சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை விடுதியில் கடந்த மாத இறுதியில் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட 400-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், ஒரு சில பெண்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களின் நிலை என்ன என்பது குறித்து விடுதி நிர்வாகம் முறையாகப் பதில் அளிக்காததால், அந்நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, அந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்களிடமும் வீடியோ காலில் பேசியதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாகச் யுடியூபர் சாட்டை துரைமுருகன் தனது ட்விட்டரில் வதந்தி பரப்பும் வகையிலான கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சாட்டை துரைமுருகன் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.