கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் ராக்கெட் தொழில்நுட்பம் தற்போது அதிநவீனமாகிவிட்டது. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று சொந்தமாக ராக்கெட் மற்றும் 3D தொழில்நுட்பத்தால் அச்சிடப்பட்ட ராக்கெட் என்ஜினை உருவாக்கி வருகின்றனர்.
இந்நிறுவனம் சொந்தமாக அக்னிப்பான் என்ற ராக்கெட்டை உருவாக்கி வருகின்றனர். இந்த ராக்கெட்டைப் பயன்படுத்தி சிறிய அளவிலான செயற்கைக்கோளைவிண்ணில் செலுத்த முடியும். அதாவது 100 கிலோ எடையுள்ள பேலோடுகளை பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.
இந்த ராக்கெட் அக்னி லைட் எனப்படும் செமி க்ரையோஜனிக் எஞ்சின் மூலமாக இயக்கப்படும். இது முழுக்க முழுக்க திரவ மண்ணெண்ணெய் மற்றும் திரவ ஆக்சிஜனால் இயக்கப்படுகிறது. இதற்கான செயல்முறையை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்நிறுவனம், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் விண்வெளி மைய நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
இந்த ராக்கெட்டை இயக்குவதற்கான ஏவுதளம் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளம். இதை கடந்த ஆண்டு இஸ்ரோ தலைவர் சோம்நாத் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்னிகுல் என்ற இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், இதுவரை அவர்களின் நிறுவனத்திற்காக 26.7 மில்லியன் டாலர்களை ஒரு கிரவுட் ஃபண்டிங் தளம் மூலமாக நிதியாக திரட்டி உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் மொத்தமாக 40 மில்லியன் டாலர்கள் வரை இந்நிறுவனத்திற்கு நிதி சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதனால் எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு ஒரு Space X நிறுவனம் போல, இந்தியாவுக்கு இந்த அக்னிகுல் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.