண்டனை பெற வேண்டிய என்னை முத்து மாலையைச் சூட்டி வெட்கப்படச் செய்துவிட்டீர்களே! கொஞ்சநேரம் நான் தாமதித்திருந்தால் தங்களையே…" திருமாறனின் முகம் கவலையில் சிவக்கிறது.

உடனே அருகிலிருக்கும் குதிரையை இழுத்து வருகிறான். "தங்களின் நீண்ட ஆயுள் பாண்டி நாட்டிற்கு அவசியமானது! குதிரையில் அமர்ந்துகொள்ளுங்கள். இப்பகுதியில் பாம்புகள் நிறைந்திருக்கின்றன. மழைத் தண்ணீர் அவற்றை இழுத்து வருவதால் அவை மிகவும் சீற்றத்துடன் இருக்கின்றன. தண்ணீர் இல்லாத மேட்டுப்பகுதிக்குச் செல்வோம். வாருங்கள். அரசே!"

குதிரையில் அமரபுஜங்கன் அமர்ந்ததும், திருமாறன் அதன் கடிவாளத்தைப் பிடித்து மெதுவாக இழுத்துச் செல்கிறான். அவர்களுக்கு முன்னால் அரைக்காத தூரத்தில் ஆற்றங்கரைப் பக்கம் இருக்கும் படையினரிடம் ஒரு சலசலப்பு ஏற்படுகிறது.

அங்கிருந்து ஒரு குதிரை வீரன் இவர்கள் பக்கம் வருகிறான். "அரசே! அக்கரைப்பக்கம், திடுமென்று பனைமரங்கள் கட்டப்பட்ட வண்டிகள் வருகின்றன. அவற்றை யானைகள் இழுத்து வருகின்றன. அவை என்னவென்று தெரியவில்லை." என்று பரபரப்புடன் கூறுகிறான்.

"பனைமரங்கள் கட்டப்பட்ட வண்டிகளா? என்ன உளறுகிறாய்? திருமாறா, வா! என்னவென்று சென்று பார்ப்போம்" என்று கிளம்பும் அமரபுஜங்கனைத் தடுத்து நிறுத்துகிறான் திருமாறன்.

"இந்த மழையில் தாங்கள் அங்கு செல்ல வேண்டாம். ஏனாதி ஒருவரை அனுப்பினால் போதும். எனக்கு இந்தச் செய்தி நல்ல செய்தியாகத் தோன்றவில்லை!" என்று குதிரையைத் திருப்புகிறான் திருமாறன்.

அவனது உள்ளுணர்வை மதிக்கும் அமரபுஜங்கன் மேட்டுப் பகுதியை நோக்கி நகர்கிறான். வெள்ளாற்றின் கரையருகே நிற்கும் வீரர்கள் பனைமரங்களால் செய்யப்பட்ட விசித்திரமான வண்டியைக் கண்டு திகைக்கிறார்கள். பனைமரங்களின் ஓலைகள் வெட்டப்பட்டு அவை மொட்டையாகத் தெரிகின்றன. தொலைவில் இருப்பதாலும், வடகரை திட்டாக உயர்ந்திருப்பதாலும் அவற்றின் அடிப்பாகம் வீரர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை.

அந்தப் பனைமரங்களுக்கு நடுவில் பெரிதாக இன்னொரு பனைமரம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. அந்தப் பனைமரம் மற்றொரு பனைமரத்துடன் இணைக்கப்பட்டு கீழே செல்கிறது. உயர்ந்த பனைமரத்தின் நுனியில் பெரிய பாறாங்கல் கட்டப்பட்டு மெல்ல மேலே உயர்கிறது. அந்தப் பாறாங்கல் தரையிலிருந்து கிட்டத்தட்ட அறுபதடி உயரம் சென்று நிற்கிறது. கீழே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

அந்தப் புதுவிதமான வண்டிக்குப் பின்னால் இருபுறமும் யானைகளின் தலைகள் புலப்படுகின்றன. அந்த மாதிரி பத்து வண்டிகள் தோன்றுகின்றன. இதுவரை பாரத்திராத அந்த வண்டிகளை மந்திரத்தால் கட்டுண்டதுபோல வைத்தகண் வாங்காமல் பார்க்கிறார்கள். திடுமென்று பாறாங்கல் கட்டப்பட்டிருக்கும் பனைமரம் வேகமாகக் கீழே இறங்குகிறது. அதன் கீழ்ப்பக்கம் மேலே உயர்ந்து, அதில் கட்டப்பட்டிருக்கும் பெரிய மரத்தொட்டியிலிருந்து நூற்றுக்கணக்கான கற்கள் வானத்தில் பறந்து வெள்ளாற்றைக் கடந்து இக்கரையில் இருக்கும் வீரர்கள் மேல் விழுகின்றன.

கையகலமே இருந்தாலும், விழும் வேகத்தில் அந்தக் கற்கள் வீரர்களின் தலைகளை உடைக்கின்றன. அடிபட்ட குதிரைகள் தலைதெறிக்க ஓடுவதால் அவற்றின் குளம்புகளில் உதைபட்டும் மிதிபட்டும் வீரர்கள் கீழே சாய்கின்றனர். கற்களிலிருந்து தப்பிக்க ஓடும் வீரர்கள் சகதியில் வழுக்கி விழ, ஒரே குழப்பம் ஏற்படுகிறது. இவர்கள்மீது இடறிக் கீழே விழுகின்றனர், இன்னும் பலர். வழுக்கி விழுபவர்கள் மேல் ஏறி மற்றவர்கள் ஓடுவதால் கீழே விழுந்தவர்கள் இன்னும் படுகாயத்திற்கு உள்ளாகிறார்கள்.

ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை அந்தப் பனைமர வண்டிகளிலிருந்து கற்கள் சரமாரியாக வந்தவண்ணம் இருக்கின்றன. அந்தக் கற்கள் கிட்டத்தட்ட ஒருகாத தூரத்திலிருந்து கிட்டத்தட்ட இருநூறு, முந்நூறு அடி உயரம் சென்று வருவதால், அவற்றின் வேகமும், அவற்றால் விளையும் சேதமும் மிகவும் அதிகமாக இருக்கிறது. பாண்டிநாட்டு வில்லாளிகளின் அம்புகள் அந்த வண்டிகளை அடைய முடியாத அளவுக்கு தொலைவில் இருப்பதால் அவற்றை ஒன்றும்செய்ய இயலவில்லை. கற்களுக்கு அடுத்தபடியாக ஈட்டிகளும், அம்புகளும் அந்தப் பனைமர ஏவுகணைவண்டிகளால் எய்யப்படுகின்றன. அம்புகள் கற்களை விட இலேசாக இருப்பதால் அவை இன்னும் அதிக தூரம் சென்று தப்பி ஓடும் படைவீரர்களின் உடம்பில் தைக்கின்றன.

ஈட்டிகள் குதிரைகளின் மீதும், யானைகளின் மீதும் விழுந்து தைப்பதால் அவை கட்டுக்கடங்காமல் ஓடி அதிகச் சேதத்தை விளைவிக்கின்றன. இந்த எதிர்பாராத தாக்குதலினாலும், படைகள் சிதறி ஓடுவதாலும், படைகளைக் கட்டுக்குக்கொண்டுவர முடியாமல் திணறுகின்றனர் படைத்தலைவர்கள்.

மழை திடுமென்று நிற்கிறது. மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பதைப்போல கிட்டத்தட்ட அரைமணி நேரம் இப்படிப்பட்ட தாக்குதல் நடந்தேறுகிறது. மரண ஓலமும் கூக்குரலும் வானைப் பிளக்கிறது.

திருமாறனும் அமரபுஜங்கனும் தள்ளி இருந்து இந்தக் காட்சியைக் கண்டு, ஒன்றும்செய்ய இயலாது உள்ளம் குமுறுகின்றனர். "தளபதியாரே! படைகளைக் கட்டுக்குள்கொண்டு வருவீராக! முன்னால் ஓடி வருபவர்களுக்கு உதவியாக இருக்கும் பொருட்டு பின்னால் இருக்கும் படையை நகர்த்துவீராக! பொன்னமராவதியிலிருந்து மருத்துவர்கள் பலரை அழைத்துவரும் வேலை உடனே தொடரட்டும்!" என்று உத்தரவுகளைப் பிறப்பிக்கிறான் அமரபுஜங்கன்.

"அரசே! தாங்களும் பொன்னமராவதிக்குத் திரும்புங்கள்! மழை நின்றபிறகு திரும்பி வரலாம்!" என்று பாண்டியர் படைத்தலைவரும், திருமாறனும் அமரபுஜங்கனை வற்புறுத்துகிறார்கள்.

"முடியாது. என் வீரர்களை விட்டுவிட்டுக் கோழையைப்போல நான் புறமுதுகிட்டு ஓட மாட்டேன்!" என்று உறுமுகிறான் அமரபுஜங்கன்.

"அரசே! இப்பொழுது நடப்பது போரல்ல, தாங்கள் பின்வாங்க மாட்டேன் என்று கூறுவதற்கு! இது ஒரு படுகொலை! நம் முன்னால் வந்துநின்று எதிர்த்தா போர் செய்கிறார்கள்? வெள்ளாற்றிற்கு மறுகரையில் நின்றுகொண்டு புதிதான இயந்திரங்களை வைத்துக்கொண்டு கவண்கல் எறிந்து விளையாடுகிறார்கள். இது கோழைகள் நம்மீது கல் எறிந்து விளையாடும் ஒரு விளையாட்டு! இதற்கு நம் வீரர்களைப் பலிகடாக்கள் ஆக்குவதும், நாம் பலிகடா ஆகுவதுமா வீரம்? பொன்னமராவதிக்குத் திரும்புவோம். மழை நின்றதும் மீண்டும் தாக்குதலைத் தொடரலாம். உயிரோடு இருக்கும் ஒவ்வொரு பாண்டிய வீரனும் பத்து சோழ வீரர்களை எமனுலகுக்கு அனுப்புவான்!"

அமரபுஜங்கன் சிறிதுநேரம் சிந்தனை செய்துவிட்டு, அப்படியே செய்யலாம் என்று தலையசைத்துவிட்டுப், பொன்னமராவதி திரும்பப் படைகளுக்கு உத்தரவிடுகிறான்.

அந்த உத்தரவு சிங்களப் படைத்தலைவனுக்குத் தெரியுமுன்னர் அவன் தனது யானைகளுடன் வெள்ளாற்றில் இறங்கிவிடுகிறான். அவன் செல்வதைப் பார்த்தவுடன் சிங்களப்படைகள் தங்கள் படைத்தலைவனைத் தொடர்கின்றனர் அவன்மீது சரமாரியாக அம்புகளும் ஈட்டிகளும் பொழியப்படுகின்றன. அதிலிருந்து சோழப்படைகள் வெள்ளாற்றிற்கு மறுபுறத்தில் எங்கோ மறைந்திருக்கின்றன என்று தெரிகிறது. அவர்களின் முன்னேற்றம் மிகவும் கடினமாகத்தான் இருக்கிறது. அக்கரையை அடைவதற்குள் பாதிப்பேர்களின் கதை முடிந்துவிடுகிறது. சிங்களப் படைத்தலைவனின் யானை அக்கரையை அடைந்த பின்னர் மெல்லச் சரிந்துவிழுகிறது. அதன் மேல் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேலான ஈட்டிகள் பாய்ந்து அதன் உடல் முழுவதும் இரத்தப் பெருக்காக இருக்கிறது. யானையுடன் அதன் மேலிருக்கும் அம்பாரமும் சரிகிறது. அதிலிருந்து சிங்களப் படைத்தலைவனின் உயிரற்ற உடல்சரிந்து கீழே விழுகிறது.

அவர்கள் மீதும் பழையபடி கல்மாரி பொழிகிறது. இதிலிருந்து சோழர்கள் தங்களது ஏவுகணைக் கருவியைப் பல இடங்களில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

வெள்ளாற்றில் ஓடும் சகதி கலந்த பழுப்பு நிறமான வெள்ளம், படைவீரர்களின் இரத்தத்தினால் சிவப்பாக மாறுகிறது. பாண்டிய, சேரப் படைகள் பின்வாங்குவது என்று தீர்மானித்துவிட்டபடியால் சிங்களப்படை தனித்து விடப்படுகிறது. வெள்ளாற்றுக்கு மறுபுறம் எப்படிப்பட்ட போர் நடக்கிறது என்று இந்தப் பக்கத்திலிருந்து தெரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் மதியமாகியும் யாரும் திரும்ப வராததிலிருந்து சிங்களப்படைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டன என்று ஊகிக்கின்றனர்.

"பாவம், சிங்களப் படைத்தலைவன்! தன் உயிருடன், சிங்களப் படைகளின் உயிரைக்கொடுத்து, என் தாத்தா வீரபாண்டியனாரின் தோல்விக்கும் மரணத்திற்கும் காரணமாக இருந்த நாலாம் மகிந்தரின் அவச்சொல்லை நீக்கிவிட்டானே! பொறுத்திருந்து அனைவரிடமும் இணைந்து போரிட்டிருக்கலாமே!" என்று வருந்துகிறான் அமரபுஜங்கன்.

அன்று காலை மட்டும் ஆறாயிரம் பேருக்கு மேல் இறந்துவிட்டதாகக் கணக்கர்கள் செய்தி தெரிவிக்கிறார்கள். போர் நடக்காமல் இப்படி ஒரு இழப்பு நேர்ந்தது அவனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. மேலும், கவண்கற்களையும் ஈட்டிகளையும் கிட்டத்தட்ட ஒருகாத தூரம் எறியும் ஏவுகணைக் கருவிகள் எப்படிச் சோழரிடம் வந்துசேர்ந்தன, அவை எப்பொழுது செய்யப்பட்டன, அவை எவ்வாறு இயங்குகின்றன என்று தெரியாமல் குழம்பினான்.

இவ்வளவு பெரிதான எந்திரங்களைப் பற்றி ஒற்றர்களிடமிருந்து ஒரு தகவலும் வரவில்லையே, அது எப்படிச் சாத்தியமாயிற்று என்றும் குழம்புகிறான். மாலையில் மழை முழுவதும் நின்று போகிறது. கதிரவன் மேகங்களைக் கிழித்துக்கொண்டு எட்டிப் பார்க்கிறான்.

* * *

திருநின்றவூர்

பரிதாபி, ஆனி 18 – ஜூலை 3, 1012

காஞ்சிக்கு இன்னும் ஐம்பது காத தூரம் இருக்கிறது என்பதை அறிந்துகொண்ட இராஜேந்திரன், அன்று இரவைத் திருநின்றவூரில் கழிக்கத் தீர்மானிக்கிறான். தூரத்தில் திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவில் விமானம் தெரிகிறது. அதற்குச் சற்று தூரத்தில் பக்தவத்சலப் பெருமாள் கோவிலின் விமானமும் தெரிகிறது. இடைவிடாது ஓடிய களைப்பினால் அவனது குதிரையின் வாயில் நுரை வழிகிறது. இதற்குமேல் விரட்டினால் குதிரை இறந்து விடக்கூடும் என்று உணர்கிறான்.

அவன் வேங்கைநாட்டிலிருந்து கிளம்பி பன்னிரண்டு நாள்கள் ஆகிவிட்டன. தினமும் நாற்பது காதத்திற்குமேல் ஓய்வில்லாத குதிரைப் பயணம் செய்து வந்திருக்கிறான். அவனுடன் கிட்டத்தட்ட இரண்டாயிரம் குதிரை வீரர்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். மூன்று நாழிகைகளுக்கு ஒரு தடவை மாற்றுவதற்காக அவனுக்கு மாற்றுக் குதிரைகளும் ஆளில்லாமல் உடன் வருகின்றன. அவனுடைய எண்ணமேல்லாம் எப்படியாவது தஞ்சையை அடைந்து தனது தந்தைக்கு உதவியாகப் போரிட்டுப் பாண்டியப் படைகளை அழிக்கவேண்டும் என்பதுதான்.

தானிருக்கும்போது, அறுபத்தைந்து வயதான அவர் இப்பொழுது போர்செய்யச் செல்கிறார் என்பதை அவனால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை.

வேங்கை நாட்டில் குந்தவியின் அந்தப்புரத்தில் குறியீட்டு மொழியில் கிடைத்த ஓலையைப் படித்தவுடன் அவன் உள்ளம் பதறியது. "பாண்டியன் நாற்பதாயிரம் படை வீரர்களுடன் தஞ்சையைத் தாக்க முடிவு செய்திருக்கிறான். நம்மிடம் இருபத்தைந்தாயிரம் படை வீரர்களே இருக்கிறார்கள். கிடைக்கும் படையுடன் தஞ்சைக்கு வர நீ உடனே முயற்சி செய். நாங்கள் கடைசி வீரர்கள் உள்ளவரை தஞ்சைக்காகப் போராடுவோம்!" என்பதைத் தவிர அதில் வேறு எச்செய்தியும் இல்லை.

இராஜராஜரின் முத்திரை அரக்கின் மேல் பதிக்கப்பட்டிருந்ததால்தான் அந்தச் செய்தி உண்மையானது என்ற நம்பிக்கைக்கு அவனால் வரமுடிந்தது. தனது விடுதிக்குச் சென்ற இராஜேந்திரன் உடனே தஞ்சை கிளம்ப முடிவு செய்தான்.

சோழப்படைகளின் வடமண்டலத் தண்டநாயகரின் விடுப்புப்படை மெதுவாகச் செல்வதனால், தற்சமயம் அது காஞ்சியை நெருங்கிக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கவே, காஞ்சியில் அவர்களைச் சந்தித்து கூட்டிச்செல்லலாம் என்று முடிவு செய்தான்.

தன்னுடன் தலைசிறந்த இரண்டாயிரம் குதிரைவீரர்களை உடனே கிளம்புமாறு பணித்தான். அவர்களுக்குப் பின்னால் ஐநூறு யானைகளை எவ்வளவு விரைவாகத் தஞ்சைக்கு அனுப்பமுடியுமோ, அவ்வளவு விரைவில் அனுப்பவும் ஆணையிட்டான். இந்த ஏற்பாடுகள் அனைத்தும்செய்து முடிக்கவும், திரிபுவனமாதேவி அம்மங்கையுடனும், குந்தவியுடனும் அங்கு வந்துசேரவும் சரியாக இருந்தது.

அவர்களிடம் விவரத்தை முழுவதும் சொல்லாமல், இராஜராஜர் அவசரமாகத் தன்னை அழைத்திருப்பதால் தான் உடனே சோழநாடு செல்லவேண்டும் என்று மட்டுமே தெரிவித்தான். தான் உடனே கிளம்புவதால் விமலாதித்தனிடம் விடைபெற்றுக்கொண்டு செல்ல இயலாது, விமலாதித்தனுக்கு விவரத்தைத் தெரிவிக்குமாறு குந்தவிக்குச் சொல்லிவிட்டுக் கிளம்பினான். நெருக்கடியான நிலையில் தான் சோழநாடு செல்வது அங்கிருந்து கிளம்பும்வரை யாருக்கும் தெரியக்கூடாது என்பதால் அப்படிச் சொல்கிறான் என்பதை உணர்ந்த குந்தவி, இராஜேந்திரனுக்கு தடைசொல்லாமல் விடைகொடுத்து அனுப்பினாள்.

… தன்னிடமிருந்து செய்தி வரும்வரை அம்மங்கையையும், திரிபுவனமாதேவியையும் கண்ணிமை போல் பாதுகாத்து வருவதற்காக ஐநூறு தற்காப்புப் படையினரை ஏற்பாடு செய்திருப்பதாக அறிவித்துவிட்டுக் கிளம்பியதையும், கனத்த இதயத்துடன் அவனுக்கு அம்மூவரும் விடைகொடுத்து அனுப்பியதையும் நினைவுகூர்கிறான் இராஜேந்திரன்.

குதிரை திருநின்றவூருக்குள் நுழைகிறது. சோழ இளவலின் வருகையால் திகைத்துப்போன ஊர்த்தலைவர், பரக்கப்பரக்க ஓடிவந்து வரவேற்கிறார். கோவில் விடுதியில் தான் தங்கப்போவதாகச் சொல்கிறான் இராஜேந்திரன். தன்னுடன் இரண்டாயிரம் வீரர்கள் வந்திருப்பதாகவும், அவர்கள் அவசரப்பணியில் வந்திருப்பதால் தங்களுடன் உணவு கொண்டுவரவில்லை என்றும், அவர்களுக்கு உணவும், குதிரைகளுக்குத் தீவனமும் வேண்டும் என்று கேட்கிறான். உணவுக்கும், தீவனத்திற்கும் உரிய விலையைப் பொற்காசுகளாகக் கொடுத்து விடுவதாகவும் சொல்கிறான்.

நெகிழ்ந்து போகிறார் ஊர்த்தலைவர். வராத விருந்தினராக நாட்டுக் காவலரான அரசர் தங்கள் ஊருக்கு வந்திருப்பதால் தாங்கள் உணவுக்கு எந்த விலையும் வாங்க மாட்டோம் என்றும், தன் வீட்டிலிருந்து அவனுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் உணவு உடனே சமைத்து எடுத்து வருவதாகவும் இருதயாலீஸ்வரர் மற்றும் பக்தவத்சலப் பெருமாள் கோவில்களின் மடைப்பள்ளிகளில் வீரர்களுக்கு உணவு சமைக்கச் செய்தி அனுப்புவதாகவும் சொல்கிறார்.

கோவில்களில் சமைப்பதால், புலால் உணவு கிடைக்காது என்று தெரிவிக்கிறார். அதனால் குறையொன்றுமில்லை என்று அறிவித்த இராஜேந்திரன், தனக்கும் சைவ உணவே கொடுக்குமாறு தெரிவிக்கிறான்.

அதன்பின் இருபது குதிரை வீரர்களை, உணவு உண்டுவிட்டுக் காஞ்சி செல்லுமாறு பணிக்கிறான். மறுநாள் தான் காஞ்சி வந்துசேருவதற்குள், அங்கு இருக்கும் காலாள், குதிரை, யானைப் படைகள் அனைத்தும் தஞ்சை புறப்பட ஆயத்தமாக இருக்கவேண்டும் என்றும் செய்தி எழுதுவித்து இலச்சினையைப் பதித்து அனுப்புகிறான்.

கோவில் குளத்தில் குளித்து, இறைவனைப் பணிகிறான், இராஜேந்திரன். இதயத்தைப்போல வடிவமைக்கப்பட்டிருக்கும் உட்பிரகாரத்தின் கருவறையில் வீற்றிருக்கும் இருதயலீஸ்வரைக் குழைந்து வணங்குகிறான். "இறைவா, என் தந்தைக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாவண்ணம் காப்பாற்றுவாயப்பா! சைவம்தழைக்க நாங்கள் திருப்பணி செய்கின்றோம். உனக்குப் பலப்பல கோவில்களைக் கட்டித் திருப்பணி செய்த விஜயாலய சோழனின் வழிவந்த நாங்கள் உன்திருப்பணியைத் தொடர அருள் செய்யுமய்யா! ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் கற்கோவில்களைக் கட்டி சைவத்தின் பெருமை நிலைக்கச் செய்வோம். இதற்கு உன்னருள் வேண்டுமய்யா! அதற்கு எனக்குத் திறனைக்கொடுத்து அருள்வாயப்பா!" என்று உள்ளம் கசிந்து வேண்டிக்கொள்கிறான்.

பூசை செய்த சிவாச்சாரியார்கொடுத்த திருநீறைப் பணிவுடன் நெற்றியில் தீட்டிக்கொண்டு இறைவனின் பிரகாரத்தைச் சுற்றிப் பணிந்துவிட்டு கோவில் விடுதிக்குத் திரும்பி வருகிறான். அங்கு ஊர்த்தலைவர் உணவுடன் காத்துக்கொண்டிருக்கிறார். ஊர் நலத்தை விசாரித்து அறிந்தபின் தன் பரிவாரத்துடன் உணவுண்டுவிட்டு, மறுநாள் செய்யவேண்டியதைப் பற்றிய சிந்தனையில் ஆழ்கிறான்.

* * *

பிரான்மலை

பரிதாபி, ஆனி 18 – ஜூலை 3, 1012

பிரான்மலையின் வடபுறம் சோழப்படைகள் தண்டூன்றி இருக்கின்றன. பொன்னமராவதிக்கு ஐந்து கல் தொலைவில் மேற்கிலிருந்து தென்மேற்குவரை படர்ந்திருக்கும் பிரான்மலை அவர்களுக்கு மறைவிடத்தை அளித்து, அவர்கள் இருப்பது பாண்டியர்களுக்குத் தெரியாமல் செய்திருக்கிறது. சிவாச்சாரியனின் ஆலோசனைப்படி இரண்டாயிரம் வீரர்களை மட்டுமே வெள்ளாற்றிற்கு வடகரையில் நிறுத்திவிட்டு, பத்தாயிரம் வீரர்களுடனும், இருநூற்றைம்பது யானைகளுடன் மழை ஆரம்பித்ததுமே வெள்ளாற்றைக் கடந்து பிரான்மலைக்கு வந்துவிடுகிறார் இராஜராஜர்.

சிங்களப் படைத்தலைவன் இறந்தான் என்ற செய்தி அவர்களுக்கு மிகவும் உற்சாகமளிக்கிறது. மேலும் தங்களுக்கு ஒரு வீரன்கூட நஷ்டமில்லாமல் ஆயிரக்கணக்கான எதிரி வீரர்களை வீழ்த்திய திட்டத்திற்கு சிவாச்சாரியனைப் பாராட்டுகிறார் இராஜராஜர்.

"சிவாச்சாரியாரே, யாம்கூட முதலில் உமது போர்த்திட்டம் பித்தன் மதுவுண்டு உளறுவது மாதிரி இருக்கிறதே என்றுதாம் நினைத்தோம். கணநேரம் சிந்தித்தபின் உமது திட்டத்தின் உள்நோக்கத்தைப் புரிந்தறிந்து கொண்டோம். படைநடத்துதலை அடிக்கடி மாற்றவேண்டியிருக்கும் என்று நீர் சொன்னதின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு வருகிறோம். மழைபெய்ய ஆரம்பிக்கும்பொதே படையை இரண்டாகப் பிரித்து முக்கால்வாசிக்கும் மேலானபேரை பிரான்மலைக்குச் சென்று மறைந்துகொள்ளச் சொன்னது சிறப்பான திட்டம். இயற்கையையும் நமக்கு சாதகமாக போருக்குப் பயன்படுத்திய உமது அறிவுத்திறன்தான் என்னே! இதுவும் நீர் கற்ற சீனப் போர்முறைகளின் ஒன்றோ?" என்று புன்னகையுடன் வினவுகிறார்.

முகத்தில் எந்த ஒரு சலனத்தையும் காட்டாமல் அமைதியாக, "தங்களுக்கும் சோழநாட்டிற்கும் பணிசெய்ய ஒரு வாய்ப்புக் கிடைத்தது, எல்லாம்வல்ல எம்பெருமானின் அருள், சக்கரவர்த்திகளே! நான் வெறும் கருவிதான். எந்தப் புகழுக்கும் நான் பாத்திரமானவன் அல்ல. ஏவுகணைக் கருவிகளைச் செய்த தச்சர்களும், கொல்லர்களும், அவற்றைத் திறமையாக இயக்கிய யானைப்படைத்தலைவர்களும்தான் இப்பாராட்டுக்கு உரியவர்கள்!" என்று அவன் அடக்கத்துடன் பதிலளித்தது அருகில் இருந்த அனைவருக்கும் மகிழ்வைத் தருகிறது.

"அதுமட்டுமல்ல சக்கரவர்த்திகளே! இரவோடிரவாக வெள்ளாற்றங்கரையில் இருந்த பனைமரங்களை வெட்டி, ஏவுகணைக் கருவிகளை செய்வித்ததும் மிகவும் பிரமாதம்! மரங்கள் நீங்கியதால் கற்களைக் குறிபார்த்து எறியத் தடை எதுவும் இல்லாமல் இருந்தது. நாங்கள் அனைவரும் சிவாச்சாரியாரின் அறிவுத் திறனை ஒருமனதாகப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்!" என்று பெருமிதத்துடன் கூறுகிறார் தென்மண்டலப் படைத்தலைவர்.

"நாம் இங்கு இருக்கிறோம் என்பது பாண்டியர்களுக்குத் தெரியாமல் இருப்பதே நமக்குப் பெரிய சாதகமான நிலையாகும். தொண்டியிலிருந்து சோழப்படை புறப்பட்டு பொன்னமராவதியை வந்தடையும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறதல்லவா?" என்று கேட்கிறான் சிவாச்சாரி.

"இன்னும் மூன்று நாள்களில் வந்துவிடுவார்கள் சிவாச்சாரியாரே! அதுவரை…" என்று இழுக்கிறார் படைத்தலைவர்.

"மூன்று நாட்கள் வரை பாண்டியன் படையைப் பொன்னமராவதியில் வைத்திருப்பான் என்று நம்புவோம் தண்டநாயகரே! எப்படியிருப்பினும், தொண்டியிலிருந்து நமது படைகள் வந்து சேரும்வரை பாண்டியனை இங்கு இருத்திவைப்பது எமது கடமை! புரிகிறதா உமக்கு?" என்று இராஜராஜர் கேட்டதும் குலை நடுங்குகிறது படைத்தலைவருக்கு.

அதன் உட்பொருள் அவருக்குத் தெரியாமல் இல்லை. சிவாச்சாரி அமரபுஜங்கனைச் சிறைப்பிடிக்கத் தீட்டிக்கொடுத்த போர்த்திட்டம் நிறைவேறவேண்டும் என்பது இராஜராஜரின் திட்டவட்டமான உத்தரவு. தொண்டியிலிருக்கும் படைகள் பாண்டியப்படையின் பின்பக்கத்தைத் தாக்கவேண்டும் என்பது திட்டம். அப்படை வந்துசேராவிட்டால் அப்படையின் இடத்திற்குத் தாங்கள் செல்லவேண்டும் என்பது மாற்றுத் திட்டம். கடைசி வீரன் வரை பாண்டியப் படைகளோடு போராடவேண்டும் என்பதுதான் அத்திட்டத்தின் முக்கிய நிபந்தனை.

இந்தப் போருக்கு இராஜேந்திரனின் மூத்த மகன் இராஜாதிராஜனையும் அழைத்து வந்திருக்கிறார், இராஜராஜர். அவன் பங்குபெறும் முதல் கன்னிப்போர் அது.

"ஏன் தண்டநாயகரே அமைதியாகிவிட்டீர்?" என்று மிகவும் மெதுவாக, ஊடுருவும் குரலில் கேட்கிறார் இராஜராஜர். "போர் என்று வந்தால் யாமும், சோழப்படையின் சாதாரண வீரனும் ஒன்றுதான். யாம் யாவரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. அப்படிப் பிரித்துப் பார்த்தால், அடுத்த கணமே யாம் வீரர்களின் நம்பிக்கையை இழந்துவிடுவோம்." பிறகு தன்னருகில் நிற்கும் இராஜாதிராஜனிடம், "இதுதான் போர்வீரர்களின் தலையாய கோட்பாடாகும், இராஜாதிராஜா!" என்கிறார்.

இராஜாதிராஜன் தன்னுடைய அறிவுரையைத் தன் இதயத்தில் எழுதி வைத்துக்கொள்வான், அதன்படி தான் தலைமைவகிக்கும் ஒவ்வொரு போரிலும் முன்னிருந்து நடத்திச்செல்வான், அப்படியே தனது இறுதி மூச்சையும் ஒரு போரிலேயே விட்டுவிடுவான் என்று இராஜராஜர் அறிய வாய்ப்பில்லைதான்!

"சக்கரவர்த்தி அவர்களே!" இராஜாதிராஜன் தனது பாட்டனாரை அவரது பட்டத்தைச் சொல்லி அழைக்கிறான். "நான் ஒரு திட்டத்தைச் சொல்லலாமா?"

தலையை அசைக்கிறார் இராஜராஜர்.

"நமது குறிக்கோள் பாண்டியப்படைகளை பொன்னமராவதியில் நிறுத்தி வைப்பதுதான். எனவே, துணிச்சலான படைத்திறனுடன், குறைவான வீரர்களுடன் அதை நிறைவேற்றலாம். அது எதிரிகளைக் குழப்பி, அவர்களின் கட்டுப்பாட்டைக் குலைக்கும். நாமும் அதிக அளவு வீரர்களை இழக்கவேண்டாம்!" இராஜாதிராஜன் தன் போர்த்திட்டத்தை விவரிக்கத் துவங்குகிறான். பதினேழு வயதே ஆன அவன், போர் நடத்தும் முறைகளை அணுகும் வழி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

இராஜராஜர் தண்டநாயகரிடமும், சிவாச்சாரியிடமும் கருத்துக்களைக் கேட்கிறார்.

"சக்கரவர்த்தி அவர்களே! திட்டம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அது நாம் இருக்கும் இடத்தை நமது எதிரிகளுக்குக் காட்டிக்கொடுத்து விடாதா?" என்று இழுக்கிறார்.

"எதிரிகளைக் குழப்புவதும், அவர்களை நாம் விரும்பும் இடத்திற்கு வரவழைத்து முறியடிப்பதும் ஒரு சிறந்த போர்முறைதான்!" என்ற சிவாச்சாரி, "இளவரசரின் திட்டத்திற்குச் சிறிது மெருகேற்ற வேண்டும். அவர் இந்தத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினால், அது அவருக்கு ஒரு சிறந்த வாய்ப்பையும் அளிக்கும்!" என்று முடிக்கிறான்.

அவனது பதில் அனைவரையும் பேச்சிழக்க வைக்கிறது. சிவாச்சாரி என்ன சொல்கிறான்? இளவரசன் இராஜாதிராஜனின் உயிரைப் பணயம் வைக்க முயல்கிறானா? இராஜராஜர் முன்பு கூறியதுபோல மதுவுண்ட பித்தனாகப் பிதற்றுகிறானே!

"சக்கரவர்த்தி அவர்களே! இந்தப் பயங்கரமான திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இளவரசரின் உயிரைப் பந்தாட சிவாச்சாரியார் விரும்புவதுபோலத் தெரிகிறது! நான் தாக்குதலை முன்னின்று நடத்துகிறேன். இளவரசர் தங்களுடனேயே இருக்கட்டும்!" என்று தண்டநாயகர் கெஞ்சுகிறார்.

"தண்டநாயகரே! இராஜாதிராஜனையே கேட்டுவிடுவோமே!" என்ற இராஜராஜர், தன் பேரன் பக்கம் திரும்பி வினவுகிறார், "யாம் உனது முடிவை அறிய விரும்புகிறோம்!"

"சக்கரவர்த்தி அவர்களே! தாங்கள்தான் சிறிது நேரம் முன்னர், அனைத்து வீரர்களையும் என்னைப்போல நடத்தவேண்டும் என்று அறிவுரை கூறினீர்கள்! நான் கலந்துகொள்ள இயலாத போர்த்திட்டத்தை நான் தீட்டிக்கொடுத்தால் நான் ஒரு ஏமாற்றுக்காரன் ஆகமாட்டேனா? இந்தத் தாக்குதலை நானே முன்னின்று நடத்தத் தாங்கள் எனக்கு அருள்கூர்ந்து அனுமதியளிக்க வேண்டுகிறேன்!" இராஜாதிராஜன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வீரம்பொங்கப் பதிலிருக்கிறான்.

இராஜராஜரின் முகத்தில் பெருமை கலந்த புன்னகை மலர்கிறது. "மிக்க நன்று! எந்த ஒரு படைத்தலைவனுக்கு அருகிலும் ஒரு திறமை வாய்ந்த ஆலோசகர் இருப்பது அவசியம். யாம் சிவாச்சாரியை உன்னுடன் ஆலோசகராக அனுப்புகிறோம்." அவர் சிவாச்சாரியை உற்று நோக்குகிறார்.

அந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்களைக் காண்கிறான், சிவாச்சாரி. "யாம் எமது பொக்கிஷத்தையே உன்னிடம் ஒப்படைக்கிறோம். அதைப் பாதுகாத்துப் பத்திரமாகத் திரும்பக் கொணர்வாயாக!" என்று சொல்லாமல் சொல்வதுபோல இருக்கிறது அவர் பார்வை. வெகுநாள்களுக்குப் பிறகு சிவாச்சாரியின் முகத்தில் உணர்ச்சிகள் பெருக்கெடுக்கின்றன. கண்களில் நீர்க்கசிவு தென்படுகிறது.

"சக்கரவர்த்தி அவர்களே! என் உயிரைக் கொடுத்தாவது இளவரசரைப் பாதுகாப்பேன்! இது என் நெஞ்சில் என்றென்றும் ஆனந்ததாண்டவம் ஆடும் அம்பலவாணன் மீது ஆணை!" அவனது குரல் இலேசாகக் கரகரக்கிறது.

அதன் பிறகு, இராஜாதிராஜனின் போர்த்திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்று விவரிக்க ஆரம்பிக்கிறான்.

"இன்று காலை நடந்த தாக்குதலின் விளைவாகக் குழம்பி இருக்கும் பாண்டிய வீரர்கள் நாளை எதுவும் செய்யமாட்டார்கள். ஒற்றர்களை வெள்ளாற்றின் மறுபக்கம் செய்தி சேகரிக்க அனுப்புவார்கள். அவர்களின் ஒருவர்கூட உயிருடன் திரும்பக் கூடாது என்று நமது தண்டநாயகர் அங்கு இருக்கும் நமது ஒற்றர் படைக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, நாகைப்பட்டினத்தில் நமது கடற்படைகள் இருபதாயிரம் வீரர்களைக் கரையிறக்கி இருப்பதாகவும், அவர்கள் தஞ்சைக்கு விரைவதாகவும், பாண்டிய ஒற்றர்களுக்குத் தவறான செய்தி நேற்று அனுப்பப்பட்டிருக்கிறது. ஆகவே, தஞ்சை பலப்படுத்தப்பட்டிருப்பது போன்ற உணர்வு பாண்டியருக்கு ஏற்படுத்தப்படும்.

"மழை ஒலி நமது யானைகள், குதிரைகள், அணிவகுத்து நடந்தபோது எழுந்த ஒலிகளை அடக்கிவிட்டது. மழை நின்றுவிட்டபடியால் இனிமேல் அந்த உயர்நிலை நமக்குக் கிடைக்காது. பொன்னமராவதிக்கு வடக்கிலும், கிழக்கிலும் ஒரு காத தூரத்திலும், சிறிய குன்றுகள் உள்ளன. நானும் இளவரசரும் ஞாயிறு சாய்ந்தவுடன், ஐம்பது யானைகள், ஐநூறு குதிரைகள், ஐநூறு வில்லாளர்கள், ஐயாயிரம் வீரர்களுடன் மெதுவாகச் சென்று, இந்தக் குன்றுகளில் மறைவோம். பகலில் மெதுவாக முப்பது ஏவுகணைக் கருவிகளை அந்தக் குன்றுகளின் மறுபுறத்தில் கிட்டத்தட்ட நூறு அடிஉயரம் வரை ஏற்றிப் பொறுத்திவைப்போம். அதனால் ஏவுகணைகளின் அளவெல்லை ஒருகாதத்திற்கும் மேலாகவே அதிகரித்துவிடும்.

"கதிரவன் மேற்குத் திசையில் மறைந்தவுடன் தாக்குதலை ஆரம்பிப்போம். மழை இல்லாததால் ஏவுகணைத் தொட்டியை, எண்ணெய் ஊறிய கந்தலால் சுற்றிய கற்களால் நிரப்பி வைப்போம். முதலில் வில்லாளர்கள் பாண்டியப் படைகள்மீது சரமாரியாக அம்புகளை எய்வார்கள். இதனால் குழப்பமுற்ற பாண்டிய வீரர்கள் அவர்களை நோக்கி ஓடி வருவார்கள்.

"அச்சமயம் ஏவுகணைகளில் நிரப்பப்பட்ட கற்களுக்குத் தீயிட்டு, கற்கள் அவர்கள் மீது எறியப்படும். அவர்கள் கூடாரங்கள் தீப்பற்றி எரியும். அவர்களது குதிரைகளும், யானைகளும் தட்டுத் தடுமாறி ஓடி அவர்களுக்கு நிறையச் சேதத்தை விளைவிக்கும். ஒருபுறம் துவங்கிய தாக்குதல் முடிந்தவுடன் மறுபுறம் தாக்குதல் ஆரம்பிக்கும். இத்தாக்குதலின் நோக்கமே நம் சோழவீரர்கள் அவர்களை கிழக்கிலிருந்தும், வடக்கிலிருந்தும் பெரும்படையுடன் தாக்குகிறோம் என்ற அச்சத்தை விளைவிப்பதுதான்."

சுற்றி உள்ளவர்களின் மனத்திரையில் அந்தத் தாக்குதல் படமாக விரிகிறது.

"காலை வரை இத்தாக்குதல் நீடிக்கும். எதிரிகள் காலையில் என்ன ஆயிற்று என்று தெரிந்துகொண்டு அணிவகுக்கும் பொழுது நாங்கள் ஐந்து கல் கிழக்கில் இருக்கும் பெரிய குன்றுகளின் பின்னால் மறைந்துவிடுவோம். ஆக, பாண்டியப் படைகள் வடக்கேயும், கிழக்கேயும் செல்லாதபடி மடக்கிவிடுவோம். அவர்கள் மேற்குப்பக்கம் வந்தால் நீங்கள் தாக்குதல் நடத்துங்கள். நிலைமையைத் தெரிந்துகொண்டு நாங்கள் மேலும் அடுத்த இரவு தாக்குதலைத் தொடங்குவோம்.

"தாக்குதல் நடக்கும் இந்நேரத்தில் தெற்கே சென்றால் பொன்னமராவதி விழுந்துவிடும் என்று பாண்டியர்கள் தயங்குவார்கள். இந்தத் தயக்கம் தீர்ந்து அவர்கள் முடிவெடுப்பதற்குள் நமது படைகள் தொண்டியிலிருந்து பொன்னமராவதி வந்துவிடும்.

"அவர்கள் வந்தவுடன் முழுமூச்சுடன் பொன்னமராவதியைத் தாக்குவோம். அச்சமயம் நமது படைகள் எண்ணிக்கையும், எதிரிப்படை எண்ணிக்கையும் சமமாகிவிடும். நமது படைகள் உற்சாகத்துடனும், எதிரிப்படைகள் ஒழுங்கு குலைந்த நிலையிலும் இருப்பர். பொன்னமராவதி விழுந்துவிடும். அமரபுஜங்கன் ஒன்று, சிறைப்படுவான் அல்லது மரிப்பான்" என்று தாக்குதல் திட்டத்தை விளக்குகிறான் சிவாச்சாரி.

இராஜராஜர் முகத்தில் சிறிது இருள் படர்கிறது. "இதுவரை யாம் இருட்டில் எதிரியைத் தாக்கியதில்லை, தாக்கவும் போவதில்லை. அதை நீரும், இராஜாதிராஜனும் முதலும் கடைசியுமாகச் செய்வீராக! சோழமாதா உங்களுக்கு வெற்றியை அளிக்கட்டும். சிறிது நேரம் எம்மைத் தனியாக விடுவீராக!" என்று அங்கிருந்து நகர்ந்துசெல்கிறார்.

* * *

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com