

பேருந்தே ரயிலாக...!:
இந்தியாவில், பொதுபோக்குவரத்திற்கு பேருந்து, ரயில், மெட்ரோ ஆகியவை பயன்பாட்டில் உள்ளது. ஆனால் ஜப்பானில், பேருந்தையே தேவையான இடங்களில் ரயிலாகவும் பயன்படுத்துகின்றனர்.
இந்த பேருந்துகளில் இரட்டை சக்கரங்கள் உள்ளன. சாலைகளில் செல்லும் போது வழக்கமான ரப்பர் சக்கரத்தில் பேருந்து இயங்குகின்றன. தண்டவாளம் உள்ள பகுதிகளில், வாகனத்தின் உள்ளிருந்து எஃகு சக்கரங்கள் இறங்கி அதன் மூலம் ரயில் போல் இயங்குகிறது. வெறும் 15 வினாடிகளில் பேருந்திலிருந்து. ரயிலாக மாறி விடுகிறது! இந்த வாகனத்தில் 21 பேர் வரை பயணிக்க முடியும்.
இந்த வாகனம் சாலையில் மணிக்கு 100 கி.மீ வேகத்திலும், தண்டவாளத்தில் மணிக்கு 60 கி.மீ வேகத்திலும் பயணிக்கிறது. ஜப்பானின் டோகுஷிமா மாகாணத்தில் உள்ள கையோ நகரில் 2021 ஆம் ஆண்டில் இந்த வாகனம் பொதுமக்களுக்கு அறிமுகமானது.
உலகின் முதல் தானியங்கிப் படகு சவாரி:
உலகில் முதன்முறையாகத் தானியங்கித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பயணிகள் படகை இயக்கிவுள்ளது ஜப்பான். ஒலிம்பியா டிரிம் செட்டோ நிறுவனம் ஜப்பானில் உள்ள ஒகாயாமா, ஷோடோஷிமா தீவுக்கு இடையே அப்படகை 2025 டிசம்பர் 11 முதல் இயக்கி வருகிறது.
மேலும், தானியங்கித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அந்நாட்டின் அரசாங்கத்தின் உத்தரவுக்குக் காத்திருப்பதாகவும் பல நிறுவனங்கள் கூறியுள்ளது. இந்த முயற்சி ஜப்பானில் மோசமடைந்துவரும் ஊழியர் பற்றாக்குறையைச் சமாளிக்க ஓர் தீர்வாக இருக்கும் என்றும் நகரத்தைவிட்டுத் தொலைதூர தீவுகளில் வசிக்கும் மக்களின் போக்குவரத்தை இது உறுதி செய்யும் என்றும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கூறியுள்ளார்.
நிப்பான் அறக்கட்டளை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பிற நிறுவனங்களை உள்ளடக்கிய தானியங்கிப் படகுகளை வணிகமயமாக்குவதற்கான திட்டத்தின் ஒரு பகுதி இந்தச் சோதனையோட்டம் எனக் கூறப்படுகிறது. இந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில், கடல் சார்ந்த தளவாடங்களை நிலைப்படுத்தவும் விபத்துகளைக் குறைக்கவும் இந்தத் தானியங்கி முறை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'சின்கன்சென்' புல்லட் ரயில்:
புகழ் பெற்ற ஜப்பான் ரயில் போக்குவரத்து துறை ஜப்பானில் அதிவேக புல்லட் ரயில்களை இயக்குகிறது. அவை அந்நாட்டு மொழியில், 'சின்கன்சென்' என்று அழைக்கப்படுகின்றன. நேரம் தவறாமை, வேகம், சுகமான பயண அனுபவம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு புகழ் பெற்ற இந்த ரயில்கள், அதிகபட்சமாக மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் 1964 முதல் ஜப்பானில் பயன்பாட்டில் இருக்கின்றன.
உலகின் அதிவேக ரயில்:
ஜப்பானில் ஓடும் எஸ்சி மாக்லெவ் ரயில் தான் உலகிலேயே அதிவேக ரயில். இந்த ரயிலின் வேகம் மணிக்கு 603 கிலோமீட்டர். மேக்லெவ்' (Maglev) என்று அழைக்கப்படும் இந்த ரயில்கள், போக்குவரத்துத் துறையில் ஒரு மிகப்பெரிய புரட்சியையே செய்து வருகின்றன.
Maglev ரயில்களின் தொழில்நுட்பம் மற்ற ரயில்களில் இருந்து வேறுபட்டது. இந்த அதிவேக ரயில் மேக்னடிக் லெவிடேஷன் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. காந்த விசையை பயன்படுத்தி தண்டவாளத்தில் தொடாமல் காற்றில் மிதந்தபடி சீறிப்பாயும் மேக்லெவ் ரயில்கள், நவீன போக்குவரத்து உலகின் அதிசயம். மேக்னடிக் லீவியேஷன் (Magnetic Levitation) என்பதன் சுருக்கமே மேக்லெவ் (Maglev) ஆகும்.
இந்த ரயிலில் பயணம் செய்தால், ஒரு சொட்டு அதிர்வு கூட இருக்காது. சத்தம் அறவே இருக்காது. சுற்றுச்சூழலுக்கு மிகவும் நல்லது. மேலும், இந்த ரயிலின் வடிவமைப்பு தண்டவாளத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு செல்வது போல இருப்பதால், தடம் புரளும் விபத்துகளுக்கு வாய்ப்பே இல்லை.