மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி முடித்து செல்லும் வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது.
புனேவில் உள்ள கடக்வாஸ்லாவில் அமைந்திருக்கும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் இந்த கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவானே சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர், பயிற்சி முடித்து செல்லும் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
1954ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட புனே தேசிய பாதுகாப்பு அகாடமி, உலகிலேயே முப்படை வீரர்களும் பயிற்சி பெறும் முதல் பயிற்சி மையம் ஆகும். ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இந்த பயிற்சி மையத்தில் ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படையினருக்கான கல்வி மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 28 வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இங்கு படித்து பட்டம் பெற்று செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.