எதிர்கால AI தொழில்நுட்பம் பற்றி பில்கேட்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?

எதிர்கால AI தொழில்நுட்பம் பற்றி பில்கேட்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?

திர்கால AI தொழில்நுட்பம் பற்றி, உலகின் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். 

21ம் நூற்றாண்டில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் தான் உலகில் மிகப்பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அதுவும் ChatGPT-ன் வருகைக்குப் பிறகுதான் மக்களும் தொழில்நுட்ப நிறுவனங்களும் இதில் அதிக ஆர்வம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றனர். இது பேசுபொருளாக மாறியதிலிருந்தே மின்னல் வேகத்தில் பல மேம்படுத்தல்களை சந்தித்து வருகிறது. நாம் நினைத்துப் பார்க்க முடியாத வகையில், பல வேலைகளையும் நொடிப்பொழுதில் செய்து அசத்தி வருகிறது. 

இதனால், எங்கே இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பல தளங்களில் மனிதர்களை விட சிறப்பாக செயல்பட்டுவிடுமோ என்ற அச்சமும், விவாதமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுவரை மனிதர்கள் எதிர்கொண்ட கடினமான தேர்வுகளைக் கூட, AI தொழில்நுட்பமானது அசால்ட்டாக கிளியர் செய்வதை பல ஊடக செய்திகள் வாயிலாக நாம் அறிந்திருப்போம். எனவே இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்றல் திறனை எப்படி மேம்படுத்தலாம் என்பது குறித்த ஆராய்ச்சியும் செய்யப்பட்டு வருகிறது. 

இதனிடைய, உலகிலேயே டாப் கோடீஸ்வரர்களில் ஒருவரான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ், செயற்கை நுண்ணறிவு பற்றிய தனது முக்கியக் கருத்தைத் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகளின் கல்வி சார்ந்த விஷயங்களில் ஏஐ தொழில்நுட்பம் எப்படி உதவப்போகிறது என்பது குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், "செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது தற்போது மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. அடுத்த 18 மாதங்களில் இந்த தொழில்நுட்பமானது ஆசிரியர்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும். மாணவர்கள் எப்படி படிக்கிறார்கள்? அவர்களுடைய கற்றல் திறன் எப்படி இருக்கிறது? என்பதை துல்லியமாகக் கண்டறிய இது உதவும். குறிப்பாக கணித பாடங்களில் அது மாணவர்களுக்கு உதவியாய் இருந்து ஆசிரியர்களின் பணியை எளிமையாக்கும்" என அவர் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் கற்றலுக்கு உதவும் இந்த தொழில்நுட்பமானது நிச்சயம் இலவசமாகக் கிடைக்காது என்றும், ஆனால் அந்தத் தொகையானது மாணவர்களின் டியூஷனுக்கு கொடுக்கும் செலவை விட குறைவாகவே இருக்கும் என்றும் கூறியிருந்தார். 

அனைத்து மேடைகளிலும் பில்கேட்ஸ் AI தொழில் நுட்பத்தை வரவேற்றே பேசிவருகிறார். மேலும் இந்தத் தொழில்நுட்பம்தான் நமது அடுத்தகட்ட வளர்ச்சியின் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார். பில்கேட்ஸின் இந்தக் கருத்து, எதிர்காலத்தில் AI துறையின் வளர்ச்சியானது, மக்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும் விதமாகவே இருக்கும் என நம்பிக்கையளிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com