தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் இல்லாமல் யாருக்கும் ஒரு நாள் கூட ஓடாது. அந்த அளவுக்கு ஸ்மார்ட்போன் நம் ரத்தத்தில் கலந்தது போல் ஆகிவிட்டது. உலகில் நடக்கும் அனைத்தையும் கணநேரத்தில் நமக்கு தெரியப்படுத்தும் சாதனமாக ஸ்மார்ட்போன் உள்ளது. இதை எல்லா இடங்களிலும் மக்கள் தற்போது பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். கடந்த சில ஆண்டுகளாக இதன் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது என்பதைத் தாண்டி, இதை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் வளர்ச்சி குறைந்துவிட்டது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் சந்தையில் 700க்கும் அதிகமான பிராண்டுகள் இருந்ததாகத் தரவுகள் கூறுகிறது. இது கடந்த 2022 ஆம் ஆண்டில் 18 சதவீதம் வரை குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் நுகர்வோரின் தேவை குறைந்ததாலும், அதிகப்படியான உற்பத்தி ஸ்மார்ட்போன் சந்தையை நிச்சயமாற்றதாக மாற்றியதாலும் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி குறைந்துள்ளது.
இத்தகைய பிராண்டுகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் அதிக வளர்ச்சியாகும். உள்ளூர் பிராண்டுகளால் உற்பத்தி செலவை கட்டுப்படுத்த முடியாமல் போவதும் இதன் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது. மேலும் சில நல்ல பிராண்டுகளின் தரம், புதிய கண்டுபிடிப்புகள், கடுமையான போட்டி போன்றவற்றால் சிறிய பிராண்டுகள் இந்த சந்தையில் இருந்து விலகுவதற்கு காரணமாக அமைந்தது.
குறிப்பாக விவோ, ஒப்போ, ஜியாமி போன்ற சீன பிராண்டுகளின் எதிர்பாராத வளர்ச்சி சிறிய பிராண்டுகளை தரைமட்டத்திற்கு தள்ளியது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் இவர்களின் வீழ்ச்சி மேலும் அதிகரித்ததால், கிட்டத்தட்ட 450க்கும் அதிகமான ஸ்மார்ட்போன் பிராண்டுகள் சந்தையை விட்டு முற்றிலுமாக செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால் இதுபோன்ற எல்லா சூழ்நிலைகளையும் தாக்குப்பிடித்து பெரிய பிராண்டுகள் அவர்களின் தரம் மற்றும் பிரபலத்தன்மை காரணமாக கணிசமான லாபம் பார்த்தனர்.
ஆனால் இன்றளவும் சிறிய ஸ்மார்ட்ஃபோன் பிராண்டுகள் அவர்களின் நிலையை தக்கவைக்க போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.