பூமியைப் போலவே மற்றொரு கிரகமா? அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்.

பூமியைப் போலவே மற்றொரு கிரகமா? அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்.

ல காலமாகவே பூமியின் பண்புகளைக் கொண்ட கிரகத்தைக் கண்டறியும் முயற்சியானது அதிதீவிரமாக நடந்து வருகிறது. இந்த சூழலில் ஆய்வாளர்கள், பூமியைப் போலவே இருக்கும் புதிய கிரகம் பற்றிய சில தகவல்களைத் தெரிவித்துள்ளனர். 

இந்த பிரபஞ்சத்திலேயே பூமி என்ற கிரகத்தில் மட்டும் தான் உயிரினங்கள் இருக்கும் என்ற கூற்றை ஆய்வாளர்கள் ஏற்பதில்லை. பூமியைப் போலவே இருக்கும் ஏதோ ஒரு கிரகத்தில் நிச்சயம் உயிரினங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதே அவர்களின் கருத்தாகும். பூமியைப் போலவே வேறு ஏதாவது கிரகத்தில் உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளதா என்பது குறித்து நாசா தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளது. 

சூரியக் குடும்பம், கேலக்ஸி என்பதையும் தாண்டி பூமியின் தன்மைகொண்ட கிரகத்தைத் தேடும் முயற்சியானது சென்றுவிட்டது. மனிதர்களின் அதிக பேராசையால் பூமியின் நிலை மோசமாகிக்கொண்டே வருகிறது. இது தொடர்ந்துகொண்டே இருந்தால், இன்னும் சில நூறு ஆண்டுகளில் பூமியானது மனிதர்கள் உயிர் வாழத் தகுதியற்ற கிரகமாக மாறிவிடும் என்கிறார்கள். எனவே, மக்கள் உயிர் வாழ்வதற்கு இன்னொரு கிரகத்தைக் கட்டாயம் கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே, பூமியிலிருந்து ரேடியோ சிக்னல்களை, பல கோடி தொலைவில் இருக்கும் கிரகங்களுக்கும் அனுப்பி வருகிறார்கள் ஆய்வாளர்கள். ரேடியோ சிக்னல் அனுப்பப்படும் பகுதிகளில் ஏதாவது கிரகங்கள் இருந்தால் பதில் சிக்னல் கிடைக்கும் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கை. 

இந்த பூமி 2.0 தேடும் பணி மும்முரமாக நடந்து வரும் நிலையில், தொலைதூர கிரகத்திலிருந்து கிடைத்த எலக்ட்ரோ மேக்னடிக் சிக்னல், ஆய்வாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சிக்னலானது பூமியிலிருந்து 12 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கிரகத்திலிருந்து கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். YZ Ceti B என்று அழைக்கப்படும் இந்த கிரகத்தை அடைய, ஒளியின் வேகத்தில் சென்றால் கூட 12 ஆண்டுகள் ஆகுமாம். ஆனால் ஒப்பீட்டளவில் இது பூமிக்கு அருகில் தான் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

பூமிக்கும் இந்த கிரகத்திற்கும் உள்ள தொலைவு அதிகமாக இருந்தாலும், அந்த கிரகத்திலிருந்து கிடைக்கும் சிக்னல்கள் மிகவும் வலிமையாக உள்ளது. இதுகுறித்து முதன்மை ஆய்வாளரான ஜாக்கி வில்லட்சென் கூறுகையில்,"இதுவரை யாரும் கண்டுபிடிக்காத ஒன்றை நாங்கள் கண்டு பிடித்திருக்கிறோம். தொடக்கத்தில் எங்களுக்குக் கிடைத்த சிக்னலை நாங்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ஒரே மாதிரியான சிக்னல் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருப்பது, ஆச்சரியமாக இருக்கிறது" என்றார். 

புதிய கிரகத்திலிருந்து கிடைக்கும் சிக்னலை வைத்துப் பார்க்கும்போது, பூமியைச் சுற்றி இருக்கும் காந்தப் புலத்தை போலவே புதிய கிரகத்திலும் இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர். இந்த காந்தப்புலம் தான் சூரியனிலிருந்து வரும் ஆபத்துக்களை தடுத்து நிறுத்துகிறது. எனவே YZ Ceti B கிரகத்திலிருந்தும் காந்தப்புல சிக்னல் கிடைப்பதால், பூமியைப் போலவே அந்த கிரகத்திலும் உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 

பூமிக்கு இணையான அளவிலேயே பூமியைப் போல மற்றொரு கிரகத்தை ஆய்வாளர்கள் கண்டறிய முயன்று வருகிறார்கள். அவர்களின் தேடுதலுக்கு YZ Ceti B கிரகமானது பதிலாக இருக்குமா என்பது இன்னும் சில காலங்களில் தெரிந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com