மஹாராஷ்டிராவில் பல்பொருள் அங்காடிகளில் ஒயின் விற்பனை செய்ய அம்மாநில அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து, வருகிற 14-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் உள்ள பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகள் ஆகியவற்றில் பழரசம் மூலம் தயாரிக்கப்படும் ஒயின் விற்பனை செய்ய, அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என அம்மாநில திறன் வளர்ச்சி துறை அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்ட்ர அரசு தனது முடிவை கைவிட வலியுறுத்தி, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடிதம் எழுதி இருந்தார். அரசு தனது முடிவை திரும்ப பெறாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் எச்சரித்திருந்தார். எனினும், அரசு தனது முடிவை கைவிடாததால், வரும் 14-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை, தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் மேற்கொள்ள இருப்பதாக அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.