சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வருகை தரும் பக்தர்களின் வருகை அதிகரித்துவரும் நிலையில், ஶ்ரீஐயப்பன் கோயில் பிரசாதமான அப்பம் மற்றும் அரவணை பிரசாத விற்பனை 27 கோடி ரூபாயை தாண்டியிருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு வாரியம் தெரிவித்ததாவது:
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டு, தரிசனத்திற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. தற்போது தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களின் வருகை சபரிமலையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக அப்பம், அரவணை உள்ளிட்ட பிரசாதங்களின் விற்பனையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. மண்டல பூஜைக்காக நடை திறந்தது முதல், தற்போது வரை அப்பம், அரவணை விற்பனை மூலம் 27 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது.
–இவ்வாறு திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரிய செயல்அலுவலர் கிருஷ்ணகுமார் வாரியார் கூறியுள்ளார். பக்தர்கள் வருகைக்கு ஏற்ப அரவணை, அப்பம் தயாரிக்கும் பணிகளும் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.