இனி பாலையே எரிபொருளாக மாற்றி காருக்குப் பயன்படுத்தலாம் என அமெரிக்காவை சேர்ந்த பால் உற்பத்தியாளர் சங்கம் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளது.
உலகெங்கிலுமுள்ள மக்களின் மிகவும் அத்தியாவசிய மான ஒன்று பால். இதனால்தான் நம்முடைய அரசாங்கத்தில் கூட பால்வளத்துறை என்று தனியாகவே ஒரு துறை இருக்கிறது. ஆனால் தினசரி ஊட்டச் சத்துக்காக நாம் பருகும் பாலை வாகனங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தினால் என்ன ஆகும் என யோசித்ததுண்டா?
உலகிலுள்ள பெரும்பாலான புதிய கண்டுபிடிப்புகளுக்கு அஸ்திவாரமாக இருந்தவர்கள் அமெரிக்கர்கள். இவர்களுக்கு இதுபோன்ற புதிய யோசனைகள் வரவில்லை என்றால்தான் ஆச்சரியம். அமெரிக்காவைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் சங்கம், கனடா நாட்டைச் சேர்ந்த Dairy Distiller என்ற நிறுவனத்துடன் இணைந்து பாலில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த கனடா நிறுவனம் பாலில் இருந்து ஓட்காவை உற்பத்தி செய்வதில் பிரபலமாக இருந்து வருகிறது. பாலில் உள்ள சத்துக்களை பிரித்தெடுத்து வடிகட்டிய பின்னர் கிடைக்கக்கூடிய லாக்டோஸைக் கொண்டு, இந்த நிறுவனம் ஓட்காவைத் தயாரிக்கிறது. பிரித்தெடுக்கப்பட்ட லாக்டோஸில் ஈஸ்டை சேர்ப்பது மூலம் எத்தனாலையும் உருவாக்கலாம் என்று டெய்ரி டிஸ்டில்லர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காகவே அமெரிக்காவைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர் சங்கத்துடன் கூட்டணி சேர்ந்து, எரிபொருள் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக சுமார் 338 கோடி செலவில் எத்தனால் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது அந்நிறுவனம். இந்தியா உட்பட உலகில் பல்வேறு நாடுகள், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு சிறந்த மாற்றாக எலக்ட்ரிக் வாகனம் தான் இருக்க முடியும் என்றாலும், அந்த நிலையை முழுமையாக எட்டும் வரை பெட்ரோல் டீசலில் பயன்பாட்டை குறைக்கும் முயற்சியாக இந்த ஆராய்ச்சி நடந்து வருகிறது.
இந்த எரிபொருளைப் பயன்படுத்தி இயங்கக்கூடிய வாகனங்களை ஃபிளக்ஸ் ஃப்யூயல் வாகனம் என்று அழைப்பார்கள். ஏனென்றால், பிரித்தெடுக்கப்படும் எத்தனாலை நேரடியாக வாகனத்தில் பயன்படுத்த முடியாது. ஏற்கனவே இருக்கும் பெட்ரோல் அல்லது டீசலில் எத்தனாலைக் கலந்துதான் பயன்படுத்த முடியும்.
இருப்பினும் டெய்ரி டிஸ்டிலர் நிறுவனம் சொல்வது போல் பாலிலிருந்து வாகனங்களுக்கான எரிபொருள் தயாரிப்பது தேவையற்ற ஒன்று. பால் மூலம் எத்தனாலை உருவாக்கும்போது அதிகப்படியான கார்பன் உருவாகிறதாம். இது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இருப்பினும் இதை ஓர் புதிய கண்டுபிடிப்பாக அந்நிறுவனம் விளம்பரப்படுத்தி வருகிறது.