பத்தாண்டுகளுக்கு முன்னால் நீங்கள் ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்? யாரிடம் அதைப்பற்றிப் பேசித் தீர்மானிப்பீர்கள்?
பெரும்பாலானோர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், நண்பர்களிடம் அதைப்பற்றிப் பேசுவார்கள், கடைக்குச் சென்று கடைக்காரரிடமும் பேசுவார்கள், பின்னர் தங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாங்குவார்கள்.
ஆனால், சமூக ஊடகங்கள் புகழ்பெறத் தொடங்கியபிறகு, இந்தப் பழக்கம் முற்றிலும் மாறிப்போயிருக்கிறது. மக்கள் இணையத்துக்குச் சென்று அந்தப் பொருட்களைப்பற்றி யார் என்ன பேசுகிறார்கள் என்றுதான் முதலில் பார்க்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் இல்லை, வாங்குகின்ற பொருளின் மதிப்பைப் பொறுத்துப் பல மணி நேரம் இணையத்தில் செலவிட்டு, பொதுமக்களுடைய கருத்துகளை, விமர்சனங்களை நுணுக்கமாக அலசி, ஆராய்ந்து, அதன்பிறகு தீர்மானிக்கிறவர்களும் உண்டு.
அதனால், முன்பெல்லாம் விளம்பரம் என்றால் செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, அச்சு இதழ்கள் என்று சிந்தித்துக்கொண்டிருந்த நிறுவனங்கள் இப்போது சமூக ஊடகங்களில் தங்களுடைய பொருட்கள், சேவைகளைப்பற்றிய தகவல்கள் விரிவாக வரவேண்டும், குறிப்பாக, மக்கள் அதைப்பற்றிப் பேசும்படி செய்யவேண்டும் என்று முனைகின்றன.
இதில் சிறப்பு என்னவென்றால், பழைய ஊடகங்களைப் பெரிய, நடுத்தர நிறுவனங்கள்மட்டும்தான் பயன்படுத்திக்கொள்ள இயலும். ஆனால், சமூக ஊடகங்கள் எல்லாருக்கும் கிடைக்கின்றன. ஒரு நபர் நிறுவனங்கள், சிறுதொழில்கள்கூடக் குறைந்த செலவில் இவற்றைப் பயன்படுத்தித் தங்களுடைய பொருட்களைச் சரியானவர்களுடைய பார்வைக்குக் கொண்டுசெல்ல இயலும்.