

வாட்ஸ் அப் பண பரிவர்த்தனை சேவையில் கூடுதல் அம்சங்கள் இணைக்கப்பட்டு இருப்பதாக மெட்டா நிறுவனத்தினுடைய நிறுவனர் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக முக்கிய தொலைதொடர்பு சாதனமாக மாறி இருக்கக்கூடிய வாட்ஸ்அப் எளிய முறையில் தகவல்களை பரிமாற உதவுவதால் இந்தியாவிலும் வாட்ஸ் அப் பயனாளிகளினுடைய எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. அதிலும் பல நபர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட எண்களில் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாட்ஸ் அப் செயலி இந்தியாவில் அதிகம் பயன்படும் தொலைத்தொடர்பு செயலியாக உருவெடுத்து இருக்கிறது.
இந்த நிலையில் வாட்ஸ் அப் செயலியை தொலைத்தொடர்பு சாதனமாக மட்டுமல்லாமல் வணிகரீதியாகவும் மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க அந்நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இதற்காக வாட்ஸ் அப் பண பரிவர்த்தனை செயலியில் கூடுதல் அம்சங்கள் இணைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் வாட்ஸ் அப் நிறுவனத்தினுடைய தாய் அமைப்பான மெட்டா நிறுவனத்தினுடைய உரிமையாளர் மார்க் ஸக்கர்பெர்க் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்தது, இந்தியாவில் வாட்ஸ் அப் பயன்பாடு மிக அடிப்படையானதாக மாறி இருக்கிறது. இதனால் தொலைத்தொடர்பில் பல்வேறு புதுமைகளை புகுத்த மெட்டா நிறுவனம் தொடர் முயற்சியை எடுத்து வருகிறது. அதே நேரம் பண பரிவர்த்தனை தொடர்பாக பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் ஏற்ற செயலையாக வாட்ஸ் அப்பை உருவாக்க தற்போது திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். இதற்காக ரேஸர் பே, பேயூ ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
வாட்ஸ் அப் பிஸ்னஸ் மூலம் வாட்ஸ் அப் பரிவர்த்தனை அல்லது பிற யுபிஐ செயலிகளைப் பெற முடியும். இதனால் வேறு யுபிஐ செயலிகளை தொலைபேசிகளில் டவுன்லோட் செய்திருக்க வேண்டிய அவசியம் தேவையில்லை. மேலும் டெபிட் கார்ட், கிரெடிட் கார்டுகளுக்கு பதிலாக வாட்ஸ் அப் பரிவர்த்தனையை பயன்படுத்தி பொருட்கள் வாங்கி பயன்பெறலாம். இது இந்தியாவில் பெரிய அளவில் பயன் தரும்.
இந்தியா தற்போது யுபிஐ பரிவர்த்தனையில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டு வருகிறது. அதை எளிதாக்கும் நோக்கத்தில் வாட்ஸ் அப் பரிவர்த்தனை மேம்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.