பிரபல தமிழ் சேனல் ஒன்றில் சர்ச்சைக்குரிய குழந்தைகள் நிகழ்ச்சி நடத்தியதாக அந்த சேனலுக்கு, மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அண்மையில் தனியார் தமிழ் சேனலில், குழந்தைகள் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில், புலிகேசி மன்னர் மற்றும் மங்குனி அமைச்சர் வேடங்களில் இரு குழந்தைகள் நடித்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் கருப்பு பண நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட நிகழ்வுகளை விமர்சித்து வசனங்களை அந்த குழந்தைகள்பேசி நடிக்க, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து பிரதமர் மோடியை மறைமுகமாக சாடியதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இதுகுறித்து மத்திய அமைச்சர் முருகனிடம் புகார் அளித்தார். இதையடுத்து அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் தமிழ் சேனலுக்கு, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீசில் குறிப்பிட்டதாவது: ஜனவரி 15ம் தேதி அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சி குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இல்லையேல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்;
–இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.